சென்னை மெட்ரோக்கு நிதி கொடுக்க தான் யோசிக்குறாங்க... மற்றப்படி, நியூயார்க்கை பின்னுக்கு தள்ளும் டெல்லி மெட்ரோ!
இந்தியர்களின் அன்றாட போக்குவரத்தில் மெட்ரோ இரயில்கள் முக்கியமானதாக மாறி வருகின்றன. ஒவ்வொரு நாளும் பல இலட்சக்கணக்கிலான இந்திய மக்கள் மெட்ரோ இரயில்களை பயன்படுத்துவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இத்தனைக்கும் இந்தியாவின் முக்கிய மாநகரங்களில் மட்டுமே தற்போதைக்கு மெட்ரோ இரயில் சேவை உள்ளது; அனைத்து நகரங்களுக்கும் விரிவுபடுத்தும் பணிகள் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதேநேரம், ஏற்கனவே மெட்ரோ இரயில் சேவை உள்ள நகரங்களிலும் வழித்தடங்களை விரிவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் கூட 2ஆம் கட்ட விரிவாக்கமாக மாதவரத்தில் இருந்து சிப்காட் மற்றும் சோழிங்கநல்லூர் வரையில் இரு மெட்ரோ இரயில் வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தலைநகர் டெல்லியிலும் மெட்ரோ இரயில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.

டெல்லி மெட்ரோவின் 4ஆம் கட்ட விரிவாக்கமாக கோல்டன் லைன் ஆக ஏரோசிட்டி- துக்லகாபாத் இடையே 23.62கிமீ தொலைவிற்கு மெட்ரோ இரயில் வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 19.3கிமீ ஆனது நிலத்திற்கு அடியில் அமைக்கப்படுகிறது. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த 2026ஆம் ஆண்டு முடிவதற்கு உள்ளாக இந்த விரிவாக்க பணிகள் நிறைவு பெற்றுவிடும்.
இந்த 23.62கிமீ விரிவாக்கம் மூலம் உலகளவில் மெட்ரோ இரயில் சேவையில் டெல்லி புதிய சாதனையை படைக்க உள்ளது. அது என்னவென்றால், உலகிலேயே அதிக தொலைவிற்கு மெட்ரோ இரயில் வழித்தடத்தை கொண்ட நகரமாக டெல்லி முதலிடம் பிடிப்பதாகும். தற்போதைக்கு இந்த பட்டம் ஆனது அமெரிக்காவின் நியூயார்க்கிடம் உள்ளது. இந்த பட்டத்தை பல வருடங்களாக தன்வசம் வைத்திருக்கும் நியூயார்க்கில் 399கிமீ தொலைவிற்கு மெட்ரோ இரயில் வழித்தடம் உள்ளது.

அதுவே, டெல்லியில் தற்போதைக்கு 394கிமீ தொலைவிற்கு மெட்ரோ இரயில் வழித்தடம் உள்ளது. ஏரோசிட்டி- துக்லகாபாத் இடையேயான 23.62கிமீ தொலைவு விரிவாக்க பணிகள் முடிந்த பின் மொத்த வழித்தட தொலைவு 400கிமீ என்கிற இமாலய மைல்கல்லை கடந்து உலகின் நீண்ட மெட்ரோ இரயில் சேவை கொண்ட நிர்வாகமாக டெல்லி மெட்ரோ நிர்வாகம் மாறவுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் மக்களால் தினந்தோறும் மேற்கொள்ளப்படும் மெட்ரோ இரயில் பயணங்களில் 55% ஆனது டெல்லியில் மேற்கொள்ளப்படுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. டெல்லி மெட்ரோ சேவையின் 4ஆம் கட்ட விரிவாக்கம் ஆனது நீளமானதாக மட்டுமின்றி, நிலத்திற்கு அடியில் ஆழமானதாகவும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணியில் 97 மீட்டர் நீளம் கொண்ட சுரங்கம் துளையிடும் போரிங் மெஷின் பயன்படுத்தப்படுகிறது.
இதன் மூலமாக 1.5கிமீ தொலைவிற்கு சுமார் 26 மீட்டர் ஆழத்தில் மெட்ரோ இரயில் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. டெல்லி மெட்ரோ சேவையில் இந்த அளவிற்கு ஆழமாக வழித்தடம் வேறு எங்கும் அமைக்கப்பட்டது இல்லை. டெல்லி மெட்ரோ இரயில் சேவையை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்தவரையில், கடந்த 2025ஆம் வருட இறுதியில் ஒரே நாளில் சுமார் 81 இலட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்தனர்.
டெல்லி மெட்ரோவில் 121கிமீ தொலைவிற்கு டிரைவர் இல்லா மெட்ரோ இரயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக டிரைவர் இல்லாமல் இயங்கக்கூடிய 80 மெட்ரோ இரயில்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறான ஆட்டோமேட்டட் மெட்ரோ இரயில் நெட்வொர்க்கை கொண்டிருப்பதில் ஏற்கனவே உலகின் நம்பர் ஒன் நகரமாக டெல்லி விளங்குகிறது. இதுமட்டுமின்றி, க்யூ.ஆர் டிக்கெட், ரீஜெனரேட்டிவ் பிரேக் மற்றும் சூரிய ஒளி மூலம் செயல்படும் இரயில் நிலையங்கள் உள்ளிட்டவற்றிலும் டெல்லி மெட்ரோ சிறந்து விளங்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகிலேயே அதிக தொலைவிற்கு மெட்ரோ இரயில் சேவையை கொண்ட நகரங்களில் டெல்லி முதலிடத்தை பிடிப்பது டெல்லிக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பெருமையாகும். ஒட்டுமொத்தமாக, அதிக தொலைவிற்கு மெட்ரோ இரயில் வழித்தடத்தை கொண்ட நாடுகள் வரிசையில் இந்தியாவுக்கு முன்னால் தற்போதைக்கு சீனா மட்டுமே உள்ளது. சீனாவை இந்த விஷயத்தில் இந்தியா முந்தும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
தலைப்பில் தவறுதலாக 'நீதி' என வழங்கப்பட்ட நிலையில், 'நிதி' என சரிச்செய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications