அடுக்குமாடி குடியிருப்புவாசிகளின் வயிற்றில் பாலை வார்த்த புதிய அறிவிப்பு! இவி சார்ஜரை தைரியமா கேட்கலாம்!
இந்தியாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதிலுமே எதிர்கால போக்குவரத்து எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ந்துதான் இருக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதனால், வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பதுபோல், வீட்டிற்கு ஒரு இவி சார்ஜர் (EV Charger) இருக்க வேண்டியது அவசியமாகி விட்டது. பெட்ரோல் பங்க்களை போன்று ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) நிலையங்களும் நாடு முழுவதும் நிறுவப்பட்டு வருகின்றன என்றாலும், எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜிங் செய்வது நீண்ட நேரம் எடுக்கக்கூடிய ஒன்று என்பதால் ஒவ்வொருத்தர் வீட்டிலும் சிறிய அளவிலான இவி சார்ஜிங் வசதி இருக்க வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை.
ஆனால், இதில்தான் ஒரு பெரிய பிரச்சனை உள்ளது. அதாவது, தனி வீடுகளில் வசிப்பவர்களுக்கு இவி சாரஜரை நிறுவிக் கொள்வது பெரியதாக கஷ்டமாக இருக்காது. ஆனால், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போருக்கான இவி சார்ஜிங் வசதியை அமைப்பது செலவு மிகுந்த காரியம் மட்டுமல்ல, ஆபத்து நிறைந்த விஷயமும் கூட.

ஏனெனில், மொபைல் போனை சார்ஜ் செய்வது போல் எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்ய முடியாது. அதற்கு அதிக மின்சாரம் தேவைப்படும். தனி வீடுகளில் அமைக்கப்படும் இவி சார்ஜருக்கே இப்படியென்றால், அடுக்குமாடி குடியிருப்புகளில் நூற்றுக்கணக்கானோர் பயன்படுத்துவதற்கான இவி சார்ஜர் செட்-அப் எப்படியிருக்க வேண்டும் என்று யோசித்து பாருங்கள்.
அதிக மின்னழுத்தத்தினால் தீ விபத்திற்கு வாய்ப்புள்ளதால், ஒரு மாநில தீயணைப்பு துறை குடியிருப்பு வளாகங்களில் இவி சார்ஜர்களை நிறுவுவதற்கு தடை விதித்தது. அது வேறெந்த மாநிலமும் அல்ல, டெல்லிக்கு அருகே ஹரியானா மாநில தீயணைப்பு துறை ஆகும். டெல்லியை போன்று, ஹரியானாவின் குருகிராம் , ஃபரிதாபாத் உள்ளிட்ட நகரங்களிலும் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவது மக்களிடையே வேகமாக அதிகரித்து வருகிறது.

அதுவும் குறிப்பாக, பெரும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர் அதிகமாக எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், குடியிருப்புகளில் இவி சார்ஜர்களை பொருத்துவதற்கு தடை என்கிற ஹரியானா மாநில தீயணைப்பு துறையின் உத்தரவு அடுக்குமாடி குடியிருப்பு சங்கங்கள் இடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. புதியதாக இவி சார்ஜர்களை நிறுவதற்கு அனுமதி பெற வேண்டும் என்றும், அவ்வாறு அனுமதி கேட்டு சென்றாலும் தீயணைப்பு துறையினரால் அனுமதி கொடுக்கப்படுவதில்லை எனவும் புகார்கள் வெளிவந்தன.
அத்துடன், ஏற்கனவே இவி சார்ஜர்களை நிறுவிய குடியிருப்பாளர்களையும் அவற்றை நீக்க வலியுறுத்தப்பட்டதால், ஹரியானாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்திவரும் அடுக்குமாடி குடியிருப்புவாசிகளை கடுமையாக பாதித்தது. இந்த நிலையில், ஹரியானா மாநில தீயணைப்பு துறை இதுகுறித்து தனது புதிய விளக்கத்தை தெரிவித்துள்ளது.
அதன்படி, அடுக்குமாடி குடியிருப்புகளின் பார்க்கிங் (Parking) பகுதியில் இவி சார்ஜர்களை நிறுவினால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாது என தனது நிலைப்பாட்டில் இருந்து ஹரியானா மாநில தீயணைப்பு துறை பின்வாங்கி உள்ளது. ஒரு கட்டிடத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜர்கள் நிறுவப்பட்டிருப்பதன் காரணமாக மட்டுமே, தீ பாதுகாப்பு சான்றிதழ் அல்லது அதன் புதுப்பித்தல் மறுக்கப்படாது என்று ஹரியானா தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.
இந்த பின்வாங்குதலுக்கு முக்கிய காரணமாக இருந்தது, டி.எல்.எஃப் அல்டிமா (DLF Ultima) என்கிற ஹரியானாவின் முன்னணி பிரீமியம் தரத்திலான குடியிருப்பு வளாகம் மேற்கொண்ட நடவடிக்கை ஆகும். முடிவில் இருந்து பின்வாங்கி இருந்தாலும், குடியிருப்பு வளாகங்களில் இவி சார்ஜர்களை நிறுவுவது தொடர்பான புதிய வழிமுறைகளை வகுக்கும் பணிகளில் ஹரியானா மாநில தீயணைப்பு துறை ஈடுப்பட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: முடிவில் இருந்து பின்வாங்கி இருப்பினும், ஹரியானா மாநில தீயணைப்பு துறையின் அக்கறையை நம்மால் பிறந்தள்ளி விட முடியாது. ஏனெனில், மக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பு வளாகத்திற்குள் அதிக மின்னழுத்தத்தில் இவி சார்ஜர்களை பயன்படுத்துவது எப்படியிருந்தாலும் ஆபத்தானதே. இதற்கான முறையான வழிக்காட்டுதல் உடன் ஹரியானா மாநில தீயணைப்பு துறை வரும் என எதிர்பார்க்கிறோம். இது ஹரியானாவில் நடக்கக்கூடிய விஷயம் என்றாலும், நமது சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் இதுதொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை.


Click it and Unblock the Notifications