இனி 85% எத்தனால் கலந்த பெட்ரோல் தான்.. மத்திய அரசு அதிரடி!
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகமானது புதிய வரைவு ஒன்றை வெளியிட்டுள்ளது. மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989ல் திருத்தங்களைச் செய்வதற்காக இந்த வரைவு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது எத்தனால் கலந்த எரிபொருளின் பயன்பாடு அதிகரித்திருப்பதோடு, மாற்று எரிபொருள்கள் மீதான கவனமும் அதிகரித்து வருகிறது. எனவே, அவற்றையும் விதிமுறைகளில் சேர்க்கும் நோக்கத்தோடு இந்த வரைவை மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்தப் புதிய வரைவில் E85 (85% எத்தனால் மற்றும் 15% பெட்ரோல் கலந்த எரிபொருள்) மற்றும் E100 (100% எத்தனால்) ஆகிய எரிபொருள்களை விதிமுறைகளின் கீழ் கொண்டு வருவது குறித்து குறிப்பிட்டுள்ளது மத்திய அமைச்சகம். இதனால் இந்த எத்தனால் கலந்த எரிபொருள்களும் இனி உமிழ்வு தரநிலைகள் (Emission Standards) மற்றும் வகை-ஒப்புதல் (Type-Approval) விதிமுறைகளின் கீழ் கொண்டுவரப்படவுள்ளது.

தற்போத இந்த வரைவின் மீது பொது மக்களிடம் கருத்து கேட்பதற்காக வெளியிடப்பட்டிருக்கிறது. 30 நாட்களுக்குள் இந்த வரைவில் ஏதாவது கருத்துக்கள் இருந்தால் பொதுமக்கள் தெரிவிக்கலாம். அதன் பின்பு இந்த வரைவு மற்றும் அதில் மாற்றப்பட்டிருக்கும் விதிமுறைகளின் மீதான இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
E85 மற்றும் E100 எரிபொருள்களை விதிமுறைகளின் கீழ் கொண்டு வருவதால் உடனடியாக இவற்றை இந்தியாவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதாக பொருள் இல்லை. மாறாக, எதிர்காலத்தில் இந்த வகையான எரிபொருள் பயன்பாட்டிற்கும் வரும் போது அவை விதிமுறைகளின் கீழ் இருப்பதை உறுதி செய்யவே தற்போது மோட்டார் வாகன விதிகளில் மாற்றம் செய்யப்படக் கோரப்பட்டுள்ளது.

நாம் எதிர்பார்க்கும் காலஅளவிற்கு முன்பாகவே அதிகளவு எத்தனால் கலந்த எரிபொருட்கள் இந்தியாவிற்கு பயன்பாட்டிற்கு வரக்கூடும் என இப்போது எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளியிடப்பட்டிருக்கும் வரைவில், இறக்குமதி செய்யப்படும் புதைபடிவ எரிபொருள்களின் (பெட்ரோல்/ டீசல்) பயன்பாட்டைக் குறைத்து, மாற்று எரிபொருள்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இல்லையென்றாலும், பிரேசிலிலும், அமெரிக்காவின் சில பகுதிகளிலும் E85 மற்றும் E100 உள்ளிட்ட அதிகளவிலான எத்தனால் கலப்பு கொண்ட எரிபொருள்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.
இந்தியாவில் எத்தனால் கலப்பு எரிபொருள் அல்லது மாற்று எரிபொருள்களுக்கான தயார்நிலை குறித்து அரசு அமைப்புகள், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் இடையே ஏற்கனவே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்ஜின் தயார்நிலை, எரிபொருள் விநியோக கட்டமைப்பு மற்றும் நீண்ட கால சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகின்றன.
எத்தனால் கலப்பு கொண்ட பெட்ரோல் பயன்பாட்டை ஆதரித்து வரும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய 100% எத்தனால் எரிபொருள் பயன்பாட்டு இலக்கை நோக்கி இந்தியா நகர வேண்டும் எனவும் முன்னர் குறிப்பிட்டுப் பேசியிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆட்டோமொபைல் வாடிக்கையாளர்களுக்கு இந்த வரைவு சொல்ல வரும் செய்தி என்ன? கடந்த 2025ம் ஆண்டு E20, 20% எத்தனால் கலப்பு கொண்ட பெட்ரோலை ஸ்டாண்டர்டு ஆக்கியது மத்திய அரசு. இனி வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து எரிபொருளில் எத்தனால் கலப்ப அதிகரிக்கவே திட்டமிடப்பட்டிருக்கிறது. E85 அல்லது E100 எரிபொருள்கள் இப்போதே பயன்பாட்டிற்கு வராது என்றாலும், வரும் ஆண்டுகளில் என்றாவது ஒருநாள் வரப் போவது தான்.
எனவே, பைக்கோ அல்லது காரோ வாங்கும் முன் அதிகபட்ச எத்தனால் கலப்பு கொண்ட எரிபொருளில் இயங்கும் திறன் கொண்ட வாகனமாகப் பார்த்து வாங்குங்கள். ஒரு கார் அல்லது பைக் மாடலைத் தேர்ந்தெடுக்கும் போது இதனையும் ஒரு அளவுகோளாக வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பிட்ட விதிமுறை அமலுக்கு வருவதற்கு சில ஆண்டுகள் முன்பிருந்த வாகனங்களில் அதற்கான மாற்றங்கள் வரத் தொடங்கிவிடும். எனவே வாகனம் வாங்குவதற்கு முன்பு சில மாதங்கள் சந்தையை கூர்ந்து ஆராய்ந்து அதற்கேற்ப முடிவெடுங்கள்.


Click it and Unblock the Notifications