
பெங்களூர், பிப்-18: அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் மார்க்கெட் லீடராகும் முயற்சிகளை யமஹா துவங்கியிருக்கிறது. இதற்காக, சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனையை தனி நிறுவனமாக மாற்றியிருக்கிறது யமஹா மோட்டார்சைக்கிள் நிறுவனம்.
யமஹா மோட்டார் இந்தியா விற்பனை நிறுவனத்திற்கு மசாகி அசனோ தலைமை ஏற்று வழி நடத்துவார். இவருக்கு பக்கபலமாக புதிய நிர்வாகிகளை யமஹா மோட்டார் நிறுவனம் நியமித்திருக்கிறது. இதன் மூலம் உற்பத்தியும், விற்பனையையும் வெவ்வேறு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது ஜப்பானை சேர்ந்த யமஹா மோட்டார்ஸ்.
இந்த புதிய நிறுவனத்திற்கு தலைமை ஏற்றுள்ள மசாகி அசனோ கூறுகையில்,"இந்தியா மார்க்கெட் எங்களது ஒட்டுமொத்த விற்பனையில் முக்கியமானதாக கருதுகிறோம். மேலும், இந்தியாவில் வெவ்வேறு வகையான ரசனைகள் கொண்ட வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.
எனவே, இந்த மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களின் ரசனை, எதிர்பார்ப்பை சரியாக புரிந்து கொண்டு தயாரிப்புகளை வழங்கவும், விற்பனையை அதிகரிக்கவும் தற்போது புதிய நிறுவனத்தை உருவாக்கியிருக்கிறோம்.
இந்த புதிய நிறுவனம் மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் இந்திய மார்க்கெட் லீடர் அந்தஸ்தை பெறும் முயற்சிகளை செய்வோம்," என்று தெரிவித்துள்ளார்.





















