மாநிலத்திலேயே முதல் ஆளா அமைச்சர் வாங்கி போட்ட கார்... டாடாவின் தயாரிப்பை பார்த்து நாடே மிரண்டுப்போய் இருக்கு!!
புதிய டாடா சியரா (Tata Sierra), கடந்த 2025 நவம்பர் 25 அன்று அறிமுகப்படுத்தப்பட்டபோது, சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இது பொதுமக்களிடமும், பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் இடையேயும் அதீத ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. இதன் விளைவாக, இணையமெங்கும் சியரா பற்றிய தகவல்களும் வீடியோக்களும் நிறைந்து காணப்படுகின்றன.
இந்த நிலையில், கேரள போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.பி. கணேஷ் குமார், கும்பாரகோமில் உள்ள கோகுலம் கிராண்ட் ரிசார்ட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்வில், கேரளாவின் முதல் சியரா காரை டெலிவரி பெற்றுக் கொண்டுள்ளார். இந்த நிகழ்வின் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

அமைச்சர் கணேஷ் குமார், கேரளாவின் முன்னணி டாடா டீலரான ஸ்ரீ கோகுலம் மோட்டார்ஸ் நிறுவனத்திடம் இருந்து இந்த புதிய சியரா காரை பெற்றுக்கொண்டார். டீலர்ஷிப்பின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட வீடியோவில், அமைச்சர் தனது டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா (மாநில கார் எண் 7) மற்றும் ஒரு பாதுகாப்பு வாகனத்துடன் கோகுலம் கிராண்ட் ரிசார்ட்டுக்கு வருவதைக் காணலாம்.
நிகழ்வு நடைபெறும் இடத்தில், டெலிவிரி செய்யப்பட உள்ள புத்தம் புதிய சியரா கார் துணியால் மூடப்பட்டிருந்தது. டாடா அதிகாரிகள் மற்றும் ரிசார்ட் நிர்வாகத்தினர் அமைச்சரை அன்புடன் வரவேற்றனர். அமைச்சருடன் அவரது இரு மகன்களும் உடன் வந்திருந்தனர். பின்னர், அமைச்சர் டாடா ஊழியர்களுடன் உரையாடி, தேவையான ஆவணங்களில் கையெழுத்திட்டார். அதைத் தொடர்ந்து, கேக் வெட்டி, தனது புதிய கார் டெலிவிரியைக் கொண்டாடினார்.

பிறகு, காரை அங்கிருந்து அமைச்சர் ஓட்டிச் சென்றார். ஜனவரி 15 முதல் சியரா டெலிவிரிகள் (Deliveries) தொடங்கப்பட்ட நிலையில், கேரளாவில் சியராவை முதலில் பெற்றவர் அமைச்சர் கே.பி.கணேஷ் குமார் ஆவார். பிராண்ட்-நியூ சியரா கார் வாங்கியது குறித்து பேசிய அவர், கேரளாவில் சியரா டெலிவிரிகள் இன்னும் தொடங்கவில்லை என்றும், தாமதமின்றி முதல் சியராவை வழங்கியதற்காக கோகுலம் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தார்.
முன்னதாக இந்த ஜனவரி மாத துவக்கத்தில், அமைச்சர் புதிய சியராவை டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தார். அப்போது அவர் ஒரு வீடியோவைப் பகிர்ந்து, தனது அனுபவத்தையும், எஸ்யூவி மீது தனக்கிருந்த ஆர்வத்தையும் விளக்கினார். அந்த வீடியோவில், அவர் தனது சியராவை 'அந்தமான் அட்வென்ச்சர்' (மஞ்சள்) நிறத்தில் முன்பதிவு செய்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

டெலிவரி வீடியோவில் அமைச்சரின் பளபளக்கும் புதிய சியரா கார் அருமையாகத் தோற்றமளிக்கிறது. மேலும் அமைச்சர் பொது சாலைகளில் அதை ஓட்டிச் செல்லும்போது பலரது கவனத்தையும் ஈர்த்தார். கே.பி.கணேஷ் குமார் ஒரு நடிகரும் தொலைக்காட்சி தொகுப்பாளரும் ஆவார். ஒரு காலத்தில் அவரிடம் அசல் சியரா கார் இருந்தது, அதன் பதிவு எண் 'KL 01 D 1' ஆகும். அவர் மாநிலத் தலைநகரான திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் என்பதால் இந்த எண் அமைந்திருக்கலாம்.
தற்போதைய டெலிவரி வீடியோவில் காணப்படுவது போல, புதிய சியராவிற்கு இன்னும் பதிவு எண் வழங்கப்படவில்லை. அவர் இந்த வாகனத்திற்கும் விஐபி எண்ணைத் தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. பழைய சியராவை ஓட்டி, அதன் அனுபவத்தை இன்றும் போற்றும் கணேஷ் குமார், சியராவின் புதிய வடிவமைப்பு, அம்சங்களின் நீண்ட பட்டியல் மற்றும் பயணிகளின் வசதியில் ஏற்பட்ட பெரும் முன்னேற்றம் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டுள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய டாடா சியரா காரின் முக்கிய சிறப்பம்சமே அதன் லெவல்-2 அடாஸ் ஆகும். அதனை கேரள அமைச்சரும் வீடியோவில் புகழ்ந்து பேசியுள்ளார். இருப்பினும், எந்த என்ஜின் ஆப்ஷனுடன் இந்த காரை அவர் வாங்கியுள்ளார் என்பது உறுதியாக தெரியவில்லை. ஏனெனில், புதிய சியரா கார் மொத்தம் 3 விதமான என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications









