முதல்வர் ஸ்டாலின் லேண்ட்ரோவர் கார் 100 கிமீ வேகத்தில் சென்றபோது டயர் வெடித்ததால் பரபரப்பு!
திண்டுக்கல் அருகே, முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் செய்த லேண்ட்ரோவர் காரின் டயர் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் உயர்தர பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட முதல்வரின் லேண்ட்ரோவர் எஸ்யூவி இவ்வாறு விபத்துக்குள்ளானது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், ரூ.1,500 கோடி மதிப்பிலான புதிய வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதோடு, 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, மதுரை நோக்கி முதல்வர் ஸ்டாலின் தனது லேண்ட்ரோவர் டிஃபென்டர் 110 SE எஸ்யூவி காரில் புறப்பட்டார். அப்போது திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த போது, அவரது காரின் டயர் திடீரென வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் சில நிமிடங்கள் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலின்படி, முதல்வரின் கார் சுமார் 100 கிமீ வேகத்திற்கும் மேல் சென்றுகொண்டிருந்த நேரத்தில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், நல்வாய்ப்பாக பெரிய விபத்து ஏதும் ஏற்படவில்லை. பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி உடனடியாக முதல்வர் வேறு பாதுகாப்பு காரில் மாற்றப்பட்டு மதுரை சென்றார்.

முதல்வர் ஸ்டாலின் பயன்படுத்தி வரும் Land Rover Defender 110 SE என்பது உலகளவில் புகழ்பெற்ற, உயர் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட பிரீமியம் எஸ்யூவி வகையை சேர்ந்தது. இந்த காரில் Tyre Pressure Monitoring System (TPMS), டியூப்லெஸ் வகை All-Terrain டயர்கள், அனைத்து வகை சாலைகளிலும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த எஸ்யூவியில் பொருத்தப்பட்டுள்ள டயர்கள் உயர்தர 20-இன்ச் அலாய் சக்கரங்களில் அமைக்கப்பட்டவை. மேலும், அதிவேக பயணத்தின் போது அவசரமாக பிரேக் பிடிக்கும்போது சக்கரங்கள் கட்டுப்பாட்டை இழக்காமல் பாதுகாக்கும் ABS, EBD, Emergency Brake Assist போன்ற அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. இந்த அம்சங்களே டயர் வெடித்த போதும் காரை பாதுகாப்பாக கட்டுப்படுத்த உதவியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த முதல்வர் பயன்படுத்தும் லேண்ட்ரோவர் கார் இவ்வாறு விபத்து நிலையை சந்தித்தது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தினாலும், அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
பொதுவாக குடியரசுத் தலைவர், பிரதமர், முதல்வர் போன்ற உயர்பதவியிலுள்ளவர்கள் பயன்படுத்தும் வாகனங்கள், அரசின் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் பாதுகாப்புத் துறையினரின் பரிந்துரைகளுக்கு இணங்க மிக உயர்ந்த தரத்தில் தேர்வு செய்யப்படுகின்றன. இத்தகைய சூழ்நிலைகளில் இந்த கார்களில் உள்ள நவீன பாதுகாப்பு அம்சங்கள் விபத்துக்களை தவிர்த்து பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கிய காரணமாக அமைகின்றன.


Click it and Unblock the Notifications








