பெட்ரோல், சிஎன்ஜி டூ-வீலர்களை வாங்கினாலும் ஆர்டிஓ-இல் பதிவு செய்ய முடியாது! மே முதல் புதிய கட்டுப்பாடு அமல்!
டெல்லி (Delhi) அரசாங்கம் 2026-2030ஆம் ஆண்டு வரையிலான மாநிலத்தின் எலெக்ட்ரிக் வாகன (Electric Vehicles) கொள்கை திட்டத்திற்கான வரைமுறைகளை வெளியிட்டுள்ளது. இதில், பல அறிவிப்புகள் இருந்தாலும், நம்மை பெரிதும் ஆச்சிரியப்படுத்துவது, 2028 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பெட்ரோல், சிஎன்ஜி (CNG) இருசக்கர வாகனங்களுக்கு முற்றிலுமாக தடை என்கிற அறிவிப்பாகும்.
இந்தியா மெல்ல மெல்ல எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி நகர்ந்து வருகிறது. மத்திய அரசு அதற்கான நடவடிக்கைகளில் கடந்த பல வருடங்களாகவே ஈடுப்பட்டு வருகிறது. இதன் மூலமாக, 2030ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் வாகனங்களில் குறைந்தது 30 சதவீதத்தை ஆவது எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்றிவிட வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

நாடு முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்றால், முதலில் நாட்டின் தலைநகரில் அதனை தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் அல்லவா. அதனை மனதில் வைத்தே டெல்லி மாநில அரசாங்கம் 2030 மார்ச் 31ஆம் தேதி வரையில் அமலில் இருக்கும் புதிய 2026 டெல்லி இவி கொள்கை திட்டத்திற்கான வரைவை தயாரித்து வெளியீடு செய்துள்ளது.
டெல்லி அரசின் இந்த புதிய கொள்கை நேரடியாக அமல்படுத்தப்பட போவதில்லை. வழக்கம்போல், 30 நாட்களுக்கு மக்களின் கருத்துகளை கேட்டறிந்த பின், மே 10ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக சமர்பிக்கப்பட உள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், இந்த புதிய இவி கொள்கையின்படி டெல்லியில் 2028 ஏப்ரல் 1க்கு பிறகு வழக்கமான பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி 2-வீலர்களை ஆர்டிஓ (RTO)-இல் பதிவு செய்ய முடியாது.

எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்படும். 2-வீலர்களுக்கு 2028இல் இருந்து இந்த திட்டம் அமலுக்கு வருகிறது என்றால், 3-வீலர்களுக்கு அதற்கு முன்னதாகவே 2027ஆம் ஆண்டில் இருந்தே புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. இதன்படி, 2027 ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து டெல்லியில் எலெக்ட்ரிக் 3-வீலர்கள் மட்டுமே ஆர்டிஓ பதிவுக்கு அனுமதிக்கப்பட உள்ளன.
அதாவது, இன்னும் 8 மாதங்களில் டெல்லியில் பெட்ரோல், சிஎன்ஜி உள்ளிட்ட மாற்று எரிபொருளில் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களை புதியதாக பதிவு செய்ய முடியாது. இந்த புதிய கட்டுப்பாடுகள் பயணிகள் வாகனங்களுடன் சேர்த்து கமர்ஷியல் வாகனங்களுக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. டெல்லியில் ஏற்கனவே கடந்த ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து பெட்ரோல்/டீசலில் இயங்கும் வாகனங்களை ஏற்றுமதி, இறக்குமதி பணிகளுக்கு பயன்படுத்துவதற்காக பதிவு செய்வது ரத்து செய்யப்பட்டுவிட்டது.
இதனால், 2026 ஜனவரி 1ஆம் தேதியில் இருந்தே எலெக்ட்ரிக்-அல்லாத இருசக்கர வாகனங்களில் இருந்து 3.5 டன்கள் வரையில் எடை கொண்ட கமர்ஷியல் வாகனங்களை அவ்வாறான கமர்ஷியல் பயன்பாடுகளுக்காக புதியதாக பதிவு செய்ய முடியாத நிலை டெல்லியில் உள்ளது. இருப்பினும், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பெட்ரோல், டீசல், சிஎன்ஜி வாகனங்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், வருகிற 2026 டிசம்பர் 31க்கு பின் அவற்றின் பயன்பாட்டிற்கும் தடை விதிக்கப்படும் என புதிய இவி கொள்கையில் டெல்லி அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
கட்டுப்பாடுகளுடன் சேர்த்து, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மானியத்தையும் புதிய இவி கொள்கையில் குறிப்பிட்டுள்ள டெல்லி அரசாங்கம், அதன்படி ரூ.2.25 லட்சம் வரையில் விலை கொண்ட எலெக்ட்ரிக் வாகனங்கள் அவற்றின் பேட்டரி திறனை பொறுத்து மானியத்தை பெறவுள்ளன. மேலும், பழைய எரிபொருள் என்ஜின் வாகனங்களை முறையாக அழித்து எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோருக்கு சுமார் ரூ.1 லட்சம் வரையிலான மானியமும், சாலை வரி கட்டணத்தில் கணிசமான சலுகையும் வழங்கப்படும் எனவும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய இவி கொள்கையின் இந்த திட்டங்கள் அனைத்தும் டெல்லியில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்கப்படுத்துவதற்காகவே ஆகும். ஏனெனில், பனிகாலத்தில் டெல்லியில் ஏற்படும் மாசு உமிழ்வில் வாகனங்களின் பங்களிப்பு மட்டும் 23% என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதனை குறைக்கவும், மத்திய அரசின் 2030ஆம் ஆண்டிற்கு உள்ளான 30% எலெக்ட்ரிக் வாகனங்கள் இலக்கை அடையவும் புதிய டெல்லி இவி கொள்கை கொண்டுவரப்படுகிறது. இருப்பினும், தற்போதைக்கு இது மக்களின் கருத்துகளை கேட்கும் நிலையில் உள்ளதால், மே 10இல் சமர்பிக்கப்படும் போது திட்டங்களில் சில மாறுதல்கள் இருப்பதற்கும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








