'மூன்றாவது கண்'.. போக்குவரத்து விதிமீறலை கையும் களவுமாக பிடிக்கும் பெங்களூர் டெக்கியின் அசத்தல் கண்டுபிடிப்பு
பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஒருவர், போக்குவரத்து விதிமீறல்களை தானியங்கி முறையில் கண்டறிந்து காவல்துறைக்கு தெரிவிக்கும் புதிய சாதனத்தை உருவாக்கி கவனம் ஈர்த்துள்ளார்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணி நகரமாக விளங்கும் பெங்களூர், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசலை சந்தித்து வருகிறது. இதனுடன், பல வாகன ஓட்டுநர்கள் போக்குவரத்து விதிகளை அலட்சியமாக மீறும் சம்பவங்களும் அன்றாடமாக நடைபெற்று வருகின்றன. இந்த விதிமீறல்கள் தான் திடீர் போக்குவரத்து நெரிசலுக்கும், விபத்துகளுக்கும் முக்கிய காரணமாக அமைகின்றன.

இந்த சூழலில், பெங்களூரில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வரும் பங்கஜ் என்பவர், போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டுநர்களை ஆதாரங்களுடன் கண்டறியும் வகையில் ஒரு புதுமையான சாதனத்தை உருவாக்கியுள்ளார்.
அவர் உருவாக்கிய இந்த சாதனத்தில், ஒரு ஹெல்மெட்டில் கேமரா பொருத்தப்பட்டு, அதனை செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் கொண்ட சிறிய கணினி சாதனத்துடன் இணைத்துள்ளார்.

சாலையில் யாரேனும் போக்குவரத்து விதிகளை மீறிச் சென்றால், அந்த கேமரா மூலம் உடனடியாக அந்த வாகனத்தின் புகைப்படம் எடுக்கப்படுகிறது. அதில் வாகனப் பதிவு எண், விதிமீறல் நடைபெற்ற இடத்தின் விவரம் உள்ளிட்ட தகவல்கள் இணைக்கப்பட்டு, தானாகவே காவல்துறைக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அனுப்பப்படுகிறது.
மனித ஆற்றல் எதுவும் இல்லாமல் முழுமையாக தானியங்கி முறையில் செயல்படும் இந்த அமைப்பு, போக்குவரத்து காவல்துறையினர் ஆதாரங்களுடன் விரைவாக நடவடிக்கை எடுக்க உதவுகிறது. இதனால், விதிமீறல்களை தடுக்கும் ஒரு 'நகரும் கண்காணிப்பு கருவி'யாக இந்த ஹெல்மெட் செயல்படுகிறது.
இந்த கண்டுபிடிப்பு மற்றும் அதன் செயல்பாடு குறித்து பங்கஜ் சமூக வலைதளங்களில் பகிர்ந்த பதிவு தற்போது வைரலாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, பெங்களூர் காவல் ஆணையர் அலுவலகம் அவரை நேரடியாக தொடர்புகொண்டு, இந்த முயற்சியை பாராட்டியதுடன், சாதனம் குறித்து மேலும் அறிந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த கண்டுபிடிப்பை வணிக ரீதியில் மேம்படுத்த ஆர்வம் காட்டும் பலரும் கருத்துப் பகுதியில் முன்வந்துள்ளனர். நடிகர் குணால் கபூரும், இந்த சாதனத்தை பெருமளவில் உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் திட்டத்திற்கு முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த பதிவுக்கு இதுவரை 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளன. இதனையடுத்து, பெங்களூரு போக்குவரத்து காவல்துறையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், போக்குவரத்து விதிமீறல்களை தெரிவிக்க அதிகாரப்பூர்வமான மாற்று வழியையும் பொதுமக்களுக்கு பரிந்துரைத்துள்ளது.
அதில், "இந்த முயற்சியை எங்களிடம் பகிர்ந்ததற்கு நன்றி. போக்குவரத்து தொடர்பான விதிமீறல்களை புகாரளிக்க பொதுமக்கள் ASTraM என்ற மொபைல் அப்ளிகேஷன் மூலமாகவும் புகார் பதிவு செய்யலாம். பொதுமக்கள் பங்கேற்புடன் போக்குவரத்து விதிமீறல்களை தடுக்க உதவுகிறது", என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: Pankaj@X


Click it and Unblock the Notifications









