வாலாஜாபேட்டை சம்பவம்... காரில் ஏசி போட்டு தூங்குவது ஏன் ஆபத்து? உயிரை பறிக்கும் அபாயம்!!
கார் பயணத்தில் களைப்பு ஏற்படும்போது, சாலையோரம் அல்லது பார்க்கிங் பகுதியில் காரை நிறுத்திவிட்டு ஏசியை ஓடவிட்டு சிறிது நேரம் தூங்குவது பலருக்கும் சாதாரண விஷயமாக உள்ளது. குறிப்பாக வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில், ஜன்னல்களை மூடிவிட்டு ஏசியை இயக்குவது பாதுகாப்பானதாகவே தோன்றும். ஆனால் இதுவே சில சூழ்நிலைகளில் உயிருக்கு ஆபத்தாக மாறக்கூடும்.
வாலாஜாபேட்டையில் காரில் ஏசி போட்டுத் தூங்கிய ஓட்டல் மேலாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் நீண்ட நேரமாகியும் காரிலிருந்து வெளியே வராததால் குடும்பத்தினர் சென்று பார்த்தபோது அவர் சுயநினைவின்றி இருந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

(Representative Image)
காரின் ஏசி இயங்குவதால் மட்டும் காருக்குள் கார்பன் மோனாக்சைடு உருவாகாது. தொடர்ந்து எஞ்சின் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் புகைப் போக்கி அமைப்பிலிருந்து கசியும் நச்சு வாயுக்கள் காருக்குள் இருக்கும் சிறிய துவாரங்கள் வழியாக உள்ளே நுழையும் நிலை உள்ளது. அவ்வாறு பெட்ரோல், டீசல் கார்களில் எரிபொருட்கள் எரியும்போது கார்பன் மோனாக்சைடு உள்ளிட்ட நச்சு வாயுக்கள் உருவாகி கசிவு காரணமாக கேபினுக்குள் செல்லும் வாய்ப்புகள் உண்டு.
இந்த வாயு நிறம் மற்றும் மணமற்றது என்பதால் அதை நாம் எளிதில் கண்டுபிடிக்க முடியாது. அதைவிட ஆபத்தான விஷயம், தூங்கிக் கொண்டிருக்கும் ஒருவருக்கு இதன் ஆரம்ப அறிகுறிகள் தெரியாது. அதிக அளவில் நச்சு வாயுக்கள் உடலுக்குள் செல்லும்போது சுயநினைவை இழக்கும் ஆபத்தும், உயிரிழப்பும் ஏற்படும் நிலையை உருவாக்குகிறது.
ஜன்னல்கள் முழுவதுமாக மூடப்பட்ட நிலையில் கார் நீண்ட நேரம் இயங்கினால், வெளியிலிருந்து காற்று வருவதும் தடைபடுகிறது. அதே நேரத்தில் புகைப்போக்கி அமைப்பு சேதம், கதிவு உள்ளிட்ட சில சூழல்களில் நச்சு வாயு கேபினுக்குள் நுழைந்தால் அதன் செறிவு அதிகரித்து மூர்ச்சையாக்கும் நிலையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக கார் கேரேஜ், காற்றோட்டம் குறைவான இடத்தில் நிறுத்தப்பட்டிருந்தால் ஆபத்து அதிகம் உள்ளது. இதற்கு வாகனத்தின் புகைப்போக்கி அமைப்பை முழுவதுமாக சோதிக்க வேண்டும்.
காரில் தூங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், எஞ்சினை இயக்கியபடி நீண்ட நேரம் தூங்குவதை தவிர்ப்பதே பாதுகாப்பானது. பாதுகாப்பான, காற்றோட்டமான இடத்தில் காரை நிறுத்திவிட்டு ஓய்வு எடுக்க வேண்டும். முடிந்தவரை ஹோட்டல், ஓய்வறை போன்ற பாதுகாப்பான இடத்தை பயன்படுத்துவது சிறந்தது.
தலைவலி, தலைசுற்றல், பலவீனம், வாந்தி உணர்வு, குழப்பம் அல்லது அதிக தூக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக காரை விட்டு வெளியேறி திறந்தவெளிப் பகுதிக்கு செல்ல வேண்டும். இவை நச்சு வாயுக்கள் காரணமாக ஏற்படும் அறிகுறிகளாக இருக்கும். இப்போது வரும் கார்களில் சிறப்பான காற்ற விஷயங்களுடன் வடிவமைக்கப்படுகின்றன. இருப்பினும், கொஞ்ச நேரம்தானே தூங்கப் போகிறோம் என்ற அலட்சியம் வேண்டாம்.
வாலாஜாப்பேட்டையில் காரில் தூங்கியவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பிரேதப் பரிசோதனை மற்றும் முழுமையான விசாரணை முடிவில்தான் உண்மையான காரணம் தெரியவரும். இருப்பினும், காரில் தூங்கும் நிலை வரும்போது அலட்சியம் வேண்டாம்.


Click it and Unblock the Notifications

