ரோட்டில் சென்ற யாருக்குமே தெரியல உள்ளே அமைச்சர் இருக்கார்னு... மாநிலம் முழுக்க இதை வெச்சே டாடா கல்லா கட்டிடும்
சுமார் 20 வருடங்களுக்கு பின் மீண்டும் புதிய தோற்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டாடா சியரா (Tata Sierra) எஸ்யூவி காரை கேரள போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.பி. கணேஷ் குமார் (KB Ganesh Kumar) பொது சாலையில் ஓட்டி பார்த்துள்ளார். அப்போது சியரா அவரது ஆர்வத்தையும் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அமைச்சர் இந்த புதிய சியரா காரை ஓட்டிப் பார்த்ததுடன், கேரளாவில் அதற்கான முதல் அதிகாரப்பூர்வ முன்பதிவையும் செய்துள்ளார்.
இரண்டு தசாப்த கால இடைவெளிக்குப் பிறகு இந்திய சந்தையில் சியரா எஸ்யூவி-யின் மறுபிரவேசம் பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டாடா மோட்டார்ஸின் நீண்டகால தயாரிப்பு வரிசையில் இருந்து மீண்டும் களமிறக்கப்பட்டு உள்ள இந்த வாகனம், டாடா நிறுவனத்தின் விரிவடைந்து வரும் எஸ்யூவி கார்கள் வரிசையில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

கேரளாவை சேர்ந்த டாடா டீலர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவில், அமைச்சர் கே.பி. கணேஷ் குமார் சியராவை ஆய்வு செய்து, பின்னர் ஓட்டிச் செல்வது பதிவாகியுள்ளது. இந்த பதிவில் கேரளாவில் டாடா சியராவின் முதல் முன்பதிவை அமைச்சர் கணேஷ் குமார் செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
டாடா சியரா எஸ்யூவி 1990களில் இந்தியாவில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டு, விரைவாகவே 2000களின் முற்பகுதியில் விற்பனை நிறுத்தப்பட்டது. இது டாடா மோட்டார்ஸின் ஆரம்பகால எஸ்யூவி கார்களில் ஒன்றாகும். மூன்று கதவு அமைப்பு மற்றும் பெரிய கண்ணாடிப் பகுதிகள் சியாராவுக்கு தனி அடையாளமாக இருந்தன.

தற்போது புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்பு மற்றும் மாசு உமிழ்வு விதிமுறைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சியராவை டாடா மோட்டார்ஸ் மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. நவீன அம்சங்களுடன் கூடிய இந்த மாடல், அதன் பாரம்பரிய தோற்றத்தை தக்க வைத்துள்ளது. புதிய டாடா சியரா பல்வேறு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) ரூ.11.49 லட்சம் முதல் ரூ.21.29 லட்சம் வரை உள்ளன. ஸ்மார்ட்+, ப்யூர், ப்யூர்+, அட்வென்ச்சர், அட்வென்ச்சர்+, அகம்பளிஷ்ட் மற்றும் அகம்பளிஷ்ட்+ என ஏழு முக்கிய வேரியண்ட்களில் சியரா விற்பனை செய்யப்படுகிறது. அடிப்படை ஸ்மார்ட்+ வேரியண்ட் ரூ.11.49 லட்சம் விலையில் 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் கிடைக்கிறது.
டாப்-எண்ட் அகம்பளிஷ்ட்+ டீசல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டின் விலை ரூ.21.29 லட்சம் வரை செல்கிறது. இந்த எஸ்யூவி கார் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் வருகிறது. டாடா சியரா மூன்று என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 1.5 லிட்டர் க்ரையோஜெட் டீசல் என்ஜின், புதிய 1.5 லிட்டர் TGDi ஹைபீரியன் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் என்பன அவையாகும்.

உட்புறத்தில், டாடா சியரா டேஷ்போர்டில் மூன்று டிஸ்ப்ளேக்கள் (ஓட்டுநர் மற்றும் இரண்டு இன்ஃபோடெயின்மென்ட் திரைகள்) உடன் பிரீமியம் தரத்திலான கேபினை கொண்டுள்ளது. இதில் டாடா கர்வ் (Curvv) காரில் உள்ளதைப் போன்ற டச் சென்சிட்டிவ் கட்டுப்பாடுகளுடன் கூடிய 4-ஸ்போக் ஸ்டீயரிங் சக்கரம், 12-ஸ்பீக்கர் JBL சவுண்ட் சிஸ்டம், இந்தியாவில் மிகப்பெரிய பானரோமிக் சன்ரூஃப் மற்றும் வயர்லெஸ் சார்ஜர் போன்ற அம்சங்கள் அடங்கும்.
பாதுகாப்பைப் பொறுத்தவரை, டாடா சியரா ஆனது லெவல்-2 அடாஸ் (ADAS) அம்சங்களுடன் வருகிறது. இதில் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், 360-டிகிரி கேமரா, டூயல் பிளைண்ட் ஸ்பாட் டிடெக்டர்கள், 21 பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய ESP ஆகியவை அடங்கும். மேலும், 6 ஏர்பேக்குகள், ISOFIX குழந்தை இருக்கை இணைப்பு போன்ற நிலையான பாதுகாப்பு வசதிகளும் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா சியரா எஸ்யூவி காருக்கான முன்பதிவுகள் (Bookings) 2025 டிசம்பர் நடுப்பகுதியில் தொடங்கின. 2026 ஜனவரி முதல் டெலிவிரிகள் (Deliveries) தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கேரள போக்குவரத்து துறை அமைச்சர் போன்றோர் இந்த காரை ஓட்டி பார்ப்பது சியராவுக்கு மேலும் கூடுதல் விளம்பரமாகவே அமையும்.


Click it and Unblock the Notifications









