டிஃபெண்டர் கார் வைத்துள்ளார் என்றெல்லாம் போலீசார் பார்க்கல... பிசியான மேம்பாலத்தில் தம்பதி செய்த காரியம்!
மனைவியின் பிறந்த நாளை மேம்பாலத்தில் வைத்து கொண்டாடியதற்காக அசாம் மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அதிரடியாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அந்த சம்பவத்தின்போது அவர்கள் பயன்படுத்திய லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
பொது இடங்களில் பிறந்த நாளை கொண்டாடுவது தற்போது ஃபேஷனாகவே மாறிவிட்டது. அதுவும், இப்போது எல்லாம் வீட்டில் கொண்டாடுவதை போன்று சாலையிலேயே பலூன் கட்டி, கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கூடவே, அவரவரது பொருளாதார நிலைக்கு ஏற்ப கார்களை பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது நிறுத்தி வைத்துக் கொள்கின்றனர்.

அந்த வகையில், அசாமில் மேம்பாலத்தில் மனைவியின் பிறந்த நாளை கொண்டாடியதற்காக கைது செய்யப்பட்டுள்ள இந்த தொழிலதிபர் சம்பவத்தின்போது சாலையின் குறுக்கே நிறுத்தி வைத்திருந்தது, அவரது விலையுயர்ந்த லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார் ஆகும். அசாம் மாநிலத்தின் தலைநகர் கவுகாத்தியை சேர்ந்த இந்த தொழிலதிபரின் பெயர், கௌதம் பருஹா ஆகும்.
கவுகாத்தியில் ஒரு பரபரப்பான மேம்பாலத்தில் கடந்த ஜூன் 21ஆம் தேதி தனது மனைவி உடன் கார்களில் வந்து இறங்கிய தொழிலதிபர் கௌதம் பருஹா, மேம்பாலத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து மனைவியின் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இதன்படி, சாலையில் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு, பட்டாசுகள் வெடிக்கப்பட்டு, வண்ண பலூன்கள் கட்டப்பட்டன.

இந்த வேலைகளை எல்லாம் செய்வதற்காக தயாராக பணியாட்களை வேறு கார்களில் கௌதம் பருஹா அழைத்து வந்திருந்தார். இவரும், அவரது மனைவியும் வெள்ளை நிறத்திலான, விலையுயர்ந்த லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரில் வந்து இறங்கினர். காரில் இருந்து இறங்கிய மனைவிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்று, கேக் வைக்கப்பட்டு இருந்த இடத்திற்கு அழைத்து சென்ற தொழிலதிபர் கௌதம் பருஹா பின்னர் மனைவி உடன் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.
ஜூன் 21ஆம் தேதி இரவு துவங்கிய இந்த பிறந்த நாள் கொண்டாட்டம் ஜூன் 22ஆம் தேதி துவங்கிய பின்னரும் அரை மணிநேரத்தில் இருந்து ஒரு மணிநேரம் வரை தொடர்ந்தது. அப்போது, முக்கிய தருணங்கள் அனைத்தும் வீடியோ காட்சிப்படுத்தப்பட்டு இணையத்தில் பகிரப்பட்டன. அந்த வீடியோ தான் கடைசியில் அவர்களுக்கு ஆபத்தாக வந்து முடிந்துள்ளது.
வீடியோவில் கார்களின் நம்பர் பிளேட்டை வைத்து சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் கண்ட போலீசார், தம்பதியினர் உள்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து டிஃபெண்டர், மெர்சிடிஸ்-பென்ஸ், மஹிந்திரா ஸ்கார்பியோ மற்றும் ஹோண்டா சிட்டி என நான்கு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பான போலீசார் விசாரணை சென்றுக் கொண்டிருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறான பொது மக்களுக்கு இடையூறு அளிக்கும் விஷயங்களுக்கு போலீசார் இடமளிக்கக் கூடாது. இந்த சம்பவத்தினால் டிஃபெண்டர் போன்ற தரமான காருக்கு தான் கெட்ட பெயர் ஆகும். ஏனெனில், உலகளவில் பிரபலமான லேண்ட் ரோவர் கார்களில் டிஃபெண்டர் முக்கியமானது ஆகும். அந்த அளவிற்கு, கம்பீரமான தோற்றத்தினாலும், பவர்ஃபுல்லான என்ஜினினாலும் உலகளவில் பலர் விரும்பக்கூடிய SUV வகை காராக டிஃபெண்டர் விளங்குகிறது.


Click it and Unblock the Notifications