பைக்குகளில் பெட்ரோலுக்கு பதில் டீசல் நிரப்பிய பெட்ரோல் நிலையம்: மைசூரில் களேபரம்!
பைக்குகளில் பெட்ரோலுக்கு பதில் டீசல் நிரப்பிய பெட்ரோல் நிலையம்: மைசூரில் களேபரம்!
மைசூரில் உள்ள பெட்ரோல் பங்கில் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்களில் பெட்ரோலுக்கு பதில் டீசல் நிரப்பியதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த வாகனங்கள் பழுதடைந்து ரோட்டில் நின்றதால் உரிமையாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். வாகனத்தை சரி செய்ய உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி பெட்ரோல் நிலையத்தை உரிமையாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட வாகனங்களில் பெரும்பாலானவை இருசக்கர வாகனங்கள்தான். கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் டீசலை நிரப்பிவிட்டனர்.விஷயத்தை கண்டறிந்து கொண்ட வாகன உரிமையாளர்கள் பெட்ரோல் நிலையத்தின் உரிமையாளரிடம் முறையிட்டனர். வாகனத்தை சரிசெய்து தருவதற்கான செலவீனத்தை வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இதற்கு பெட்ரோல் நிலைய உரிமையாளரும் ஒப்புக்கொண்டு விட்டார். ஆனால், வாகன உரிமையாளர்கள் ரூ.2,500 வரை கேட்டதால், அதற்கு பெட்ரோல் நிலைய உரிமையாளர் மறுத்ததுடன், போலீசிடம் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, போலீசார் வந்து சமாதான முயற்சியில் ஈடுபட்டனர். இதனிடையே, பெட்ரோல் பங்கில் கலப்படம் ஏதும் செய்யப்படுகிறதா என்பது குறித்து கண்டறிவதற்காக பெட்ரோல், டீசல் மாதிரிகளை எண்ணெய் நிறுவன அதிகாரிகள் எடுத்துச் சென்றிருக்கின்றனர்.

அதன்பிறகு அந்த பெட்ரோல் நிலையத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவத்தால் அந்த பெட்ரோல் பங்கில் கடந்த திங்கட்கிழமை பெரும் களேபரமாக காட்சியளித்தது.

பெட்ரோலைவிட டீசல் அடர்த்தி மிக்க எரிபொருள். பெட்ரோல் எஞ்சினில் ஸ்பார்க் ப்ளக் மூலமாக எரிபொருள் எரிக்கப்படும். ஆனால், அடர்த்தி மிக்க டீசலை இன்ஜெக்டர்கள் செலுத்துவதிலும் கடினம் ஏற்படுவதுடன், ஸ்பார்க் ப்ளக் மூலமாக எரிக்க இயலாது.

டீசலை எரிப்பதற்கு அதிக அழுத்தம் தேவை. பிஸ்டன் அழுத்தத்தின்போது உண்டாகும் அபரிதமிதமான வெப்ப ஆற்றலை வைத்து டீசல் எரிக்கப்படுகிறது. எனவே, பெட்ரோல் வாகனத்தில் டீசல் நிரப்பினால் எஞ்சின் இயக்கம் தடைபட்டுவிடும்.

வாகனத்திலிருந்து அதிகமாக அடர்த்தியான புகை வெளியேறினாலோ அல்லது எஞ்சின் இயக்த்தில் வித்தியாசம் தெரிந்தாலோ வண்டியை நிறுத்திவிட்டு சோதிப்பது அவசியம். இதுபோன்று வேறு எரிபொருள் நிரப்பியது தெரியவந்தால் பெட்ரோல் டேங்கிலிருக்கும் டீசலை முழுவதுமாக வெளியில் எடுத்துவிட வேண்டும்.

எஞ்சினை ஸ்டார்ட் செய்யாமல் இருப்பது நலம். டீசலை முழுவதுமாக வெளியேற்ற வேண்டும். அருகிலுள்ள சர்வீஸ் மையத்தில் கொடுத்து பாதிப்புகளை ஆராய்ந்து சரி செய்தல் நலம்.


Click it and Unblock the Notifications








