வண்டிய வெச்சே மாநில அரசுகிட்ட இருந்து 50 ஆயிரம் வாங்கலாமா! ஆத்திர அவசரத்திற்கு யூஸ் பண்ணிக்கலாம்!
இந்தியாவின் பெரு நகரங்கள் பலவும் தற்போது காற்று மாசுபாடு (Air Pollution) பிரச்சனையில் சிக்கி மூச்சு திணறி வருகின்றன. இதற்கு பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) மூலமாக இயங்கும் வாகனங்கள்தான் மிகவும் முக்கியமான காரணமாக கருதப்படுகின்றன. பல்வேறு உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தும் கார்பன் மோனாக்ஸைடு (Carbon Monoxide) போன்ற அபாயகரமான வாயுக்களை அவை வெளியிடுவதுதான் இதற்கு காரணம்.
எனவே இந்தியாவின் மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும், சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானதாக கருதப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களின் (Electric Vehicles) பயன்பாட்டை தற்போது ஊக்குவித்து வருகின்றன. குறிப்பாக காற்று மாசுபாடு பிரச்சனையால், மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள டெல்லியில், மக்களை எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற வைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இந்த வரிசையில் டெல்லி அரசு, எலெக்ட்ரிக் வாகன கொள்கை 2.0-வை தற்போது முன்மொழிந்துள்ளது. இதன் கீழ், ஆயுட்காலம் முடியும் தருவாயில் உள்ள பழைய பெட்ரோல், டீசல் வாகனங்களை ஸ்கிராப் செய்து விட்டு, அதாவது அழித்து விட்டு, புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் மக்களுக்கு, சலுகைகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால் அதிக அளவு நஷ்டம் ஏற்படுகிறது எனக்கூறி ஒரு சிலர் பழைய பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை ஸ்கிராப் செய்ய தயங்குகின்றனர். டெல்லிக்கு வெளியே பழைய பெட்ரோல், டீசல் வாகனங்களை விற்பனை செய்தாலும், அவற்றுக்கு நல்ல விலை கிடைப்பதில்லை. டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் 10 வருடங்கள் ஆன டீசல் வாகனங்களையும், 15 வருடங்கள் ஆன பெட்ரோல் கார்களையும் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை டெல்லியை சேர்ந்த ஒருவரின் வாகனம் மேற்கண்ட ஆயுட்காலத்தை கடந்து விட்டால், ஸ்கிராப் செய்வது அல்லது டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்திற்கு வெளியே விற்பனை செய்வதுதான் நல்ல வழியாக கருதப்படுகிறது. ஆனால் டெல்லி வாகனங்களை, மற்ற மாநிலங்களில், மிகவும் குறைவான விலைக்குதான் வாங்குகின்றனர்.
எனவே இந்த 2 வழிகளிலுமே நஷ்டம் ஏற்படுகிறது எனக்கூறி, ஆயுட்காலம் முடிவடைந்த பழைய வாகனங்களை, டெல்லி சாலைகளில் தொடர்ச்சியாக பலர் பயன்படுத்தி கொண்டே உள்ளனர். இது போன்ற பிரச்சனைகளை தடுப்பதற்காக, டெல்லி அரசு, தற்போது முன்மொழியப்பட்டுள்ள எலெக்ட்ரிக் வாகன கொள்கை 2.0-ன் கீழ், புதிய திட்டம் ஒன்றை பரிசீலனை செய்து வருகிறது.
இந்த புதிய திட்டத்தின்படி, பழைய பெட்ரோல், டீசல் வாகனங்களை, எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்றம் செய்பவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்குவது குறித்து பரிசீலனை நடந்து கொண்டுள்ளது. இது குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் பழைய பெட்ரோல், டீசல் வாகனங்களை, எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்றும் முதல் 1,000 பேருக்கு மட்டும்தான் இந்த சலுகை கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பெட்ரோல், டீசல் வாகனங்களை, எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்றிய பிறகு, அவற்றால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடு குறைவதுடன், அவற்றை இயக்குவதற்கும், பராமரிப்பதற்கும் மிகவும் குறைவான செலவே ஆகும். எனவே இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கலாம். ஆனால் வெறும் 1,000 பேருடன் நின்று விடாமல், கூடுதல் நபர்களுக்கு சலுகையை வழங்கினால் நன்றாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








