டீசல் என்ஜின் இல்லாதது ஒரு குறையாவே தெரியல... எமனே எதிர்ல வந்தாலும் காரின் 57% ஸ்டீல் கல்லு மாதிரி நிற்கும்!
ரெனால்ட் (Renault) நிறுவனத்தில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய மேம்படுத்தப்பட்ட டஸ்டர் (Duster) விரைவில் வருகிற மார் 17ஆம் தேதியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. முரட்டுத்தனமான தோற்றம் மற்றும் சாலையில் கம்பீரமாக இயங்கும் தன்மை உள்ளிட்டவற்றுடன், முழுக்க முழுக்க இந்தியர்களுக்காக என்றே பார்த்து பார்த்து புதிய டஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இந்த காரில் நாம் கவனிக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் உள்ளன. அவை என்னென்ன என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
முழுக்க முழுக்க இந்தியாவிற்காக: வெளிநாடுகளில் புதிய ரெனால்ட் டஸ்டர் கார் உருவாக்கப் பயன்படுத்தப்படும் சி.எம்.எஃப்-பி (CMF-B) என்கிற சேசிஸ் பிளாட்ஃபாரத்தை பயன்படுத்தாமல், இந்திய சூழல்களுக்கும், இந்திய வாடிக்கையாளர்களுக்கும் என பிரத்யேகமான ஆர்.ஜி.எம்.பி (RGMP) பிளாட்ஃபாரத்தில் இந்தியாவிற்கான டஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது. சி.எம்.எஃப்-பி பிளாட்ஃபாரத்தை போன்று நீடித்து உழைக்கும் தன்மை, நெகிழ்வுத்தன்மை மற்றும் பல்வேறு விதமான உடலமைப்புகளில் கார்களை உருவாக்கும் வகையில் ஆர்.ஜி.எம்.பி பிளாட்ஃபாரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு விதமான பவர்டிரெயின் ஆப்ஷன்ஸ்: ஆர்.ஜி.எம்.பி பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டுள்ள புதிய டஸ்டர் காரில் தற்போதைக்கு பெட்ரோல் என்ஜின் மட்டுமே வழங்கப்பட்டாலும், வரும் ஆண்டுகளில் சிஎன்ஜி (CNG), ஃபிளெக்ஸ் ஃப்யுல் (Flex Fuel) பவர்டிரெயின் ஆப்ஷன்களில் மட்டுமின்றி, டஸ்டர் இவி எலெக்ட்ரிக் காரும் உருவாக்கப்பட்டு அறிமுகம் செய்யப்படுவதற்கு வாய்ப்புள்ளது.
அதுமட்டுமின்றி, தற்போதைக்கு 2-வீல்-டிரைவ் (2WD) காராக இருக்கும் டஸ்டரை 4-வீல்-டிரைவ் காராகவும் மாற்ற முடியும். இவ்வளவு ஏன், டஸ்டர் இவி எலெக்ட்ரிக் காரையும் 4-வீல்-டிரைவ் சிஸ்டத்துடன் உருவாக்க முடியும். ட்யூயல் இன்ஜெக்ஷன் டெக்னாலஜி உடன் உருவாக்கப்பட்டுள்ள புதிய டஸ்டர் காரின் 160 எச்பி டர்போ பெட்ரோல் என்ஜினை வரும் ஆண்டுகளில் தேவைப்பட்டால் பிஎஸ்7 (BS7)-க்கு அப்கிரேட் (Upgrade) செய்துக் கொள்ளலாம்.

பாதுகாப்பு அம்சங்கள்: புதிய டஸ்டர் கார் பாதுகாப்பில் 5 நட்சத்திரங்களை பெறும் என ரெனால்ட் தெரிவித்துள்ளது. அந்த அளவிற்கு இந்த காரில் 57% அதி வலிமையான இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், 12 அடாஸ் (ADAS) வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த அடாஸ் வசதிகள் பிரத்யேகமாக இந்திய சூழல்களுக்கு என்றே உருவாக்கப்பட்டுள்ளன.
அமைதியான கேபின் பயணம்: இயக்கத்தின் போது காருக்குள் எழும் சத்தம் புதிய டஸ்டரில் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்காக, கான்பூரில் உள்ள இந்திய தொழிற்நுட்ப நிறுவனத்துடன் (IIT) இணைந்து அதிவேகத்தில் செல்லும்போது புதிய டஸ்டர் காருக்குள் இரைச்சல் ஏற்படாத வண்ணம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
சிறந்த டிரைவிங் திறன்கள்: அதிக வேகத்தில் ஓட்டும்போதும் டிரைவருக்கு சிறந்த தைரியத்தை வழங்கும் விதமாக புதிய டஸ்டரின் டிரைவிங் திறன்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. காரின் பின்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள ஸ்டாபிளைசர் பார், காரின் பின்பகுதியை இயக்கத்தின்போது நிலையானதாக வைக்கிறது. இதனால், திடீர் திருப்பங்களில் திரும்பும்போது காரின் பின்பகுதி அலையுறுவது இல்லை என்பது மட்டுமின்றி, அதிவேக திருப்பங்களின் போது கார் ஒருபக்கமாக சாய்வதும் இல்லை.
காரின் பிரேக் பேட்களில் குறைவான ஸ்டீல் பயன்படுத்தப்பட்டுள்ளதால், பிரேக் கொடுத்தவுடனே கார் நிற்பதுடன், ஒரே நேரத்தில் தொடர்ச்சியாக பிரேக் கொடுப்பதால் ஏற்படும் வெப்பமும் தவிர்க்கப்படுகிறது. 100A பி.எல்.டி.சி மோட்டாரை பயன்படுத்துவதால் காரின் ஸ்டீயரிங் சக்கரம் நகரத்திற்குள் போக்குவரத்து நெரிசலில் ஓட்டும்போது இலகுவானதாகவும், நெடுஞ்சாலைகளில் அதிவேகத்தில் செல்லும்போது வலிமையானதாகவும் உணர வைத்து ஓட்டுபவருக்கு நம்பிக்கையை அளிக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய சந்தையில் புதிய டஸ்டர் மீது ரெனால்ட் பலத்த எதிர்பார்ப்பு வைத்துள்ளது. நீண்ட காலத்திற்கு விற்பனை செய்ய வேண்டியிருக்கும் என்பதற்காக இந்த எஸ்யூவி கார் எதிர்கால விதிமுறைகளுக்கும், தொழிற்நுட்பங்களுக்கும் தகவமைக்கக் கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பார்த்து பார்த்து உருவாக்கப்பட்டுள்ள இந்த காருக்கு மக்கள் மத்தியில் இருந்து எந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








