ஒரு வண்டி கூட தாங்காது! 85% எத்தனால் கலந்த பெட்ரோலை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் மத்திய அரசு!
இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்படும் பெட்ரோலில் (Petrol) 20 சதவீதம் எத்தனால் (Ethanol) கலக்கப்படுகிறது. இதை E20 எரிபொருள் என அழைக்கின்றனர். பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலக்க வேண்டும் என்ற இலக்கு இந்தியாவில் வெகு சமீபத்தில்தான் எட்டப்பட்டது. இதனால் இந்தியாவிற்கு பல்வேறு நன்மைகள் கிடைக்க தொடங்கியுள்ளன.
எத்தனாலை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய முடியும். கரும்பு மற்றும் மக்காச்சோளம் போன்றவற்றில் இருந்து எத்தனாலை தயாரிக்கலாம். எனவே எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்தினால், இந்தியாவை சேர்ந்த விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். E20 எரிபொருள் மூலம் தற்போதே இந்திய விவசாயிகளுக்கு பலன் கிடைக்க தொடங்கி விட்டது.

பெட்ரோல் உடன் 20 சதவீதம் எத்தனாலை கலப்பதன் மூலமாக இந்திய விவசாயிகளுக்கு சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருப்பதாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (Society of Indian Automobile Manufacturers - SIAM) மதிப்பிட்டுள்ளது. அத்துடன் இதன் மூலம் இந்தியாவின் அந்திய செலாவணி கையிருப்பில் 43 ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டிருப்பதாகவும் அந்த அமைப்பு கணித்துள்ளது.
பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய்யை (Crude Oil) அதிகளவு இறக்குமதி செய்வதன் காரணமாக இந்தியாவின் அந்திய செலாவணி கையிருப்பில் மிகப்பெரிய பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ஆனால் எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்துவதன் மூலம் அந்திய செலாவணியை சேமித்து, இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்த முடியும்.

அத்துடன் எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்துவதன் மூலம், காற்று மாசுபாடு (Air Pollution) பிரச்சனையையும் குறைக்க முடியும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. எனவே அடுத்தகட்டமாக E85 எரிபொருளை அறிமுகம் செய்ய மத்திய அரசு தயாராகி வருகிறது. அதாவது பெட்ரோல் உடன் 85 சதவீத எத்தனாலை கலந்து தயாரிக்கப்படுவதுதான் E85 எரிபொருள் ஆகும்.
E85 எரிபொருளை அறிமுகம் செய்வதற்கான வரைவு அறிக்கை தயாராகி விட்டதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூடிய விரைவில் அந்த வரைவு அறிக்கை வெளியிடப்படும் எனவும் கூறப்படுகிறது. இது குறித்து ஈடி ஆட்டோ தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இது வரைவு அறிக்கை மட்டுமே என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
E85 எரிபொருள் எப்போது பயன்பாட்டிற்கு வரும்? என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் இதற்கு சற்று அதிக காலம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் தற்போது பயன்பாட்டில் உள்ள வாகனங்களின் இன்ஜின்களில் E85 எரிபொருளை பயன்படுத்துவது மிகவும் சிரமம். குறிப்பாக பழைய வாகனங்கள் என்றால், சொல்லவே வேண்டாம்.
அவற்றின் செயல்திறனில் பாதிப்புகள் ஏற்படலாம். அத்துடன் அதிக எத்தனால் காரணமாக அவற்றின் பாகங்களும் பாதிக்கப்படலாம். எனவே வாகனங்களின் இன்ஜின்களின் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் தேவை. அத்துடன் தற்போது உள்ள பெட்ரோல் பங்க்குகளில் E85 எரிபொருளை சேமிப்பதும் சிரமம். அதற்கென தனியாக சேமிப்பு மற்றும் வினியோக அமைப்புகளை உருவாக்க வேண்டும்.
எனவே E85 எரிபொருளை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வந்தால் பல்வேறு சிரமங்கள் ஏற்படும். இது மத்திய அரசுக்கும் நன்றாக தெரியும். எனவே உடனடியாக E85 எரிபொருள் நடைமுறைக்கு வராது. அதை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றால், பல்வேறு மட்டங்களில் பல்வேறு மாற்றங்கள் தேவைப்படுகின்றன. அவற்றை எல்லாம் செய்து முடித்த பிறகு, E85 எரிபொருளை பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகளில் E85 எரிபொருள் ஏற்கனவே விற்பனையில் உள்ளது. ஆனால் ஒரு சில நாடுகள் E85 எரிபொருளுக்கு மாறி விட்டு, மீண்டும் E10 எரிபொருளுக்கே (பெட்ரோல் உடன் 10 சதவீத எத்தனால் கலப்பு) வந்து விட்டன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
எனவே இந்தியாவில் E85 எரிபொருளை நடைமுறைக்கு கொண்டு வருவதாக இருந்தால், அதற்கு தேவையான ஏற்பாடுகளை சரியாக செய்ய வேண்டும். அதற்கு பிறகு E85 எரிபொருளை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். ஆனால் E85 எரிபொருள் பயன்பாட்டிற்கு வந்தால், கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்து, இந்தியாவின் பொருளாதாரம் உயர்வதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன.


Click it and Unblock the Notifications








