5 நிமிஷ சுகத்திற்காக ரூ.2 லட்சத்தை இழந்த வாகன ஓட்டிகள்! கருணையே காட்டாமல் அபாரதத்தை விதித்த போலீசார்!
உலகின் மிக அழகான பகுதிகள் இந்தியாவின் லடாக் பகுதியில் அமைந்துள்ளன. இதனாலேயே அவை மிகவும் போற்றி பாதுகாக்கப்பட வேண்டியவை ஆக உள்ளன. ஆனால், நம் நாட்டில் தான் எதை செய்யக் கூடாது என்று சொல்கிறோமோ அதை வேண்டுமென்றே செய்வதற்கு என்றே ஒரு கூட்டம் உள்ளதே. அப்படி தான் இங்கு சில வாகன ஓட்டிகள் செய்யக் கூடாததை செய்து, பெரும் தொகையை அபராதமாக செலுத்த வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
லடாக்கில் பெரும்பாலான பகுதிகள் நாட்டின் முக்கியமான இயற்கை வளங்களாக பாதுகாக்கப்படுகின்றன. இதனாலேயே அங்கு ஒரு சில இடங்களில் எல்லாம் சாதாரணமாக நடந்து செல்வதற்கே அனுமதி இல்லை. அதேபோன்று, பல்வேறு இடங்களுக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அதாவது, அத்தகைய இடங்கள் எவ்வளவு நீளமானதாக இருந்தாலும் நடந்துதான் செல்ல வேண்டும்.

இவ்வாறு பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் லடாக்கின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு அந்த பகுதியின் அரசாங்கத்தால் விதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், ஒவ்வொரு வருடமும் பலர் விதிமுறைகளை மீறியதற்காக அபராதங்களை செலுத்தி வருகின்றனர். சிலர் கைது செய்யப்பட்ட சம்பவங்கள் கூட உள்ளது. இந்த தொகுப்பில் நாம் பார்க்க போகும் நபர்கள் கைது செய்யப்படும் அளவிற்கு செல்லவில்லை என்றாலும், அவர்களுக்கு மொத்தமாக சுமார் ரூ.2 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
அப்படி என்ன செய்தார்கள் என்பதை பற்றி பார்ப்பதற்கு முன், ஒன்றை தெளிவுப்படுத்த விரும்புகிறோம். அது என்னவென்றால், ரூ.2 லட்சம் அபராதத்தை சந்தித்துள்ள இந்த நபர்கள் ஒரு குறிப்பிட்ட குழுவினரோ அல்லது நண்பர்களோ கிடையாது. லடாக்கின் வெவ்வேறான பகுதிகளில், வெவ்வேறான நாட்களில் விதிமீறல்களில் ஈடுப்பட்ட இந்த நான்கு கார் ஓட்டிகளுக்கு மொத்தமாக ரூ.2 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

லடாக்கின் லே வன வாழ்வு பிரிவின் கீழ் வரும் மெராக், லுகுங், நுர்பூ லா மற்றும் சுமுர் ஆகிய மிகவும் கண்காணித்து பாதுகாக்கப்படும் பகுதிகளில் இந்த வாகன ஓட்டிகள் தங்களது சாகச திறமைகளை காண்பித்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும், வீடியோக்களையும் அவர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு எளிதாக போனது.
ஹிமாச்சல் பிரதேசம், சண்டிகர், பஞ்சாப் மற்றும் உத்தர பிரதேசம் என வெவ்வேறான மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட நான்கு கார்களை இந்த சம்பவங்களில் பயன்படுத்தி உள்ளனர். குறிப்பாக, பஞ்சாப்பில் பதிவு செய்யப்பட்ட கருப்பு நிறத்திலான மஹிந்திரா தார் வாகனத்தை ஓட்டியவர் லடாக்கின் அரிய பொக்கிஷமான பாங்கோங் ஏரியில் தனது வாகனத்தை இறக்கி போலீசாரின் பெரும் கோபத்திற்கு ஆளாகி உள்ளார்.
கடந்த ஜூன் 23ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தை போன்று, ஜூன் 17இல் HP நம்பர் பிளேட் கொண்ட டொயோட்டா ஃபார்ச்சூனரில் சிலர் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட நுர்பூ லா பகுதிக்கு சென்றுள்ளனர். அவர்களை அடுத்த நாள் காலையிலேயே போலீசார் பிடித்துவிட்டனர். இதேபோன்று, UP நம்பர் பிளேட் கொண்ட ஹூண்டாய் கிரெட்டா கார் டிரைவர் லுகுங் பகுதியிலும், ஜூன் 20ஆம் தேதி மஹிந்திரா தார் வாகன ஓட்டி கரகோரம் பகுதியிலும் ஆக்ரோஷமான டிரைவிங்கில் ஈடுப்பட்டதற்காக அபாரதத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
இந்த நான்கு வாகன ஓட்டிகள் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டது என்கிற விபரம் இல்லை. மொத்தமாக ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. லடாக் பகுதியில் பல வாகன ஓட்டிகளுக்கு இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டு இருந்தாலும், இதுதான் மிக பெரிய தொகையிலான அபராதம் ஆகும். இந்த நடவடிக்கை ஆனது லடாக் கவர்னர் விகே சக்சேனாவின் ஆணையின்படி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இமயமலை தொடரை கொண்டதன் மூலம் உலகின் ஆசீர்வதிக்கப்பட்ட நாடுகளுள் நமது இந்தியாவும் ஒன்று என்றே சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட இயற்கை வளங்கள் நிறைந்த இந்திய நாட்டில் இவ்வாறான செயல்களில் மக்கள் ஈடுப்படுவதை பார்க்கும்போது மிகவும் வருத்தமாகவும், கோபமாகவும் உள்ளது. கார்களை ஆக்ரோஷமாக ஓட்டிப் பார்க்க பாதுகாப்பு நிறைந்த நிறைய களங்கள் உள்ளன. அவற்றில் இத்தகைய சாகச பயணங்களை மேற்கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications