ஒட்டுமொத்த பேரும் எதிர்பார்த்த இந்தியாவின் முதல் பெட்ரோல் பங்க்! வழக்கமான விலையை விட லிட்டருக்கு ரூ.20 குறைவு!
இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் 4இல் இருந்து 5 லட்சம் இரு சக்கர வாகனங்களை அசால்ட்டாக விற்பனை செய்யும் நிறுவனமாக ஹீரோ மோட்டோகார்ப் உள்ளது. இத்தகைய நிறுவனத்தில் இருந்து இந்தியாவின் முதல் ஃபிளெக்ஸ்-ஃப்யுல் பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது நாடு முழுவதும் கவனத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில், இவை 85% எத்தனால் கலக்கப்பட்ட இ85 பெட்ரோலில் இயங்கக்கூடியவை ஆகும்.
என்ன தான் இ85 பெட்ரோலில் இயங்கக்கூடிய பைக்குகள் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்தாலும், இ85 பெட்ரோலை விநியோகம் செய்யும் பெட்ரோல் பங்க் எதுவும் இந்தியாவில் இல்லை. இந்த நிலை நேற்றுவரையில் மட்டுமே. ஏனெனில், இந்தியாவின் முதல் இ85 பெட்ரோல் நிலையம் தலைநகர் டெல்லியில் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு நாட்டிற்கு எந்த அளவிற்கு முக்கியமானது என்றால், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டார்.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திறக்கப்பட்டுள்ள இந்த புதிய இ85 பெட்ரோல் விநியோக மையம் ஆனது ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பெட்ரோல் பங்க்கின் புதிய அங்கமாக திறக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மையத்தில் அதிக எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.82.12 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது வழக்கமான பெட்ரோலின் விலையை காட்டிலும் ஏறக்குறைய ரூ.20 குறைவாகும். வழக்கமான பெட்ரோலிலும் 20% எத்தனால் கலக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. முதற்கட்டமாக, இவ்வாறு 48 இ85 பெட்ரோல் விநியோக மையங்களை நாடு முழுவதும் பல பகுதிகளில் நிறுவ மத்திய அரசின் வழிக்காட்டுதலின் பெயரில் பொது எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

நடப்பு 2026 டிசம்பர் மாதம் முடிவதற்குள் இந்த எண்ணிக்கையை 500 ஆக அதிகரிக்கும் முனைப்பில் மத்திய அரசு உள்ளது. அதனை தொடர்ந்து, 2027ஆம் ஆண்டு முடிவதற்குள் 5000 இ85 பெட்ரோல் விநியோக மையங்களை நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் திட்டம் உள்ளது.
வழக்கமான இ20 பெட்ரோலை காட்டிலும் இ85 பெட்ரோலின் விலை ரூ.20 அளவிற்கு குறைவாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் நிலையில், பிரீமியம் தரத்திலான XP95 பெட்ரோலின் விலையை காட்டிலும் ரூ.27.12 குறைவாகும். ஏனெனில், அதன் விலை லிட்டருக்கு ரூ.109.24 ஆக தற்சமயம் உள்ளது. குறைவான விலைக்கு ஏற்ப எத்தனால் அதிகம் கலக்கப்பட்ட பெட்ரோலினால் வாகனத்தின் மைலேஜ் குறைவாக கிடைக்கும்.
மிகவும் குறைவாக இல்லாமல், 25%-இல் இருந்து 35% மட்டுமே குறைவாக கிடைக்கும். ஏனெனில், பெட்ரோலை காட்டிலும் எத்தனால் குறைந்த ஆற்றல் அடர்த்தியை கொண்டதாகும். எத்தனால் அதிகம் கலக்கப்பட்ட பெட்ரோலின் பயன்பாடு ஆனது சில வெளிநாடுகளிலும் தீவிரமாக உள்ளது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், தென் அமெரிக்க நாடான பிரேசிலில் இ100 பயன்பாடு உள்ளது.
அதாவது, முற்றிலுமாக பெட்ரோல் மூலக்கூறுகளே இல்லாமல் முழுவதும் எத்தனாலில் இயங்கக்கூடிய வாகனங்கள் அங்கு விற்பனை செய்யப்படுகின்றன. அதேநேரம், நம் இந்தியாவை போன்று குறைவான எத்தனால் கலக்கப்பட்ட இ27 பெட்ரோலும் பிரேசிலில் விநியோகம் செய்யப்படுகிறது. இ27 பெட்ரோலை காட்டிலும் இ100 எரிபொருளின் விலை அந்த நாட்டில் 36% குறைவாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இ20 பெட்ரோலுக்கும், இ85 பெட்ரோலுக்கும் இடையேயான விலை வித்தியாசம் வெறும் 20% அளவிலேயே உள்ளது. பிரேசில் நாடுடன் ஒப்பிடுகையில் இது குறைவே. இந்தியாவில் எத்தனாலின் உற்பத்தி அதிகமான பின்பு விலை மேலும் குறைக்கப்படலாம். இதற்கு, மக்கள் அதிகமாக ஃபிளெக்ஸ்-ஃப்யுல் வாகனங்களை வாங்க வேண்டியது அவசியமாகும்.


Click it and Unblock the Notifications