ஊழியர்களுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத அதிர்ச்சி கொடுத்த சென்னை தனியார் கம்பெனி! ஒவ்வொரு காரும் 60 லட்ச ரூபாய்
கடினமாக உழைக்கும் போதிலும் சரியாக ஊதிய உயர்வே வழங்குவதில்லை என தனியார் நிறுவன ஊழியர்கள் பலர் குமுறும் நிலையில், சென்னையில் ஒரு தனியார் நிறுவனம் அதன் நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றும் 12 ஊழியர்களுக்கு விலையுயர்ந்த கார்களை பரிசாக வழங்கி ஆச்சிரியப்படுத்தி உள்ளது. அதுவும் நீங்கள் நினைப்பதுபோல் மாருதி காரோ அல்லது ஹூண்டாய் காரோ கிடையாது; பல இலட்ச ரூபாய் மதிப்பிலான ஆடி (Audi) கார் ஆகும்.
'அன்சீன் சென்னை' (Unseen Chennai) என்கிற இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இதுதொடர்பான விபரங்களின்படி பார்க்கும்போது, சென்னையை சேர்ந்த 'ரெஃபெக்ஸ் க்ரூப்' (Refex Group) தனது ஊழியர்களுக்கு இந்த பேரதிர்ச்சியான பரிசை வழங்கி உள்ளது. ரெஃபெக்ஸ் க்ரூப் ஆனது ஓர் பல்துறை நிறுவனங்களின் குழுமம் ஆகும்.

அதாவது, இந்த குழுமத்தின் கீழ் பல நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவை, எரிசக்தி ஆற்றல், மருத்துவ தொழிற்நுட்பங்கள், மருந்தகங்கள், நிலக்கரி மேலாண்மை, விமான நிலையங்களில் சில்லறை வணிகங்கள் என ஏகப்பட்ட துறைகளில் செயல்படுகின்றன. இன்னும் சொல்லப்போனால், 4-சக்கர எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தொழிற்நுட்பங்களை வழங்கி பசுமை போக்குவரத்து துறையிலும் கூட ரெஃபெக்ஸ் க்ருப்பின் நிறுவனங்கள் உள்ளன.
இத்தகைய ரெஃபெக்ஸ் க்ரூப் தான் தற்போது ஊழியர்களுக்கு ஆடி கார்களை பரிசாக வழங்கியுள்ளது. நிறுவனத்தின் கடினமான சூழல்களிலும் நிறுவனத்துடன் துணை நின்ற பணியாளர்களாக பார்த்து தேர்வு செய்து இந்த விலையுயர்ந்த பரிசுகளை வழங்கியுள்ளனர். அவர்களுக்கு வழங்கப்பட்டு இருப்பது, ஏ4 (A4) என்கிற ஆடி கார் ஆகும்.

ரூ.46.88 லட்சத்தில் இருந்து ரூ.55.83 லட்சம் வரையில் எக்ஸ்-ஷோரூம் விலைகளை கொண்ட காராக இருப்பினும், இந்தியாவில் ஆடி நிறுவனம் விற்பனை செய்யும் விலை குறைவான கார்களுள் ஒன்று ஏ4 ஆகும். ரெஃபெக்ஸ் குழுமம் அதன் ஊழியர்களுக்கு ஆடி ஏ4 காரின் எந்த வேரியண்ட்டை வழங்கியுள்ளது என்பது உறுதியாக தெரியவில்லை.
தாழ்வான உடலமைப்பை கொண்ட செடான் (Sedan) ரக காரான ஆடி ஏ4 இந்தியாவில் பிரீமியம், பிரீமியம்+, சிக்னெச்சர் எடிஷன் மற்றும் டெக்னாலஜி உள்ளிட்ட வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. முன்பு பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைத்துவந்த நிலையில், சில வருடங்களுக்கு முன்பு அரசாங்கம் கொண்டுவந்த பிஎஸ்6 (BS6) மாசு உமிழ்வு விதிமுறைகளால் ஏ4 காரின் டீசல் என்ஜின் ஆப்ஷன் நிறுத்திக் கொள்ளப்பட்டது.
இதனால், பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே தற்சமயம் இந்தியாவில் ஆடி ஏ4 விற்பனை செய்யப்படுகிறது. இந்த வகையில் இந்த காரில் வழங்கப்படும் 2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 207 பிஎச்பி மற்றும் 320 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது.
இந்த என்ஜின் உடன் இணைக்கப்படும் 7-ஸ்பீடு எஸ் ட்ரானிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆனது என்ஜினின் இயக்க ஆற்றலை காரின் நான்கு சக்கரங்களுக்கும் அனுப்புகிறது. லக்சரி செடான் காரான ஏ4-இல் 360-டிகிரி கேமரா, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், மின்சாரம் மூலமாக அட்ஜெஸ் செய்யக்கூடிய பின்புறத்தை காட்டும் வெளிப்புற கண்ணாடிகள், வெண்டிலேஷன் வசதி கொண்ட இருக்கைகள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இவ்வாறு பணியாற்றும் ஊழியர்களுக்கு விலையுயர்ந்த கார்களை வழங்குவது இது ஒன்றும் முதல்முறை அல்ல. கடந்த பிப்ரவரி மாதத்தில் கூட கேரளாவை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு 47 கார்களை பரிசாக வழங்கி சிறப்பித்து இருந்தது. இருப்பினும், தற்போது சென்னையில் ஊழியர்கள் 12 பேருக்கும் ஆடி கார் வழங்கப்பட்டு இருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில், இதற்கான மொத்த செலவு எப்படியிருந்தாலும் சுமார் 7இல் இருந்து 8 கோடி ரூபாய் வரையில் ஆகியிருக்கும்.


Click it and Unblock the Notifications








