புதிய சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் இந்தியாவில் அறிமுகம்

கூடுதல் சிறப்பம்சங்களுடன் சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் இருக்கும் முக்கிய அம்சங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

 புதிய சுஸுகி ஹயபுசா சூப்பர் பைக் இந்தியாவில் அறிமுகம்

உலக அளவில் அதிக வரவேற்பை பெற்ற சூப்பர் பைக் மாடலாக சுஸுகி ஹயபுசா விளங்குகிறது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் சூப்பர் பைக் மாடல்களில் ஒன்றாகவும் கூறலாம்.

இந்த நிலையில், பிஎஸ்-4 எஞ்சின் பொருத்தப்பட்ட கடைசி தலைமுறை சுஸுகி ஹயபுசா பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 2020 சுஸுகி ஹயபுசா என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய மாடலானது மெட்டாலிக் தண்டர் க்ரே மற்றும் கேண்டி டேரிங் ரெட் ஆகிய இரண்டு வண்ணத் தேர்வுகளில் விற்பனைக்கு கிடைக்கும். ரூ.13.75 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய பிரேக் காலிபர்கள் மற்றும் புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கருடன் இந்த புதிய மாடல் வந்துள்ளது. அத்துடன், பிஎஸ்-4 எஞ்சின் பொருத்தப்பட்ட இந்த மாடல் குறிப்பிட்ட எண்ணிக்கையில் லிமிடேட் எடிசன் மாடலாக விற்பனைக்கு கிடைக்கும் என்று சுஸுகி இந்தியா மோட்டார்சைக்கிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய ஹயபுசா பைக்கில் 4 சிலிண்டர்கள் கொண்ட 1,340 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 197 பிஎச்பி பவரையும், 155 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த பைக்கில் சுஸுகி மூன்று விதமான நிலைகளில் எஞ்சின் இயக்கத்தை மாற்றிக் கொள்வதற்கான டிரைவ் மோடு செலக்டர் வசதியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹயபுசா சூப்பர் பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கொய்சிரோ ஹிராவோ," கடந்த இரண்டு தசாப்தங்களாக உலக அளவில் பைக் பிரியர்களின் முதன்மை தேர்வாக ஹயபுசா இருந்து வருகிறது.

சிறந்த செயல்திறன், மென்மையான ஓட்டுதல் அனுபவம் ஆகியவை இந்த பைக்கின் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. இதனால், இந்தியாவிலும் பெரிய அளவிலான வாடிக்கையாளர் வட்டத்தை பெற்றிருக்கிறது. 2020 ஹயபுசா மாடலும் இந்தியர்களுக்கு மதிப்புமிக்க தேர்வாக அமையும்," என்று தெரிவித்துள்ளார்.

சுஸுகி நிறுவனம் புதிய தலைமுறை ஹயபுசா சூப்பர் பைக்கை உருவாக்கி வருகிறது. எனவே, தற்போதைய மாடலில் பிஎஸ்-6 எஞ்சின் அறிமுகம் செய்யப்படாது என்று தகவல்கள் கூறுகின்றன. வரும் மார்ச் மாதத்துடன் இந்த மாடலின் விற்பனை இந்தியாவில் முடிவுக்கு வரும். அதுவும் இது லிமிடேட் எடிசன் மாடலாக இருப்பதால், விரைந்து முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே வாங்குவதற்கான வாய்ப்பை பெற முடியும்.

Most Read Articles
English summary
Suzuki Motorcycle India has launched in India with new colour options. It will available only limited numbers with BS-4 engine.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X