பழைய 2-வீலர் ஓனர்கள், எடைக்கு போட்டு பேரிச்சம்பழம் தான் வாங்கி சாப்பிடனும்! மத்திய அரசுக்கு வந்த கடிதம்...
இ20 பெட்ரோல் (E20 Petrol) எனப்படும் எத்தனால் (Ethanol) 20% கலக்கப்பட்ட பெட்ரோலை பயன்படுத்துவதால் வாகனங்களில் சில பிரச்சனைகள் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்து இருப்பதே தற்சமயம் விவாதத்திற்கு உள்ளான ஒன்றாக இருக்கும் நிலையில், 30% எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலுக்கு நாம் மாறலாம் என தன்னார்வல அமைப்பு ஒன்று மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கி அதிர வைத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம், வாருங்கள் செய்திக்குள் போகலாம்.
மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்ற சூழல் நிலவி வருவதால், கச்சா எண்ணெய்க்கு நாடு தழுவிய அளவில் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. கச்சா எண்ணெய் போதுமான அளவு இருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்தாலும், வட இந்தியாவில் சில நகரங்களில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை செய்திகளில் பார்க்க முடிகிறது.

கச்சா எண்ணெயை கொண்டுவருவதில்தான் சில இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாகவும், இது விரைவில் தீர்க்கப்படும் என கூறினாலும், இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயை அதிகமாக சார்ந்திருப்பதால் ஏற்படும் பாதிப்பை இத்தகைய சூழல்கள் உணர்த்துகின்றன. வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் கச்சா எண்ணெய்க்காகவே இந்திய அரசு சில வெளிநாட்டு அரசாங்கங்களை அனுசரித்து போக வேண்டியதாக உள்ளது.
இதனாலேயே கச்சா எண்ணெய்க்கு மாற்றாக எலெக்ட்ரிக் (Electric), சிஎன்ஜி (CNG), ஹைப்ரீட் (Hybrid) உள்ளிட்ட மாற்று எரிபொருள்களில் இந்திய அரசு கவனம் செலுத்துகிறது. பெட்ரோலில் எத்தனாலை கலந்து பயன்படுத்துவதும் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க மேற்கொள்ளப்படும் ஒரு யுக்தியே ஆகும். ஆரம்பத்தில் 10% எத்தனால் மற்றும் 90% பெட்ரோல் மட்டுமே கலந்து பெட்ரோலாக வழங்கப்பட்டு வந்தது.

அதன்பின், எத்தனாலின் அளவு 20% ஆக அதிகரிக்கப்பட்டது. இந்த அதிகரிப்பினால், சில பழைய பெட்ரோல் வாகனங்கள் பாதிப்புக்கு உள்ளாகுவதாக இப்போதும் புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இ20 பெட்ரோலின் இலக்கை ஏற்கனவே எட்டிவிட்டோம் என்றும், ஆதலால் இ30 பெட்ரோலுக்கு மாற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் அகில இந்திய காய்ச்சி வடிப்புத் தொழிலாளர் சங்கம் (AIDA) தெரிவித்துள்ளது.
தன்னார்வல சங்கமான இது அரசாங்க அமைப்பாக இல்லாவிடினும், எத்தனாலின் விலையை நிர்ணயிப்பது, அதற்கேற்ப சுற்றுச்சூழலை மாற்றுவது மற்றும் மாநிலங்களுக்கு இடையே ஒரே மாதிரியான வரியை வகுத்து தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்திற்கு இடையே இணக்கத்தை அதிகப்படுத்தும் ஓர் அமைப்பு ஆகும். வருவாயை ஈர்ப்பது இந்த சங்கத்தின் நோக்கம் கிடையாது.
இந்த சங்கத்தின் சார்பில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு இதுதொடர்பாக அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், ஏற்கனவே எட்டப்பட்டுவிட்ட இ20 இலக்கை தாண்டி செல்ல இந்தியாவின் எத்தனால் துறை தயாராகிவிட்டது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அந்த கடிதத்தில், மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்றுவரும் போரினால் கச்சா எண்ணெய் விலைகள் அதிகரிக்க துவங்கியுள்ளன.
கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க 20 சதவீதத்திற்கும் அதிகமான எத்தனாலை வழங்க எத்தனால் துறை தயாராக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இத்தகைய ஒரு நடவடிக்கை கச்சா எண்ணெயை விநியோகிப்பதில் ஏற்படும் தடைகளையும், நாட்டின் மீதான பாதகமான பொருளாதாரத் தாக்கத்தையும் தணிக்கும் என்று இந்த கடிதத்தை எழுதிய AIDA-இன் துணை இயக்குனர் பாரதி பாலாஜி தெரிவித்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெட்ரோலில் 20% எத்தனாலை கலந்துப் பயன்படுத்த 2030ஆம் ஆண்டிற்குள் ஆரம்பிக்க வேண்டும் என தனக்கு தானே இலக்கு நிர்ணயித்துக் கொண்ட மத்திய அரசு அதனை 5 வருடங்களுக்கு முன்பாகவே 2025ஆம் ஆண்டில் எட்டிவிட்டது. இது மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி என்றாலும், அதற்குள்ளாக 30% இலக்கை அடைய முயல்வது ஆபத்தானது. ஏனெனில், பெட்ரோலில் எத்தனாலை 10% அதிகரிப்பதற்கு ஏற்ப வாகனங்களையும், அவற்றின் என்ஜின்களையும் அப்கிரேட் (Upgrade) செய்ய வேண்டும். இது நாம் நினைப்பதை காட்டிலும் பெரிய வேலை ஆகும்.


Click it and Unblock the Notifications








