கார் பம்பரில் காற்றாலை மின் உற்பத்தி...மின்சார கார்களுக்கான புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கும் ஹூண்டாய்-கியா!
மின்சார கார்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், அவற்றின் ரேஞ்ச், செயல்திறன் மற்றும் ஆற்றல் பயன்பாட்டை மேலும் மேம்படுத்த புதிய தொழில்நுட்பங்களை உலகின் முன்னணி வாகன உற்பத்தியாளர்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர். அந்த வரிசையில், தென்கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்கள் இணைந்து, காரின் முன்பக்க பம்பருக்குள் சிறிய காற்றாலை டர்பைனை பொருத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் புதிய தொழில்நுட்பத்துக்கு காப்புரிமை (Patent) கோரி பதிவு செய்துள்ளன.
மின்சார வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றாக கருதப்பட்டாலும், பேட்டரியை சார்ஜ் செய்ய வேண்டிய நேரம் மற்றும் நீண்ட தூர பயணங்களில் ரேஞ்ச் குறித்த கவலை இன்னும் முழுமையாக தீர்க்கப்படவில்லை. இதனால், சோலார் பேனல்கள், மேம்பட்ட ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் (Regenerative Braking), ஆற்றல் மீட்பு (Energy Recovery) உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் உலகம் முழுவதும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அந்த முயற்சிகளின் தொடர்ச்சியாகவே ஹூண்டாய்-கியாவின் இந்த புதிய காப்புரிமையும் பார்க்கப்படுகிறது.

(Representative Image)
காப்புரிமை விபரம்
அமெரிக்க காப்புரிமை மற்றும் வர்த்தக முத்திரை அலுவலகத்தில் (USPTO) US 20260168477 A1 என்ற எண்ணில் இந்த காப்புரிமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஹூண்டாய் மோட்டார் கம்பெனி, கியா கார்ப்பரேஷன் மற்றும் எச்எச்பி ஆட்டோமோட்டிவ் மோடியூல் கம்பெனி ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளன. "Vehicle Wind Power Generation System" என்று அழைக்கப்படும் இந்த அமைப்பில், முன்பக்க கிரில், திறந்து-மூடும் ஷட்டர் (Active Shutter), சிறிய டர்பைன், மின் ஜெனரேட்டர் மற்றும் வாகனத்தின் வேகத்தைப் பொறுத்து காற்றோட்டத்தை கட்டுப்படுத்தும் கன்ட்ரோலர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

அமைப்பு செயல்படும் விதம்
இந்த அமைப்பு செயல்படும் விதமும் சுவாரஸ்யமானது. வாகனம் இயங்கும் போது முன்புறமாக வரும் காற்றோட்டம், கிரில்லுக்குள் பொருத்தப்பட்டுள்ள டர்பைனை சுழலச் செய்யும். அந்த சுழற்சி மூலம் உருவாகும் இயந்திர ஆற்றலை ஜெனரேட்டர் மின்சாரமாக மாற்றும். இந்த மின்சாரம் நேரடியாக காரை இயக்க பயன்படுத்தப்படாது. அதற்கு பதிலாக, வாகனத்தின் சில மின்சார அமைப்புகளுக்கு தேவையான ஆற்றலை வழங்குவதன் மூலம், பிரதான பேட்டரியின் சுமையை ஓரளவு குறைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இந்த பேட்டன்டின் மற்றொரு முக்கிய அம்சம் Active Flaps எனப்படும் காற்றோட்ட கட்டுப்பாட்டு அமைப்பாகும். தேவையான வேகத்தில் மட்டுமே இந்த ஷட்டர்கள் திறந்து, காற்றை டர்பைனை நோக்கி அனுப்பும். குறிப்பாக, கார் வேகமாக செல்லும்போது அவை மூடப்பட்டிருப்பதால், வாகனத்தின் ஏரோடைனமிக் திறன் பாதிக்கப்படாது. மேலும், இந்த காற்றோட்டத்தை மின்சாரம் உற்பத்திக்காக மட்டுமல்லாமல், பேட்டரி மற்றும் சில மின்னணு கூறுகளை குளிர்விக்கவும் பயன்படுத்தும் வாய்ப்பை இந்த வடிவமைப்பு காட்டுகிறது.

மின்சார பயன்பாடு
சேகரிக்கப்படும் மின் ஆற்றல் ஏசி சிஸ்டம், இன்ஃபோடெயின்மென்ட் திரைகள், மற்றும் பாதுகாப்பு அம்சங்களுக்கு (ADAS) மின்சாரம் வழங்கும். இது முதன்மை லித்தியம்-அயன் பேட்டரி பேக்கின் மின் சுமையை நேரடியாக குறைக்கிறது. இதனால், காரின் மின் மோட்டாருக்கு மின்சாரம் வழங்கும் பேட்டரியின் சுமை குறையும் என்பதும் கூடுதல் ரேஞ்ச் மற்றும் செயல்திறனை பெற வாய்ப்பு ஏற்படும்.
எனினும், இந்த தொழில்நுட்பம் தற்போது காப்புரிமை ஆவணமாக மட்டுமே உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பேட்டன்ட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாலேயே அது எதிர்கால தயாரிப்பு கார்களில் இடம்பெறும் என்று உறுதியாக கூற முடியாது. இதுவரை ஹூண்டாய் அல்லது கியா நிறுவனங்கள் இந்த அமைப்பை எந்த மாடலில் பயன்படுத்தப் போகின்றன என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. பொதுவாக, பல நிறுவனங்கள் தங்களது ஆராய்ச்சி மற்றும் அறிவுசார் சொத்துரிமையை பாதுகாக்கும் நோக்கில் இதுபோன்ற காப்புரிமைகளை பதிவு செய்வது வழக்கமான நடைமுறையாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
காரின் முன்பக்க பம்பருக்குள் காற்றாலை டர்பைனை பொருத்துவது புதுமையான தொழில்நுட்ப யோசனையாகவே உள்ளது. பயணத்தின் போது இயல்பாக கிடைக்கும் காற்றோட்டத்தை பயனுள்ள ஆற்றலாக மாற்ற முயற்சிப்பது நிச்சயம் சிறந்த நன்மைகளை தரும். தற்போது இது காப்புரிமை நிலையிலேயே இருந்தாலும், எதிர்காலத்தில் இந்த தொழில்நுட்பம் தயாரிப்பு கார்களில் இடம்பிடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இருந்தாலும், மின்சார வாகனங்களின் செயல்திறனை மேம்படுத்த மாற்று வழிகளை தேடும் ஹூண்டாய்-கியாவின் ஆராய்ச்சி முயற்சியாக இந்த பேட்டன்ட் குறிப்பிடத்தக்க கவனத்தை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications
