Just In
- 5 min ago அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- 4 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 5 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 5 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கார் பந்தயம்... இந்தியாவின் 'தல' தமிழ்நாடு... !!
மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையில் தமிழகம் இந்தியாவிலேயே முன்னிலை வகிப்பதுடன், ஆரம்ப காலம் தொட்டு மிக முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. அதுகுறித்து தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
தமிழர்களின் வீரத்தையும், பாரம்பரியத்தையும் பரைசாற்றுவதில் ஜல்லிக்கட்டு முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது. நம் ரத்தத்தில் ஊறிப்போன வீரத்தையும், பண்பாட்டு அடையாளத்தையும் ஜல்லிக்கட்டு வெளிப்படுத்துவது போலவே, இப்போது மோட்டார் வாகன பந்தயங்களும் தமிழர்களின் வீரத்தையும், பாரம்பரியத்தையும் பரைசாற்றும் களமாக மாறி இருக்கின்றன.
ஆம். நரேன் கார்த்திகேயன், கருண் சந்தோக், ரஜினி கிருஷ்ணன், ஆதித்யா பட்டேல், மஹாவீர் ரகுநாதன், லீலா கிருஷ்ணன், நரேன் குமார், சரத்குமார் இப்படி இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலக்கு தமிழகம் தந்துள்ள பொக்கிஷங்கள் ஏராளம். இவர்களுக்கான உத்வேகத்தையும், முன்மாதிரியாகவும் வலம் வந்தவர்களில் கரிவர்தன், சுந்தரம், பி.ஐ.சந்தோக் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.
தேசிய அளவில் மட்டுமல்லாது, சர்வதேச அளவில் நடைபெறும் முதல்தர மோட்டார் பந்தயங்களில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வீரர்களில் பலர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்தான். மோட்டார் பந்தய உலகில் தமிழகம் கொடி கட்டி பறப்பதற்கு பல காரணங்கள் உண்டு.
மோட்டார் வாகன பந்தயங்களுக்கு மிக தீவிரமான பயிற்சிகள் அவசியம். அதற்கு சர்வதேச தரத்திலான ரேஸ் டிராக்குகள் தேவை. அதனை நன்கு உணர்ந்து, தமிழகத்தின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறை முன்னோடிகள் மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்கியதே இன்றைக்கு இந்த அளவுக்கு தமிழகத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் செழித்தோங்கி நிற்கிறது.
சென்னை அருகில் உள்ள இருங்காட்டுக் கோட்டை மற்றும் கோவையில் அமைந்திருக்கும் கரி மோட்டார் ஸ்பீடுவே ஆகிய இரண்டு மோட்டார் பந்தய களங்கள்தான் தமிழகத்தில் இவ்வளவு வீரர்கள் உருவாக மிக முக்கிய காரணம்.
'நேராக செல்லும் சாலைகள் திறமையான ஓட்டுனர்களை உருவாக்காது', என்ற புதுமொழிக்கு ஏற்ப, தொழில்நுட்ப ரீதியில் வீரர்களின் கைகளுக்கு மிக சவாலான தடமாகவும் இவை விளங்குகின்றன. இங்கு ஓட்டியவர்கள், உலகின் மிக சவால் நிறைந்த தடங்களை மிக எளிதாக கையாளும் திறமையை பெற்றுவிடுவதும் முக்கிய காரணம்.
மறக்கக்கூடாத மற்றொரு விஷயம், ஆரம்ப காலத்தில் தமிழகத்தில் மோட்டார் பந்தய விளையாட்டுக்கு, பிள்ளையார் சுழி போட்ட இடம் சோழவரம் விமானப் படை தளம் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம்.
தமிழக்தில் இன்று பல சிறந்த மோட்டார் பந்தய வீரர்களை புடம் போட்டு இந்தியாவிற்கு தந்த பெருமை, இந்த மோட்டார் பந்தய களங்கள் மிக முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றன. கடைசியாக கடந்த ஜனவரி மாதம் தேசிய மோட்டார்சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டிக்காக இருங்காட்டுக் கோட்டையில் உள்ள பந்தய களத்திற்கு சென்றிருந்தோம்.
பண்பாடு...
அப்போது, பந்தயத்தில் பங்கேற்றிருந்த வீரர்களின் உத்வேகமும், மோட்டார் பந்தயத்தின் மீது அவர்கள் வைத்திருக்கும் உண்மையான ஆர்வமும், பக்தியும் மெய்சிலிர்க்க வைத்தது. டிராக்கில் மெதுவாக திரும்பும் வீரர்களை உற்சாகப்படுத்தி உத்வேகம் கொடுக்கும் விதத்தில், 'த்ராட்டிலை ஃப்ரீயா விடு மச்சி' என்று வெளியில் இருந்து உற்சாகமூட்டிய நண்பர்கள், 'செம்ம செட் அப் மச்சி'! என்று இளம் ரேஸர்கள் பைக் பற்றி சிலாகித்த வார்த்தைகளும் பார்ப்போரையும் உற்சாகப்படுத்தின.
தமிழக மோட்டார் பந்தய பாரம்பரியம் இந்தளவுக்கு வளர்ந்ததற்கு மற்றுமொரு காரணமும் இருக்கிறது. மோட்டார் பந்தயத்தில் கலக்கிய மூத்த வீரர்களை 'அண்ணா' என்று மிகுந்த மரியாதையுடனும், பாசத்துடன் நெஞ்சில் கைவைத்து வணக்கம் தெரிவிக்கும் கலாச்சாரம் வேறு எந்த இடத்திலும் காண முடியாத தமிழர்களின் பண்பு. இன்று தமிழகத்தில் சூப்பர் பைக்குகள் மற்றும் சூப்பர் கார்கள் அதிக அளவில் இருப்பதற்கும், இளைஞர்களின் மத்தியில் ரேஸ் ஆர்வம் ரத்தத்தில் ஊறிப்போனதற்கும் இந்த மோட்டார் பந்தய பாரம்பரியமும் முக்கியமானதே.
நவீன தமிழகத்தின் வீரத்தை பரைசாற்றும் புதிய அடையாளமாக மாறி இருக்கும், மோட்டார்ஸ்போர்ட்ஸ் துறையில் தமிழர்கள் கோலோய்ச்சி வருவதற்கான காரணங்களை சற்றே ஆழமாக பார்க்க வரலாற்றையும் சற்று திரும்பி பார்க்க வேண்டியிருக்கிறது.
நாங்க அப்பவே அப்படி...
இப்போது சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஜாகுவார் தடம் பதித்து செல்வதை பெருமையாகவும், வியப்பாகவும் பார்க்கிறோம். ஆனால், அந்த காலத்திலேயே சென்னையில் ஜாகுவார் காரை வைத்து ரேஸ் நடத்திய பரம்பரையை சேர்ந்தவர்கள் தமிழர்கள் என்பதை எங்கு வேண்டுமானாலும் கெத்தாக சொல்லலாம்.
சோழவரம் ரேஸ் டிராக்கில் ஃபெராரி வி-12, ஜாகுவார் மார்க்-5, மெர்சிடிஸ் 300 எஸ்எல் கூபே, செவர்லே ஸ்டட்பேக்கர், கேடில்லாக் ஸ்டான்டர்டு 10, ஆஸ்டின் ஹீலி போன்ற கார்களுடன்தான் ரேஸ் துவங்கியது என்பதை பிரம்மிப்பை தரும் விஷயம்.
திண்டுக்கல் சவுந்தரராஜன், கோவை சுந்தரம், ராஜகோபால், சேலத்தை சேர்ந்த பழனியப்ப செட்டியார் போன்ற பலர் தமிழகத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறை சிறந்த அடித்தளம் அமைவதற்கு ஆணி வேராக இருந்தவர்கள்.
ஆரம்ப காலம்...
தமிழகத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் துளிர்விடுவதற்கு ரெக்ஸ் ஸ்ட்ராங் என்ற ஆங்கிலேயரும், கே.வர்கிஸ் என்பவரும் பிள்ளையார் சுழி போட்டனர். தமிழகத்தில் முதல்முறையாக 1953ம் ஆண்டு மோட்டார் பந்தய விளையாட்டுகள் துளிர்விட துவங்கின.
அப்போது நடந்த பந்தயத்தில், இரண்டு வகையிலான கார்கள் இந்த பந்தயத்தில் கலந்து கொண்டன. ஒரு மைல் நீளத்திற்கான சோழவரம் விமானப் படை தளத்தின் ஓடுபாதையில் இந்த பந்தயம் நடத்தப்பட்டது. இதில், ஜி.எம். டோனர் என்பவரின் மார்க்-7 ஜாகுவார் கார் சராசரியாக மணிக்கு 84 மைல் வேகத்தில் பந்தய தூரத்தை கடந்து சாதித்தது.
இந்த நிலையில், முறைப்படி விதிமுறைகளுடன் இந்த போட்டிகளை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ரெக்ஸ் ஸ்ட்ராங் மற்றும் கே.வர்கிஸ் ஆகியோர் பிள்ளையார் சுழி போட்டாலும், மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் க்ளக் துவங்குவதற்கான ஐடியாவை கொடுத்தவர், அப்போது தென் இந்திய ஆட்டோமொபைல் கூட்டமைப்பின் தலைவராக இருந்த எம்.ஏ.சிதம்பரம்தான்.
அவர் கொடுத்த ஆலோசனையின் பேரில் 1954ம் ஆண்டு மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் க்ளப் [MMSC]உருவானது. ஜி.எம். டானர் தலைவராகவும், கேவி.சீனிவாசன் பொருளாளராகவும், வர்கிஸ் செயலாளராகவும் நியமிக்கப்பட்டனர்.
டி ஸோஸா, டி.ஜெ.ஹோப்லி, ரெங்கநாத ராவ் உள்ளிட்ட பலர் மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் க்ளப்பில் ஆரம்ப கால உறுப்பினர்களாக இணைந்து தங்களது பங்களிப்பை வழங்கினர்.
இதனைத்தொடர்ந்து, 1955ம் ஆண்டு முதல்முறையாக சென்னையிலிருந்து செங்கல்பட்டு வழியாக மகாபலிபுரத்துக்கு ராலி கார் ரேஸ் நடத்தப்பட்டது. இதையடுத்து, 1957ம் ஆண்டு தேசிய அளவிலான மோட்டார் பந்தயம் சென்னை சோழவரம் விமானப் படை தளத்தில் நடந்தது.
வந்தாரை வளர வைத்த தமிழகம்
பெங்களூர் மற்றும் இலங்கை உள்பட வெளியூர் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த வீரர்கள் இந்த பந்தயத்தில் கலந்து கொண்டதால், அந்த கால மோட்டார் பந்தய பிரியர்கள் மத்தியில் அதிக ஆவலை இந்த பந்தயம் தூண்டியது. இலங்கையை சேர்ந்த வீரர்கள் இந்த பந்தயத்தில் கலக்கினர். பெங்களூர் வீரர்களும் பார்ப்போரை பிரம்மிக்க வைத்தனர்.
உலகின் புகழ்பெற்ற ஐலே ஆஃப் மேன் டிடி மோட்டார் பந்தயத்தில் பங்கேற்ற பெருமையுடைய இலங்கை வீரர் ஜாக்கி டீன் என்பவர் சென்னையில் நடந்த மோட்டார் பந்தயத்தில், ஒட்டுமொத்த பார்வையாளர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.
இளையோருக்கான 350சிசி மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் ஜாக்கி டீன் மற்றும் சென்னையை சேர்ந்த ஹரி ராவ் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது. முதல் 6 சுற்றுகளில் ஹரி ராவ் முன்னிலை வகித்தார். ஆனால், கடைசி சுற்றில் ஜாக்கி டீன் ஒட்டுமொத்த வித்தையையும் இறக்கி முதலிடம் பெற்றார்.
இளம் வீரர்களுக்கு முகவரி...
இலங்கையை சேர்ந்த மற்றொரு வீரர் ராஜா சின்னதுரை வயது வரம்பு பிரச்னை இருந்ததால், விதி தளர்வுகள் செய்யப்பட்டு போட்டியில் பங்கு பெற அனுமதிக்கப்பட்டார். அந்த போட்டியில் கலந்துகொண்ட மிக இளம் வயது மோட்டார்சைக்கிள் பந்தய வீரரும் அவரே.
முதல்முறையாக களம் கண்ட ராஜா சின்னதுரை முதல் போட்டியிலேயே வெற்றியை பெற்று எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தார். முதல் இடத்தில் இருந்து புறப்பட்ட வீரரை விட 80 வினாடிகள் கழித்து புறப்பட்டாலும், சாமர்த்தியமாக மோட்டார்சைக்கிளை ஓட்டி முதலிடத்தை பெற்று அசத்தினார்.
14 மைல்கள் போட்டி தூரத்துடன் நடந்த 500சிசி மோட்டார்சைக்கிள் ரகத்தில் பெங்களூரை சேர்ந்த கே.எஸ்.விஜயபால் முதலிடத்தை பெற்றார். அதற்கு அடுத்து வி.கே.குப்தா மற்றும் ஜாக்கி டீன் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்தனர். இவ்வாறு, தமிழகம் மட்டுமின்றி, பிற பகுதிகளை சேர்ந்த மோட்டார் பந்தய வீரர்களின் வேட்கையை தணிக்கும் இடமாக இருந்த பெருமை தமிழகத்துக்கு உண்டு.
குலுக்கல் முறையில் சிறப்பு விருந்தினர்கள்...
மோட்டார் பந்தய வளர்ச்சிக்காக நிதி தேவைப்பட்ட சமயத்தில், சோழவரம் பந்தய களத்தில் சொகுசு கேலரிகள் அமைக்கப்பட்டு, இருக்கைகள் நிறுவனங்களிடம் விற்பனை செய்யப்பட்டன. மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த குலுக்கல் பெட்டியில் விருந்தினர்கள் பெயரை எழுதிப்போட்டு தேர்வு செய்து வழக்கம்.
அதில், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை கலந்து கொண்டு சிறப்பித்து தன் பங்களிப்பை வழங்கியதுடன், ஒருமுறை ஆங்கிலத்தில் பேசி கலகலப்பூட்டினார். அவர் யார், தமிழக மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறைக்கு கோவை மாநகரம் வழங்கிய பங்களிப்பு பற்றிய சுவாரஸ்யத் தகவல்களை படிக்க கீழே உள்ள செய்தி இணைப்பை க்ளிக் செய்யவும்.
எம்.ஜி.ஆரையும் ஈர்த்த கார் பந்தயங்கள், அன்று முதல் இன்று வரை... கார் பந்தயம்... இந்தியாவின் தல தமிழ்நாடு: பகுதி -2
Source And Photo Credit: MMSC AND PCCI