வருஷத்துக்கு 2.5 லட்சம் கார்களை உற்பத்தி செய்யலாம்! டிரைவர் சீட்டில் நம் தமிழ்நாட்டு முதலமைச்சர்!
இந்தியாவின் தொழில் நில வரைபடத்தில் ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover - JLR) பிராண்டை அதிகாரப்பூர்வமாக இணைத்து, டாடா சன்ஸ் (Tata Sons) தலைவர் என்.சந்திரசேகரன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, தமிழ்நாட்டின் ராணிப்பேட்டையில் புதியதாக திறக்கப்பட்டுள்ள JLR கார் உற்பத்தி ஆலையின் மூலம், உலக அளவில் ஆடம்பர கார் தயாரிப்பில் டாடாவின் நிலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் உற்பத்தி ஆலையை ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கத்தில் இன்று திறந்து வைத்தார். இந்த புதிய ஆலையில் ஆண்டுக்கு 2.5 லட்சம் முதல் 3 லட்சம் கார்கள் தயாரிக்க முடியும் என டாடா குழுமத் தலைவர் என்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

ரேஞ்ச் ரோவர் எவோக் (Range Rover Evoque) கார்தான் இந்த ஆலையில் தயாரிக்கப்பட்ட முதல் கார் ஆகும். முதலமைச்சர் ஸ்டாலின் அதை வெளியிட்டார். மேலும், வெள்ளை நிறத்திலான அந்த எவோக் காரை டிரைவர் சீட்டில் அமர்ந்து தமிழ்நாட்டு முதலமைச்சர் ஓட்டியது பார்ப்போரை கவர்ந்தது. முதல்வர் காரை ஓட்ட, அவருக்கு அருகே காரின் முன் இருக்கையில் என்.சந்திரசேகரன் அமர்ந்திருந்தார்.
தொழிற்சாலைக்குள், காட்சி மேடையில் இருந்து எவோக் காரை ஓட்டி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதில் தொழிற்சாலையையும் சுற்றி பார்த்தார். ஜாகுவார் லேண்ட் ரோவர் பெயரில் டாடா குழுமம் கொண்டுவரும் இந்த ஆலையானது பெட்ரோல்/டீசல் என்ஜின் (ICE) கார்களையும், எலெக்ட்ரிக் கார்களையும் (Electric Cars) உற்பத்தி செய்ய பயன்படுத்தப்பட உள்ளது.

என்.சந்திரசேகரன் பேசுகையில், "இந்த புதிய ஆலை ஆனது ஜாகுவார் லேண்ட் ரோவர் பிராண்டின் குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தைக் குறிக்கிறது. இந்த பிராண்ட் தற்போது இங்கிலாந்து, ஆஸ்திரியா, சீனா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் உற்பத்தி ஆலையை மேற்கொண்டு வருகிறது. பனப்பாக்கம் ஆலை திறக்கப்பட்டதன் மூலம், இந்த ஆடம்பர கார் பிராண்டிற்கான உலகளாவிய தொழில்துறை வரைபடத்தில் இந்தியா அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டுள்ளது," என்றார்.
இந்த திட்டத்திற்கான அடிக்கல்லை 16 மாதங்களுக்கு முன்பு முதலமைச்சர் ஸ்டாலின் நாட்டியதை நினைவுகூர்ந்த என்.சந்திரசேகரன், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு தனது முழு ஆதரவையும் உறுதிப்படுத்தினார். இந்தத் திட்டம் நான்கு ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்பட வேண்டிய மூன்று கட்ட திட்ட அட்டவணையைப் பின்பற்றுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு தொழில்துறை, முதலீட்டு மேம்பாடு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறுகையில், ராணிப்பேட்டையில் புதிய ஜாகுவார் லேண்ட் ரோவர் உற்பத்தி ஆலை நிறுவப்படுவதால் 5,000 நேரடி வேலை வாய்ப்புகள் உருவாகும். ஆடம்பர ஜாகுவார் லேண்ட் ரோவர் பிராண்டின் இந்திய விரிவாக்கத்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்று அவர் எடுத்துரைத்தார்.

மேலும், "நீங்கள் பார்ப்பது முதல் கட்டம் மட்டுமே. இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களும் வந்து, முழு அளவிலான எண்ணிக்கையில் வாகனங்கள் வெளிவருவதைக் கற்பனை செய்து பாருங்கள்," என ராஜா நம்பிக்கை தெரிவித்தார். இவ்வாறு தமிழ்நாட்டிற்கு மேலும் பல முதலீடுகள் விரைவில் எதிர்பார்க்கப்படுவதாகவும், வரவிருக்கும் 'கட்டமைப்பு மாநாடு' மேடையில் கூடுதல் அறிவிப்புகள் வெளியாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மாநில அரசுக்கும், டாடா குழுமத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பே இந்தத் திட்டம் விரைவாக முடிவடைய காரணம் என்றும் அவர் பாராட்டினார். இந்த புதிய கார் உற்பத்தி ஆலைக்கான பணியாளர்கள் மாநிலம் முழுவதிலும் இருந்து, உள்ளூர் திறன் மேம்பாட்டு முயற்சிகளைப் பயன்படுத்தி நியமிக்கப்பட்டு வருகின்றனர். உள்ளூர் இளைஞர்களை இந்த பணிகளுக்காக தயார்படுத்துவதில் மாநில திறன் மேம்பாட்டுக் கழகத்தின் பங்கை ராஜா எடுத்துரைத்தார்.
இந்த ஆலையானது 9,000 கோடி ரூபாய் முதலீட்டில் 2024ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. இது ஆண்டுக்கு 2,50,000 வாகனங்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. முழுமையாகச் செயல்படத் தொடங்கியதும் 5,000க்கும் மேற்பட்டோர் இங்கு பணியாற்ற வாய்ப்புள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எம்.டி மற்றும் சி.இ.ஓ (பயணிகள் வாகனங்கள்) ஷைலேஷ் சந்திரா கூறுகையில், "எங்கள் பெரும்பாலான ஆலைகள் திறன் பற்றாக்குறையுடன் இயங்குகின்றன.

இன்னும் சில ஆண்டுகளில் பனப்பாக்கத்தில் முழு உற்பத்தி தேவைப்படும்," என்றார். தற்போதைய உற்பத்தி தொழிற்சாலைகளில் விரிவுபடுத்துவதற்கு போதுமான இடம் இல்லாததால், ஆரம்ப கட்டத்தில் அசெம்பிள் (Assemble) நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்படும் என்றார். தற்போது, மகாராஷ்டிராவில் உள்ள புனே ஆலையில், சிகேடி (CKD) முறையில் வெளிநாடுகளில் இருந்து பாகங்கள் கொண்டுவரப்பட்டு, முழு ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் அசெம்பிள் செய்யப்படுகின்றன.
அதேநேரம் மற்ற டாடா கார்கள் முழுமையாக புனே தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. புனேவில் இருந்து சென்னைக்கு இந்த உற்பத்தி மாற்றப்படுமா என்று கேட்டபோது, சந்திரா இது குறித்து பின்னர் தெளிவுபடுத்தப்படும் என்று கூறினார். இப்போதைக்கு புதிய ராணிப்பேட்டை ஆலையில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் அசெம்பிள் பணிகள் தொடங்குவது மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜாகுவார் லேண்ட் ரோவர் பிராண்டிற்கு ஒரு நீண்ட கால சந்தையாக இந்தியாவின் முக்கியத்துவத்தை இந்த புதிய ஆலை மீண்டும் நினைவுக்கூர்கிறது. இந்தியாவில் இந்த நிறுவனத்தின் விற்பனை இன்னும் மற்ற ஆடம்பர போட்டியாளர்களை விட குறைவாக இருந்தாலும், உள்ளூர் அசெம்பிளி மற்றும் திறன் விரிவாக்கத்தின் மூலம் இந்தியாவில் ஜாகுவார் லேண்ட் ரோவர் நெட்வொர்க்கை வலுப்படுத்த டாடா நிர்வாகம் உறுதிபூண்டுள்ளது.
வருடத்திற்கு சுமார் 2.5 லட்சம் கார்கள் உற்பத்தி என்பது நாட்டின் தற்போதைய ஆடம்பர கார் தேவைக்கு அதிகமாக இருந்தாலும், எதிர்கால விரிவாக்கத்திற்கும், ஏற்றுமதிக்கான வாய்ப்புகளுக்கும் இது இடமளிக்கிறது. இன்னும் சொல்லப்போனால், எதிர்காலத்தில் டாடா நிறுவனம் தனது டாடா கார்களை இங்கு உற்பத்தி செய்ய ஆரம்பிக்கலாம்.


Click it and Unblock the Notifications









