இனிமேல் டீசல் உடன் இதை கலந்துதான் விப்பாங்க! கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க மத்திய அரசு அதிரடி திட்டம்!
கரும்பு மற்றும் மக்காச்சோளம் போன்ற விவசாய பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனால் (Ethanol), இந்தியாவில் தற்போது அதிக அளவில் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்படும் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலக்கப்படுகிறது. இதை E20 எரிபொருள் என அழைக்கின்றனர்.
தற்போது 20 சதவீதம் மட்டுமே கலக்கப்பட்டாலும் கூட, படிப்படியாக பெட்ரோலுடன் கலக்கப்படும் எத்தனாலின் அளவை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் பெட்ரோல் உடன் எத்தனால் கலக்கப்படுவதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வருவதாக வாகன ஓட்டிகள் பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர்.

அதை எல்லாம் மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. குறிப்பாக E20 எரிபொருள் காரணமாக வாகனங்களின் இன்ஜின் உள்ளிட்ட பாகங்கள் சேதமடைகிறது என்ற குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்துள்ளது. அத்துடன் எத்தனால் உற்பத்திக்கு அதிகப்படியான தண்ணீர் தேவை என்றும், இதன் காரணமாக தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்ற குற்றச்சாட்டையும் மத்திய அரசு மறுத்து விட்டது.
மாறாக பெட்ரோல் உடன் 20 சதவீதம் எத்தனாலை கலந்து பயன்படுத்துவதால், ஏராளமான நன்மைகள் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. 1.9 லட்சம் கோடி ரூபாய் அந்நிய செலாவணி (Foreign Exchange) சேமிப்பு இதில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். கச்சா எண்ணெய் (Crude Oil) இறக்குமதி குறைந்துள்ளதால் இது சாத்தியமாகியுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அத்துடன் கார்பன் உமிழ்வை எத்தனால் குறைத்துள்ளதாகவும், இந்திய விவசாயிகளுக்கும் இது நன்மையை ஏற்படுத்தியுள்ளதாகவும் மத்திய அரசு விளக்கியுள்ளது. இதன் அடுத்தகட்டமாக டீசல் (Diesel) உடன் ஐசோப்யூட்டனாலை (Isobutanol) கலந்து விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி (Nitin Gadkari) பேசியுள்ளார்.
எத்தனாலை போன்று ஐசோப்யூட்டனாலும் எதிர்காலத்தில் மிகச்சிறந்த மாற்று உயிரி எரிபொருளாக (Bio Fuel) இருக்கும் என கருதப்படுகிறது. ஏனெனில் இதன் ஆற்றல் அடர்த்தி அதிகம். அத்துடன் இன்ஜின்களுக்கு மிகவும் சுலபமாக இணக்கமானதாக மாறும் தன்மையும் இதற்கு உண்டு. மேலும் மற்ற பெரும்பாலான உயிரி எரிபொருட்கள் உடன் ஒப்பிடும்போது இது சுற்றுச்சூழலுக்கு மிகவும் நட்பானது.
இதன் காரணமாகவே டீசல் உடன் ஐசோப்யூட்டனாலை கலந்து பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து நிதின் கட்கரி கூறுகையில், ''டீசல் உடன் எத்தனாலை நேரடியாக கலந்து பயன்படுத்த முடியாது. எனவே எத்தனாலில் இருந்து ஐசோப்யூட்டனாலை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
டீசலுக்கு மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக ஐசோப்யூட்டனால் இருக்கும். ஆரம்ப நிலையில் டீசல் உடன் 15 சதவீதம் ஐசோப்யூட்டனாலை கலந்து பயன்படுத்த அனுமதி வழங்குவதற்கான வேலைகளை மத்திய அரசு செய்து வருகிறது. 100 சதவீத எத்தனால் மற்றும் ஐசோப்யூட்டனால் மூலம் 2 ஜெனரேட்டர் செட்களை நாங்கள் வெற்றிகரமாக இயக்கியுள்ளோம். இந்த எரிபொருட்களில் இயங்க கூடிய இன்ஜின்களை உருவாக்க முடியும் என்பதை இது நிரூபித்துள்ளது'' என்றார்.
15 சதவீதம் ஐசோப்யூட்டனால் கலக்கப்பட்ட டீசல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவு மேலும் குறையலாம். கச்சா எண்ணெய்யின் இறக்குமதி அளவு குறையும்பட்சத்தில், அது இந்திய பொருளாதாரத்திற்கு நன்மையை ஏற்படுத்த கூடிய விஷயமாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் பெட்ரோலை விட டீசல்தான் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. லாரிகள் போன்ற சரக்கு வாகனங்கள் மற்றும் பஸ்கள் டீசல் மூலம் இயங்குவதுதான் இதற்கு காரணம். எனவே டீசல் உடன் ஐசோப்யூட்டனாலை கலந்து பயன்படுத்தும்போது, இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவு குறையும்.


Click it and Unblock the Notifications