விஜய் ஆட்சியில் ஆவது சாலைகளில் இந்த மாற்றம் நடக்குமானு பார்ப்போம்... தினந்தோறும் எத்தனையோ உயிர்கள் பலியாகுது!
சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதிப்பது டெல்லியில் முழுவதுமாக டிஜிட்டலாக மாறியுள்ளது. அதாவது, விதிமீறல்களில் ஈடுப்படுவோரை சாலையெங்கிலும் வைக்கப்பட்டுள்ள கேமராக்கள் மூலம் கண்காணித்து இ-செல்லானை இ-மெயிலுக்கு அனுப்பும் நடைமுறையை டெல்லியில் கடைப்பிடிக்க துவங்கியுள்ளனர். முன்னதாக நகரத்தின் முக்கியமான சாலைகளில் மட்டுமே இந்த முறையை பின்பற்றி வந்த நிலையில், தற்போது மாநிலம் முழுவதும் பின்பற்றப்படுகிறது.
நம் தமிழ்நாட்டிலும் சென்னை, கோவை உள்ளிட்ட மாநகரங்களில் முக்கிய பகுதிகளில் உள்ள சாலைகளில் இவ்வாறான டிஜிட்டல் இ-செல்லான் (Digital E-challan) முறையை போலீசார் பின்பற்றுகின்றனர். டெல்லியை போன்று சென்னையிலும் இந்த முறை அனைத்து சாலைகளிலும் வரும் காலம் வெகு தொலைவில் இல்லை. இளைஞர் பட்டாளமாக நடிகர் விஜய்யின் தவெக கட்சி ஆட்சியமைக்க உள்ளதால், டிஜிட்டல் இ-செல்லான் போன்ற அட்வான்ஸான, ஏஐ-சார்ந்த அம்சங்களை மாநிலத்தின் உள்கட்டமைப்புகளில் எதிர்பார்க்கலாம்.

டிஜிட்டல் இ-செல்லான் முறையில், போக்குவரத்து விதிமீறல்களில் யார் ஈடுப்பட்டு இருந்தாலும், வாகனத்தின் உரிமையாளருக்கு தான் அபராதம் ஆகும். வாகன திருடு போய் இருந்தாலோ அல்லது வாடகை/குத்தகைக்கு விடப்பட்டு இருந்தாலோ மட்டுமே அதுதொடர்பான ஆவணங்கள் உடன் அபராதத்திற்கு மறுப்பு சொல்ல முடியும். டிஜிட்டல் இ-செல்லான் முறை எவ்வாறு செயல்படுகிறது என்றால், போக்குவரத்து விதிமீறலில் வாகனம் ஈடுப்படுத்தப்பட்ட 3 நாட்களுக்குள் சம்மந்தப்பட்ட வாகன உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும்.
வாகன உரிமையாளரின் இ-மெயிலுக்கு இ-செல்லானாக அபராதம் அனுப்பப்படும். அபராதத்தை செலுத்தாவிட்டால், அடுத்த 15 நாட்களில் வீட்டிற்கே நேரடியாக நோட்டீஸ் அனுப்பப்படும். இ-மெயில் அனுப்பப்பட்டு 45 நாட்கள் வரையிலும் அபராதத்தை செலுத்தாவிட்டால், நீதிமன்றத்தில் பெரிய தொகையை அபராதமாக செலுத்த வேண்டிவரும்.

நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதற்கு முன்பாக அபராதத்தில் 50%-ஐ செலுத்த வேண்டும் என போலீசார் கூறுவர்.. இவ்வாறு 50% அபராதம் செலுத்தும் பட்சத்தில், நீதிமன்றத்திற்கு செல்லாமல் அபராதத்தை செலுத்த இன்னும் கூடுதலாக ஒரு 15 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்படும் அபராதங்கள் குறித்த அனைத்த விபரங்களும் போலீசாரால் டிஜிட்டலாக சேமித்து வைக்கப்படுகிறது.
இதனால், ஒரு வருடத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட தடவை விதிமீறல்களில் ஈடுப்படும் வாகன ஓட்டிகளை அடையாளம் கண்டு, அவர்களது வாகன ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ரத்து செய்யும் அதிகாரம் போலீசாருக்கு உள்ளது. இன்னும் சொல்லப்போனால், வாகனங்களும் பறிமுதல் செய்யப்படலாம். பெருங்குற்றங்களுக்காக அபராதத்துடன், சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படுவதற்கும் வாய்ப்புள்ளது.
அபராதம் செலுத்தாதவரை வஹான் (VAHAN) தளத்தை முழுவதுமாக பயன்படுத்த முடியாது. வாகனத்திற்கான மற்ற கட்டணங்களை வஹான் வாயிலாக செலுத்த முடியாது. வாகனத்தை மறுபதிவு செய்வதற்கான கோரிக்கைகளை முன்வைக்க முடியாது மற்றும் வாகன ஓட்டுனர் உரிமம் தொடர்பான அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டு சம்பந்தப்பட்ட வாகன ஓட்டி தனிமைப்படுத்தப்படுவார்.
டிஜிட்டல் இ-செல்லான் முறையில், போலீசாரும், வாகன உரிமையாளர்களும் ஒருத்தரை ஒருத்தர் நேரில் பார்க்க வேண்டிய தேவை இருக்காது. இதில், வாகன உரிமையாளர்களின் தொடர்பு முகவரிகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால்தான், வாகன ஓட்டிகள் அனைவரையும் தங்களது வாகன உரிமம் மற்றும் வாகன உரிமை தொடர்பான ஆவணங்களில் தொடர்பு முகவரிகளை எப்போதும் அப்டேட்டாக வைத்துக் கொள்ள அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நாள்தோறும் ஏற்படும் சாலை விபத்துகளை எல்லாம் பார்த்தால், டிஜிட்டல் இ-செல்லான் முறையை விரைவாக அனைத்து பகுதிகளிலும் கொண்டுவர வேண்டியது அவசியமாகிறது. இது, போலீசாரின் வேலையை எளிதாக்குவதுடன், எல்லா நேரங்களிலும் சாலை பாதுகாப்பை உறுதி செய்யும். மேலும், டிஜிட்டல் இ-செல்லான் முறையில் போக்குவரத்து ஒழுங்கு பணியில் இருக்கும் போலீசாராலும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்க முடியும்.


Click it and Unblock the Notifications