போரினால் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய முதல் ஆயில் கம்பெனி! தெரியாம கூட இந்த பங்க் பக்கம் போயிடாதீங்க!
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்ற சூழலினால் இந்தியாவில் உண்மையில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறதா இல்லையா என்பதே பெரிய கேள்விக்குறியாக உள்ளது. ஏனெனில், இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு எதுவும் இல்லை என இந்தியன் ஆயில் கார்பிரேஷன் (Indian Oil Corporation), பாரத் பெட்ரோலியம் கார்பிரேஷன் லிமிடெட் (Bharat Petroleum Corporation Limited - BPCL), இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பிரேஷன் லிமிடெட் (Hindustan Petroleum Corporation Limited - HPCL) உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
குறிப்பாக, BPCL "இது ஆதாரமற்ற வதந்தி" என கூறும் அளவிற்கு எரிபொருள் தட்டுப்பாட்டை நிராகரிக்கிறது. ஆனால் அதேநேரம், இந்தியாவின் முன்னணி பெட்ரோல், டீசல் விநியோகிப்பு நிறுவனங்களுள் ஒன்றான நயாரா எனர்ஜி (Nayara Energy) அதன் எரிபொருள் நிலையங்களில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தி அதிர்ச்சி கொடுத்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு எதுவும் இல்லை என மற்ற நிறுவனங்கள் கூறிவரும் நிலையில், நயாரா எனர்ஜி நிறுவனம் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும் போர் பதற்ற சூழலினால் தான் இந்த விலை அதிகரிப்பை கொண்டுவருவதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த பல மாதங்களாக பெட்ரோல், டீசல் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை என்பது நம் எல்லாருக்கும் தெரிந்த விஷயமே.
மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த சில வாரங்களாக போர் நடைபெற்றுவரும் போதிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த உயர்வும் கொண்டுவரப்படவில்லை. அப்படிப்பட்ட தற்போதைய சூழலில்தான் நயாரா எனர்ஜி முதல் ஆளாக விலை உயர்வை, அதுவும் லிட்டருக்கு ரூ.5 என்கிற அதிகப்படியான விலை உயர்வை கொண்டுவந்துள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய தனியார் எரிபொருள் விநியோகிப்பு நிறுவனமாக நயாரா எனர்ஜி விளங்குகிறது. இந்த நிறுவனத்திற்கு நாடு முழுவதும் கிட்டத்தட்ட 7 ஆயிரம் பெட்ரோல் நிலையங்கள் உள்ளன. ஈரானில் நடைபெற்றுவரும் போரினால் சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததை தொடர்ந்து, இந்த எரிபொருள் விலை உயர்வை கொண்டுவருவதாக நயாரா எனர்ஜி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நயாராவின் இந்த விலை உயர்வானது இந்தியாவில் மாநிலத்தை பொறுத்து சில பைசாக்கள் வேறுப்படும். அதன்படி, சில பகுதிகளில் அதிகப்பட்சமாக ரூ.5.30 வரையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், நயாரா எரிபொருள் நிலையங்களில் ஒரு லிட்டர் டீசலின் விலை அதிகப்பட்சமாக ரூ.3 வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ரோஸ்னெஃப்ட் (Rosneft) என்கிற நிறுவனத்தின் கீழ் செயல்படும் நயாரா எனர்ஜி ஆனது மத்திய அரசின் மானியம் இல்லாமல் செயல்படுகிறது. இதனால்தான், நயாராவின் இவ்வாறான எரிபொருள் விலை அதிகரிப்பு/ குறைப்புகளில் மத்திய அரசால் தலையிட முடிவதில்லை. மேலும் இந்த காரணமாகவே, நயாரா பெட்ரோல் பங்க்களில் வழக்கமான நிலையங்களின் விலையை காட்டிலும் கூடுதல் விலையில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது.
முன்னதாக, கடந்த மார்ச் 20ஆம் தேதி பொது கச்சா எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் (Indian Oil) மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் பிரீமியம் பெட்ரோலின் விலையை லிட்டருக்கு ரூ.2.09இல் இருந்து ரூ.2.35 வரையில் உயர்த்துவதாக அறிவித்தன. இருப்பினும், வழக்கமான பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகளில் அந்த நிறுவனங்கள் எந்த மாற்றமும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும் போர் பதற்ற சூழலினால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் மதிப்பு நாளுக்கு நாள் மாற்றம் கண்டு வருகிறது. இருப்பினும், அதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லையே என நாம் சந்தோஷப்பட்டு கொண்டிருந்த நேரத்தில் நயாரா எனர்ஜி இந்த விலை அதிகரிப்பை கொண்டுவந்து ஷாக் கொடுத்துள்ளது. இது தனியார் நிறுவனம்தான் என்றாலும், நயாராவை தொடர்ந்து மேலும் சில ஆயில் நிறுவனங்களும் விலை அதிகரிப்பை விரைவில் கொண்டுவர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications








