முதல்வர் ஆனதும் போட போகும் முதல் கையெழுத்து... அபராதம், தண்டனை எதுவும் கிடையாது!! இவரல்லவா புதிய முதல்வர்...
இந்தியா முழுவதுமே வாகனங்களை மாடிஃபிகேஷன் செய்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. குறிப்பாக, கடந்த சில வருடங்களாக இந்த கட்டுப்பாடுகள் தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகின்றன. இதனாலேயே சமீப காலத்தில் வாகனங்களை தங்களது விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொள்வது வெகுவாக குறைந்துள்ளது. வாகனங்களின் நிறத்தை மட்டுமே எந்தவொரு அனுமதியும் இன்றி மாற்றிக் கொள்ளலாம்; மற்றப்படி மற்ற மாடிஃபிகேஷன்கள் அனைத்திற்கும் அருகில் உள்ள ஆர்டிஓ-இல் அனுமதி பெற வேண்டும்.
இந்த விஷயத்தில் கேரள காவல் துறை மிக கடுமையாக உள்ளது. ஏனெனில், இந்தியாவிலேயே அதிகளவில் பைக் & கார் மாடிஃபிகேஷன்கள் நடக்கும் மாநிலமாக கேரளா இருந்தது. சமீப காலமாக கடுமையான கட்டுப்பாடுகளின் காரணமாக கேரளாவில் அந்த நிலை மாறியுள்ளது. இந்த நிலையில், கேரளாவில் புதிய ஆட்சி அமைந்துள்ளதால் வாகன மாடிஃபிகேஷன்கள் மீண்டும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

ஏனெனில், கேரள மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விடி சதீசன் ஓர் கார் மாடிஃபிகேஷன் பிரியராக உள்ளார். இன்னும் சொல்லப்போனால், தேர்தலுக்கான அவரது வாக்குறுதிகளில் வாகனங்களை மாடிஃபிகேஷன் செய்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்பது முக்கிய அறிவிப்பாக இருந்தது. இப்போதும் அதே நிலைப்பாட்டில் தான் விடி சதீசன் உள்ளார்.
இதுதொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில், "இதனை சட்டப்பூர்வமானதாக மாற்றுவோம் என நாங்கள் வாக்குறுதி அளித்து இருந்தால், அது நடக்கும்" என தெரிவித்துள்ளார். குறிப்பாக, இளம் தலைமுறையினரின் கனவுகளும், தேவைகளும் நிறைவேற்றப்படும் என கூறியிருப்பது கேரள ஆட்டோமொபைல் ஆர்வலர்கள் இடையே ஆர்வத்தை கூட்டியுள்ளது. அப்போது விடி சதீசன் கொடுத்த நகைச்சுவையான முக பாவனை கேரளாவில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தேர்தல் பிரச்சாரங்களின் போது, வாகன மாடிஃபிகேஷன்கள் குற்றமாக பார்க்கப்படாது என்றும், வாகனங்கள் மீது கொண்டுள்ள ஈடுப்பாட்டை மக்கள் சுதந்திரமாக வெளிப்படுத்த உரிமை வழங்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தார். இத்தகையவர் தான் தற்போது கேரள மாநிலத்திற்கு முதலமைச்சராக பொறுப்பேற்று உள்ளதால், கேரளாவில் வரும் காலங்களில் வாகனங்களை மாடிஃபிகேஷன் செய்வது அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் விளைவாக, தமிழ்நாடு உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட கேரள வாகனங்கள் புழக்கத்திற்கு வரலாம். அதேநேரம், மற்றவர்களுக்கு ஆபத்து விளைக்கும் வகையில் மாடிஃபை செய்யப்படும் வாகனங்களுக்கு வழக்கம்போல் முற்றிலுமாக தடை விதிக்கப்படும் என்றும் புதிய கேரள முதல்வர் விடி சதீஷன் தெரிவித்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகனங்கள் மாடிஃபிகேஷனுக்கு கண்மூடித்தனமாக தடை விதிக்காமல், கேரளாவின் புதிய முதலமைச்சர் கூறுவதை போல் ஆபத்து விளைவிக்கும் கார் மாடிஃபிகேஷன்களுக்கு மட்டும் தடை விதிக்கலாம். இது கார்களை மாடிஃபிகேஷன் செய்யும் கலையை ஊக்குவிக்கும். மேலும், இளம் தலைமுறையினரையும் மோட்டார்ஸ்போர்ட் துறையை நோக்கி தள்ளும். எல்லாவற்றையும் விட முக்கியமாக, கார் & பைக் உதிரி பாக சந்தை வளரும்.
இதை எல்லாம் மனதில் வைத்தே விடி சதீஷன் இவ்வாறான அறிவிப்பை தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தார். அதனை விரைவில் செயல்படுத்தவும் உள்ளார். இது கேரளாவில் இளம் தலைமுறையினர் இடையே கவனம் பெற்றதன் மூலமாகவே அது ஓட்டாக மாறியது; காங்கிரஸ் கட்சி வெற்றி பெறவும் உதவியுள்ளது. இருப்பினும், இந்த அறிவிப்பில் விதிமீறல்கள் நடக்கவும் வாய்ப்புள்ளதால், அறிவிப்பை எவ்வாறு சட்டமாக்க உள்ளனர் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications