சென்னையின் வாய்ப்பை தட்டி பறித்த ஹைதராபாத்... 2 மணிநேர படம் முடியுறதுக்குள்ள ரீச் ஆயிடலாம்!
இந்தியா தனது புல்லட் இரயில்களுக்கு தயாராகி வருகிறது. நாட்டின் முதல் புல்லட் இரயில் சேவை மும்பை மற்றும் அகமதாபாத் இடையே அமைக்கப்பட்டு வருகிறது. அப்படியே டெல்லியை இணைப்பதுதான் இலக்கு. தென்னிந்தியாவை பொறுத்தவரையில், முதல் புல்லட் இரயில் சேவை சென்னை மற்றும் பெங்களூருவுக்கு இடையே வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கர்நாடக சட்டசபை தற்போது பெங்களூரு - ஹைதராபாத் இடையேயான புல்லட் இரயில் சேவைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த இரயில் சேவை பயன்பாட்டிற்கு வந்தால் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் இடையேயான பயண நேரம் வெறும் 2 மணிநேரமாக குறையும். அந்த அளவிற்கு, மணிக்கு 350கிமீ வேகத்தில் இரயில் சென்றாலும் தாங்கக்கூடிய அளவிற்கு வலிமையானதாக பெங்களூரு-ஹைதராபாத் இடையேயான இந்த புல்லட் இரயில் வழித்தடங்கள் அமைக்கப்பட உள்ளன. இருந்தாலும், மணிக்கு 320கிமீ வேகத்தில் மட்டுமே இரயில்கள் இயக்கப்படும் என கூறப்படுகிறது.

வழக்கமான இரயில் பாதைகளை போல் அல்லாமல், மேம்பாலங்களில் புல்லட் இரயில்கள் இயங்கப்பட உள்ளன. பெங்களூரு-ஹைதராபாத் வழித்தடத்திற்கு மட்டுமில்லாமல், மும்பை- அகமதாபாத் வழித்தடம் உள்பட உலகம் முழுக்கவே புல்லட் இரயில் வழித்தடங்கள் மேம்பாலங்களிலும், சுரங்கப்பாதைகளிலும் அமைக்கப்படுகின்றன. ஏனெனில் அப்போதுதான் விபத்துகளை தவிர்க்க முடியும்.
மெட்ரோ இரயில்களுக்கான அதே ஃபார்முலா தான் புல்லட் இரயில்களுக்கும் பின்பற்றப்படுகிறது. ஆனால், மெட்ரோ இரயில்களை காட்டிலும் புல்லட் இரயில்கள் அதிவேகமாக இயங்கக் கூடியவை என்பதால், அதற்கேற்ப வழித்தடத்தை வலிமையானதாக அமைக்க வேண்டியுள்ளது. இதனால், சுரங்கப்பாதைகளில் புல்லட் இரயில் வழித்தடத்தை அமைப்பது செலவுமிக்கதாக உள்ளதால், பெரும்பாலும் மேம்பாலங்களை எழுப்பி அதில் புல்லட் இரயில்களை ஓட விடுகின்றனர்.

இந்த 2026ஆம் ஆண்டின் துவக்கத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது பட்ஜெட்டில், இரு ஐடி மையங்களான பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களுக்கு இடையே புல்லட் இரயில் சேவை கொண்டுவருவது குறித்து அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது கர்நாடக சட்டசபையில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்பின் இந்த திட்டத்திற்கான அடுத்தக்கட்ட பணிகள் நடைபெறும்.
அதாவது, புல்லட் இரயில் வழித்தடத்தை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வது, அவற்றில் வழித்தடம் அமைப்பதற்கான வரையறையை வகுப்பது மற்றும் சில வேலைகளுக்காக தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் விடுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் துவங்கப்படும். நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, மொத்தம் 626கிமீ தொலைவிற்கு இந்த புல்லட் இரயில் வழித்தடம் அமைய உள்ளது.
கர்நாடகா, ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா என மூன்று மாநிலங்களை இணைக்கும் விதமாக இந்த சேவை இருக்கும். இருப்பினும், ஏறக்குறைய 100கிமீ தொலைவு வழித்தடம் மட்டுமே கர்நாடகாவில் அமைய உள்ளதாகவும், மீதி மற்ற இரு மாநிலங்களில் அமையவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மற்றப்படி, தமிழ்நாட்டிற்கும் இந்த புல்லட் இரயில் வழித்தடத்திற்கும் சம்மந்தமே இல்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெங்களூருவில் விமான நிலையம் தொலைத்தூரத்தில் இருப்பது மக்களுக்கு அசவுகரியமாக இருப்பதால், பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ள தேவனஹள்ளி பகுதியில் இந்த புதிய புல்லட் இரயில் சேவையின் ஒரு இரயில் நிறுத்தம் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், ஆந்திர பிரதேசத்தில் தொழிற்சாலைகள் நிறைந்த அனந்தபுர் பகுதியில் ஒரு நிறுத்தம் அமைக்கப்பட வாய்ப்புள்ளது.
626கிமீ தொலைவு வழித்தடத்தில் ஒட்டுமொத்தமாக 12 இரயில் நிறுத்தங்கள் நிறுவப்பட உள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. பெங்களூரு-ஹைதராபாத் இடையேயான தற்போதைய இரயில் பயணம் ஆனது 8இல் இருந்து 12 மணிநேரம் வரை ஆகிறது. விமான சேவையை பயன்படுத்தலாம் என்று பார்த்தால் வழக்கமான விமான நிலைய நடைமுறைகளினாலும், பாதுகாப்பு சோதனைகளினாலும் அதிலிலும் பல மணிநேரம் எடுக்கிறது. ஆகையால், புல்லட் இரயில் சேவை மக்களால் அதிகளவில் பயன்படுத்தப்படும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications