பரிசாக கிடைத்தாலும் 18 வயசு ஆகும் வரை ஓட்ட முடியாது! ஷோரூமுக்கு கூட்டிட்டு வந்து தந்தையை பெருமைப்படுத்திட்டார்
15 வயது கூட இன்னும் முழுமையாக நிறைவடையாத இளம்பருவத்தில் இவ்வளவு பெரிய அங்கீகாரத்தைப் பெறுவது என்பது அபூர்வமான ஒன்று. கிரிக்கெட் உலகின் புதிய இளம் புயலாக உருவெடுத்துள்ள வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi), தனது நம்பமுடியாத ஆட்டத்தால் பீகார் (Bihar) அரசின் பரிசுகளை அள்ளிக் குவித்துள்ளார். அவரது திறமையை கௌரவிக்கும் வகையில், பீகார் மாநில அரசு பொன்னான பரிசுகளை வாரி வழங்கியுள்ளது.
அதுமட்டுமின்றி, ஒரு பிராண்ட்-நியூ டாடா கர்வ் (Tata Curvv) காரும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. வைபவ், 2011 மார்ச் 27 அன்று பீகாரின் மிதிலா பிரதேசத்தின் சமாஸ்திபுர் மாவட்டத்தில் உள்ள தாஜ்பூரில் பிறந்தார். வெறும் 4 வயதிலேயே கிரிக்கெட் பயிற்சியைத் தொடங்கினார். ஐபிஎல் (IPL) தொடரில், கடந்த ஆண்டு முதல் ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals) அணியுடன் இணைந்து விளையாடி வருகிறார்.

உள்நாட்டுப் போட்டிகளில் பீகார் அணிக்காகவும் சிறப்பான பங்களிப்பைச் செய்து வருகிறார். சமீபத்தில் நிறைவடைந்த 2026ஆம் ஆண்டிற்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இதில் வைபவ் சூர்யவன்ஷி முக்கியப் பங்காற்றினார். இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக வெறும் 80 பந்துகளில் 175 ரன்கள் குவித்து அசத்தினார்.
இந்த கிரிக்கெட் தொடரில் மொத்தமாக 7 ஆட்டங்களில் 439 ரன்கள் எடுத்து தொடர் நாயகன் விருதையும் வென்றார். வைபவின் இந்த அசாதாரண திறமையை அங்கீகரிக்கும் விதமாக, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், அவருக்கு ரூ.50 லட்சத்தை சிறப்புப் பரிசாக வழங்கியுள்ளார். மேலும், ஒரு புதிய டாடா கர்வ் காரும் அவருக்குப் பரிசளிக்கப்பட்டுள்ளது.

பிராண்ட்-நியூ கர்வ் கார், பாட்னாவில் உள்ள டாடா ஷோரூமில் வைபவ் மற்றும் அவரது தந்தை முன்னிலையில் வழங்கப்பட்டதை டாடா கர்வ் கார்களுக்கான டாடா மோட்டார்ஸின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்வ் ஆனது டாடா மோட்டார்ஸின் லேட்டஸ்ட் கார்களுள் ஒன்றாகும்.
நெக்ஸான் (Nexon), பன்ச் (Punch) கார்களின் வெற்றியை தொடர்ந்து டாடா நிறுவனம் புதுமையான கூபே-ஸ்டைலில் உருவாக்கிய எஸ்யூவி (SUV) ரக கார் தான், கர்வ் ஆகும். 2024ஆம் ஆண்டின் இறுதியில் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட கர்வ் பின்னர் கர்வ் இவி என எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகவும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இளம் கிரிக்கெட் வீரர் சூர்யவன்ஷிக்கு தற்போது வழங்கப்பட்டு இருப்பது இவி-அல்லாத டாடா கர்வ் கார் ஆகும். 1.2 லிட்டர் ரெவோட்ரான் டர்போ-பெட்ரோல் என்ஜின், 1.2 லிட்டர் ஹைபீரியன் ஜிடிஐ பெட்ரோல் என்ஜின், 1.5 லிட்டர் க்றையோஜெட் டீசல் என்ஜின் என 3 விதமான என்ஜின் ஆப்ஷன்களில் கர்வ் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
ரூ.9.66 லட்சம்- ரூ.22.24 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலைகளில் விற்பனை செய்யப்படும் கர்வ் பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் 5-ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. 4.3 மீட்டர் நீளம், 1.8 மீட்டர் அகலத்தை கொண்ட இந்த டாடா காரின் பின்பக்கத்தில் 500 லிட்டர்கள் கொள்ளளவில் பூட் ஸ்பேஸ் (Boot Space) வழங்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 18 வயதுக்குப் பிறகுதான் வைபவ் சூர்யவன்ஷியால் காரை ஓட்ட முடியும் என்பது ஒருபுறம் இருந்தாலும், இந்த அங்கீகாரம் இந்தியாவின் அடிமட்ட அளவில் கூட கிரிக்கெட்டின் செல்வாக்கையும் பிரபலத்தையும் எடுத்துக்காட்டுகிறது. டாடா கர்வ் கார் ஒன்று பரிசாக வழங்கப்படுவது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட எஸ்யூவி கார்கள் இளைஞர்களிடையே எந்த அளவிற்கு வெற்றியின் அடையாளமாக மாறி வருகின்றன என்பதை பிரதிபலிக்கிறது.


Click it and Unblock the Notifications









