E20 பெட்ரோல்... உண்மையை ஒப்பு கொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி!
E20 பெட்ரோல் (E20 Petrol) வாகனங்களின் இன்ஜின்களை சேதமாக்காது என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி (Nitin Gadkari) தற்போது தெளிவுபடுத்தியுள்ளார். இருப்பினும் பெட்ரோல் உடன் அதிக அளவில் எத்தனால் (Ethanol) கலக்கப்படும்போது மைலேஜ் குறையலாம் என்பதை அவர் ஒப்பு கொண்டார்.
இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்படும் பெட்ரோல் உடன் 20 சதவீதம் எத்தனால் கலக்கப்படுகிறது. அதுதான் E20 பெட்ரோல் என அழைக்கப்படுகிறது. கச்சா எண்ணெய் (Crude Oil) இறக்குமதியை குறைப்பதற்காகவும், உள்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்குவதற்காகவும் (சோளம், கரும்பு போன்றவற்றில் இருந்து எத்தனால் தயாரிக்கப்படுகிறது) E20 பெட்ரோலை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆனால் E20 பெட்ரோலை பயன்படுத்துவதால் வாகனங்களின் இன்ஜின் சேதம் அடைவதாகவும், மைலேஜ் குறைவதாகவும் வாகன உரிமையாளர்கள் பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில்தான் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இந்த தகவலை தெரிவித்துள்ளார். E20 பெட்ரோல் வாகனங்களின் இன்ஜின்களை சேதப்படுத்துவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ள அதே நேரத்தில், புகார்கள் இருந்தால் அதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
''வாகனங்களில் எதாவது பிரச்சனை இருந்தால் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்பிற்கு அதை உரிமையாளர்கள் எடுத்து செல்ல வேண்டும். அப்போது E20 பெட்ரோல் மூலமாக பிரச்சனை ஏற்பட்டது கண்டறியப்பட்டால், அதை எனது கவனத்திற்கு கொண்டு வாருங்கள்'' என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் மைலேஜ் குறைகிறது என்ற குற்றச்சாட்டை அவர் ஒப்பு கொண்டுள்ளார். ஆனால் அது வாகனத்தை எப்படி ஓட்டுகிறோம்? என்பதையும் பொறுத்தது எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். ''பெட்ரோலை விட எத்தனாலின் கலோரிஃபிக் வேல்யூ (Calorific Value) குறைவு. எனவே மைலேஜ் சற்று குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
குறிப்பாக நெடுஞ்சாலைகளில் வாகனத்தை ஓட்டும்போது மைலேஜ் சற்று குறையலாம். ஆனால் நகர பகுதிகளில் வாகனங்கள் பெரும்பாலும் குறைவான கியர்களில்தான் இயக்கப்படும். எனவே வித்தியாசம் மிகவும் குறைவாகதான் இருக்கும்'' என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். அவர் மற்றொரு விஷயத்தையும் தற்போது தெரிவித்துள்ளார்.
அராய் (ARAI - Automotive Research Association of India) மற்றும் ஐஐபி (IIP - Indian Institute of Petroleum) அமைப்புகளின் விரிவான ஆய்வுகளுக்கு பிறகுதான் பெட்ரோல் உடன் எத்தனால் கலக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது என்பதுதான் அந்த மற்றொரு விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தற்போது 20 சதவீதம் கலக்கப்படும் நிலையில், பெட்ரோலுடன் கலக்கப்படும் எத்தனாலின் அளவை படிப்படியாக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போதே ஒரு சில நகரங்களில் E85 எரிபொருள் பயன்பாட்டிற்கு வந்து விட்டது. ஆனால் எதிர்காலத்தில் பெட்ரோல் உடன் கலக்கப்படும் எத்தனாலின் அளவு அதிகரிக்கப்படும்போது, தற்போதைய சூழலை போல் புகார்கள் எழாமல் பார்த்து கொள்ள வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு என்பது எங்கள் கருத்து.
இதற்கிடையே பெட்ரோல் உடன் எத்தனால் கலக்கப்படுவதை போல், டீசல் உடன் ஐசோப்யூட்டனாலை கலக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்து, இந்தியாவின் பொருளாதாரத்தை பாதுகாக்க மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியது. ஆனால் அதனால் வாகன உரிமையாளர்களுக்கு பிரச்சனைகள் எதுவும் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டியது மத்திய அரசின் பொறுப்பாகும்.
எழுத்து பிழை சரி செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications