"எனக்கு எந்த பிரச்னையும் இல்ல" ஓபனாக பேசிய அமைச்சர் நிதின் கட்கரி: எதற்கு தெரியுமா..?

மாநில அரசின் தொடர் எதிர்ப்புகளுக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் நிதின் கட்கரி பதிலளித்துள்ளார். இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

பிரபல ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம், அதன் புகழ்வாய்ந்த ஆக்டிவா ஸ்கூட்டரின் பிஎஸ்-6 தரத்திலான எஞ்ஜின் கொண்ட மாடலை இந்தியாவில் இன்று (புதன்கிழமை) விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

இந்நிகழ்ச்சியில், ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர். மேலும், சிறப்பு விருந்தினராக மத்திய அரசு சார்பில், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்துக் கொண்டார்.

அப்போது பேசிய அவர், "மாநிலங்கள் போக்குவரத்து அபராதத்தை குறைப்பதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. இது சாலையில் அதிகமாக ஏற்படும் விபத்துகளைக் குறைக்கும் விதமாக கொண்டுவரப்பட்டது" என்று கூறினார்.

மேலும், பொதுமக்களின் உயிர்களுக்கு அந்தந்த மாநில அரசே பொறுப்பு என தெரிவித்தார்.

மத்திய அரசின் புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் 2019, கடந்த 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது முன்னதாக வசூலித்து வந்த அபராத்தைக் காட்டிலும் பல மடங்கு உயர்த்தி வசூலிக்கு வழி வகை செய்துள்ளது.

இது, சாமானியர்களைக் கடுமையாக பாதிக்கும் என்ற காரணத்தால் சில மாநில அரசுகள் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதிலும், குறிப்பாக பாஜக கட்சியினர் ஆளாத ஒரு சில மாநிலங்கள், புதிய திட்டத்தை கட்டாயம் நடைமுறைக்குக் கொண்டுவரப் போவதில்லை திட்டவட்டமாக தெரிவித்துவிட்டன.

இதில், மேற்கு வங்க மாநிலமே முதல் இடம் வகிக்கின்றது. தொடர்ந்து, பஞ்சாப், கேரளா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இணைந்துள்ளன.

இந்த வரிசையில், பாஜக கட்சியினர் ஆளும் குஜராத் மாநிலமும் இணையும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆம், குஜராத் மாநிலமும் தங்கள் பங்காக சிறு எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

இதனை முழு வீச்சிலான எதிர்ப்பு என கூறிவிட முடியாது. ஏனென்றால், மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள புதிய அபராதத் தொகையைக் காட்டிலும், பாதியளவு வசூலிக்கின்ற வகையில் அதில் மாற்றம் செய்துள்ளது.

அந்தவகையில், குஜராத் அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களைக் கீழே காணலாம்...

புதிய மோட்டார் வாகன விதிமுறைகளின்படி ஹெல்மெட் அணியாமல் பயணித்தால் ரூ. 1,000 அபராதமாக வசூலிக்கப்படுகின்றது. ஆனால், குஜராத்தில் அது 500 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சீட் பெல்ட் அணியாமல் பயணிப்பதற்கு வசூலிக்கப்படும் ஆயிரம் ரூபாயும் குறைக்கப்பட்டு ரூ. 500ஆக வசூலிக்கப்பட உள்ளது.

தொடர்ந்து, டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டிகளிடம் இருந்தும் மத்திய அரசின் புதிய விதியைக் காட்டிலும் குறைவான அபராதத்தையே குஜராத் அரசு வசூலிக்க இருக்கின்றது.

அந்தவகையில், டூவீலர்களுக்கு 2 ஆயிரம் ரூபாயாகவும், மற்ற வாகனங்களுக்கு 3 ஆயிரம் ரூபாயாகவும் வசூலிக்கப்பட உள்ளது. இது, புதிய வாகன சட்டத்தின்படி 5000 ரூபாயாக வசூலிக்கப்பட்டு வருகின்றது.

இதேபோன்று ஒவ்வொரு விதிமீறல்களுக்குமான அபராதத் தொகை 10 முதல் 90 சதவீதம் வரை குறைத்து வசூலிக்கப்பட உள்ளது. இதேபோன்ற, ஓர் அதிரடி நடவடிக்கையில் குஜராத் அரசு மட்டுமின்றி தமிழக அரசும் களமிறங்கியுள்ளது.

குறிப்பிட்ட மாநில அரசுகளின் இந்த நடவடிக்கையால் தனக்கு எந்த பிரச்னையும் இல்லை என அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இவர், பல போராட்டங்களுக்கு மத்தியில் இத்திட்டத்தை நாட்டில் அமலுக்கு கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இந்தியாவை போக்குவரத்து விதிமீறல்களே இல்லாத நாடாக மாற்றும் வகையில் இத்திட்டத்தை அவர் கொண்டு வந்திருந்தார்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Nitin Gadkari Speech About Reducing Traffic Fines. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X