நூறு ரூபாய்க்கு பெட்ரோல் போட்டா 1 லிட்டர் கிடைக்க இனி வாய்ப்பே இல்ல! தேர்தல் எப்போ முடியும்னு இருந்தாங்க போல!
இந்தியாவில் பல நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசலில் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. பல நாட்கள் என சொல்வதை காட்டிலும் சில வருடங்களுக்கு பிறகு என்றுதான் சொல்ல வேண்டும். கடைசியாக 4 வருடங்களுக்கு முன் 2022 ஏப்ரல் மாதத்தில் பெட்ரோல், டீசல் விலையில் பெரிய அளவிலான திருத்தங்கள் செய்யப்பட்டன. அதன்பின் இப்போதுதான் அவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் முக்கிய மாநகரங்களில் பெட்ரோலின் விலை அதிகப்பட்சமாக லிட்டருக்கு ரூ.3.29 வரையில் உயர்த்தப்பட்டுள்ளன. கொல்கத்தாவில் இந்த அதிகப்பட்ச ரூ.3.29 விலை உயர்வை பெட்ரோலின் விலை பெற்றுள்ளது. அங்கு ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை தற்போது ரூ.108.74 ஆகும். சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.83 வரையில் உயர்த்தப்பட்டுள்ளது.

| City | Petrol Price (Rs) | Hike (Rs) |
| Delhi | 97.77 | 3 |
| Kolkata | 108.74 | 3.29 |
| Mumbai | 106.68 | 3.14 |
| Chennai | 103.67 | 2.83 |
இதன் விளைவாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.103.67 ஆக உயர்ந்துள்ளது. டீசலின் விலையை பொறுத்தவரையிலும், கொல்கத்தா மற்றும் மும்பையில் அதிகப்பட்சமாக லிட்டருக்கு ரூ.3.11 விலை உயர்த்தப்பட்டுள்ளன. சென்னையில் ரூ.2.86 விலை உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியாவின் முன்னணி 4 மெட்ரோ மாநகரங்களிலேயே அதிக விலையில் டீசல் விற்பனை செய்யப்படுவது சென்னையில் ஆகும்.
| City | Diesel Price (Rs) | Hike (Rs) |
| Delhi | 90.67 | 3 |
| Kolkata | 95.13 | 3.11 |
| Mumbai | 93.14 | 3.11 |
| Chennai | 95.25 | 2.86 |
விலை உயர்வுக்கு பின், சென்னையில் தற்போது ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.95.25 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசலில் இந்த விலை உயர்வுகள் அதிரடியான விலை உயர்வுகளாக தோன்றினாலும், உண்மையில் அதிகரிக்கப்பட வேண்டிய விலை உயர்வில் இது வெறும் 10% மட்டுமே என கூறப்படுகிறது. அதாவது, கடந்த மாதங்களில் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட போர் பதற்ற சூழல் அந்த அளவிற்கான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், அந்த போர் பதற்ற சூழலினால் இந்தியாவில் CNG எனப்படும் அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவின் விலை டெல்லி தலைநகர் பகுதியில் ரூ.2 அதிகரிக்கப்பட்டு ஒரு கிலோவிற்கு ரூ.79.09 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மும்பையிலும் சமீபத்தில்தான் CNG விலை ரூ.2 அதிகரிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு விலைகள் உயர்த்தப்பட்ட போதிலும், இந்தியாவில் எரிபொருட்களுக்கு எந்தவொரு தட்டுப்பாடும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதேபோல், ஈரான் மோதல் மற்றும் ஹார்முஸ் நீரிணை நெருக்கடி காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்ட தடைகள் இருந்த போதிலும், பெட்ரோல், டீசல் அல்லது LPG ஆகியவற்றைத் திட்டமிட்டு குறிப்பிட்ட பகுதிகளுக்கு இவ்வளவு மட்டுமே வழங்க வேண்டும் என பங்கீடு செய்யும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை எனவும் கூறப்படுகிறது.
ஆதலால், "பயப்பட தேவையில்லை. போதுமான சப்ளை உள்ளது. பங்கீட்டு வழங்க தேவையில்லை. அது நடக்கவும் போவதில்லை" என எண்ணெய் செயலாளர் நீரஜ் மிட்டல் தெரிவித்துள்ளார். நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்தியாவில் அடுத்த 60 நாட்களுக்கான பெட்ரோல், டீசல் எரிபொருள் ஸ்டாக்கில் உள்ளது. அதேபோல், LPG எரிபொருளின் ஸ்டாக்கும் கிட்டத்தட்ட 45 நாட்களுக்கு தேவையான அளவு உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இத்தனைக்கும் இந்தியா தனக்கு தேவையான கச்சா எண்ணெயில் சுமார் 90%-ஐ வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்கிறது. மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்ற சூழலால் உலகளவில் கச்சா எண்ணெயின் மதிப்பு சுமார் 50% வரையில் அதிகரித்துள்ளது. இவ்வளவு அதிகப்படியான விலை உயர்ப்பால் சில நாடுகளில் எரிபொருட்களுக்கான தட்டுப்பாடு தலை விரித்தாடுகிறது.
இருப்பினும், பரப்பளவிலும் சரி, மக்கள் தொகையிலும் சரி உலகின் பெரும் நாடுகளுள் ஒன்றாக விளங்கும் இந்தியா அவ்வாறான அதிகப்படியான விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடுகளுக்கு உள்ளாகவில்லை. இதில் இருந்து மத்திய அரசின் நேர்த்தியான செயல்பாடுகளை அறிய முடிகிறது. தற்போது ரூ.3 அளவிற்கு பெட்ரோல், டீசலின் விலை உயர்த்தப்பட்டு இருப்பினும், மக்களிடையே இது பெரிய அளவிற்கான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதுதான் சிறந்த ஆளுமைக்கு எடுத்துக்காட்டு ஆகும்.


Click it and Unblock the Notifications