விதிமுறைகள் கடுமையாகிறது... இனி லைசென்ஸை புதுப்பிப்பது ஈஸியான காரியம் அல்ல... மத்திய அரசு அதிரடி!
உலகிலேயே சாலை விபத்துக்களால் அதிக உயிர்களை பறிகொடுக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இங்கு போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் அதிகம் என்பதுதான் இதற்கு மிகவும் முக்கியமான ஒரு காரணமாக இருக்கிறது. எனவே மத்திய அரசு கடந்த சில வருடங்களாகவே போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக்கி வருகிறது.
போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் கடந்த காலங்களில் மிக கடுமையாக உயர்த்தப்பட்டதை இதற்கு ஒரு உதாரணமாக கூறலாம். இந்த வரிசையில் கூடிய விரைவில் இந்தியாவில் மற்றொரு மிக முக்கியமான மாற்றம் ஒன்று நடைபெறவுள்ளது. இது குறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

புதிய விதிமுறைகளின்படி, இனிமேல் உங்கள் டிரைவிங் லைசென்ஸை புதுப்பிக்க சென்றால், நீங்கள் மீண்டும் டிரைவிங் சோதனைகளை மேற்கொள்ள நேரிடலாம். நீங்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறியிருந்தால், டிரைவிங் லைசென்ஸ் புதுப்பித்தலின்போது, மீண்டும் டிரைவிங் சோதனைகளை செய்ய வேண்டிய சூழல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
போக்குவரத்து விதிமுறைகளை மீறிய நபர்கள் டிரைவிங் லைசென்ஸை புதுப்பிக்கும்போது, அவர்கள் மீண்டும் டிரைவிங் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இந்த புதிய விதிமுறை கூடிய விரைவில் அமலுக்கு வரலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதவிர மற்றொரு மிக முக்கியமான மாற்றம் ஒன்றும் கூடிய விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது தற்போதைய நிலையில் சாலை விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இடைக்கால இழப்பீடு எதுவும் கிடையாது. மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயங்களால் (Motor Accident Claims Tribunals - MACTs), பாதிக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால நிவாரணம் எதையும் வழங்க முடியாது.
பாதிக்கப்பட்டவர்களின் விவகாரம் இறுதியாக தீர்க்கப்படும் வரை அவர்கள் காத்திருக்க வேண்டும். அதற்கு பிறகுதான் இழப்பீடு மற்றும் நிவாரணம் கிடைக்கும். ஆனால் இதற்கு பதிலாக இனிமேல் சாலை விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கும் அதிகாரத்தை, மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயங்களுக்கு வழங்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் கூடிய விரைவில் அமலுக்கு வரும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்கள் டிரைவிங் லைசென்ஸை புதுப்பிக்க வேண்டும் என்றால் மீண்டும் டிரைவிங் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. இதன் மூலம் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவது கட்டுப்படுத்தப்படும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.
அத்துடன் சாலை விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை விவகாரம் முடியும் வரை காத்திருக்க வைக்காமல் இடைக்கால நிவாரணம் வழங்குவதும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். இந்த இடைக்கால நிவாரணம், அவர்கள் பாதிப்பில் இருந்து விரைவாக மீண்டு வருவதற்கு உதவி செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இது போன்ற நடவடிக்கைகளுடன் இந்தியா முழுவதும் சாலைகளின் தரத்தை உயர்த்தவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் நாங்கள் கருதுகிறோம். ஏனெனில் மோசமான சாலைகளும், விபத்துக்களுக்கு மிகவும் முக்கியமான காரணமாக இருக்கின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications