அணுகுண்டே வச்சாலும் இந்தக் காரை ஒன்னும் பண்ண முடியாது.. பிரதமர் பயன்படுத்துற கார்னா சும்மாவா!
சர்வதேச அளவில் நிலவி வரும் பிரச்சினைகள், போர் பதற்றம் மற்றும் இந்திய அந்நிய செலாவணி கையிருப்புப் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க மக்கள் முன்வர வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். எந்த வகையில் எல்லாம் முடியுமோ அந்த வகையில் எல்லாம் எரிபொருள் பயன்பாட்டை குறைக்கை மக்கள் பரிசீலிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில் மக்களுக்கு தானே ஒரு முன் மாதிரியாகத் திகழ வேண்டும் என்பதற்காக தன்னுடைய பாதுகாப்பு வாகனங்களின் (கான்வாய்) அளவை குறைத்து முதல் அடி அடுத்து வைத்திருக்கிறார் பிரதமர் மோடி. இந்தியாவின் மிகவும் முக்கிய நபர் பிரதமர் தான் என்பதால், எந்த வகையிலான பிரச்சினைகள், தாக்குதல்களையும் எதிர்கொள்ளும் வகையில் பிரதமரின் கான்வாய் அமைக்கப்பட்டிருக்கும்.

வழக்கமாக 12 கார்கள் முதல் 15 கார்கள் வரை பிரதமரின் கான்வாய் கொண்டிருக்கும். இதில் மிகவும் பாதுகாப்பான உறுதியான மெர்சிடீஸ் மேபேக் S650 கார்டு, ரேஞ்சு ரோவர், பல்வேறு டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவிக்கள் மற்றும் இதர வாகனங்கள் இடம்பெற்றிருக்கும். தற்போது மேலே கூறியது போல எரிபொருள் பயன்பாட்டு அளவைக் குறைப்பதற்காக இந்த கான்வாய் அளவு வெறும் இரண்டாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.
டெல்லி சாலைகளில் வெறும் இரண்டு வாகனங்கள் கொண்ட கான்வாயில் பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்யும் வீடியோக்கள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. மோடியைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தன்னுடைய கான்வாயின் அளவைக் குறைத்திருக்கிறார். இவர்களைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களும் கான்வாயின் அளவைக் குறைக்க முன்வருவார்கள் எனத் தெரிகிறது.

பிரதமரின் கான்வாயில் இருக்கும் இரண்டு கார்கள்:
இணையத்தில் பதிவிடப்பட்டு வரும் காணொளியில் இரண்டு கார்கள் கொண்ட கான்வாயில் பிரதமர் மோடி பயணம் செய்து வருவதை நாம் பார்க்க முடிகிறது. அதில் ஒன்று மிக மிகப் பாதுகாப்பான ரேஞ்சு ரோவர் சென்டினல் (Range Rover Sentinal) கார். மற்றொன்று பிரதமரின் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட மிகவும் பாதுகாப்பான ஃபார்ச்சூனர் எஸ்யூவி.
ரேஞ்சு ரோவர் சென்டினலை வெறும் கார் என்று நாம் சொல்ல முடியாது. நகரும் கோட்டை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு எந்த விதமான எதிர்பாராத தாக்குதலையும் எதிர்கொண்டு உள்ளே இருப்பவரின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்யும் திறன் கொண்டதாக இந்த சென்டினல் கார் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. உலகளவில் முக்கிய தலைவர்கள் மற்றும் மிகவும் முக்கிய நபர்களுக்காக மட்டுமே இந்தக் கார் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தக் காரில் மிகவும் பாதுகாப்பான பயணிகளுக்கான அறையைக் கொண்டுள்ளது. எந்த விதமான துப்பாக்கியின் தோட்டாவாலும் துளைக்க முடியாத மிகவும் உறுதியான ஸ்டீல் மற்றும் கண்ணாடிகள் பல்வேறு அடுக்குளாக இந்தக் காரின் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. காரின் அடிப்புறமும் மேற்புறமும் கூட மிகவும் உறுதியான பொருட்களாலேயே கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.
எந்த அளவிற்கு உறுதி என்றால், 15 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு காரின் அடியில் வெடித்தாலும் கூட தகர்க்க முடியாத அளவிற்கான கட்டமைப்பை காரின் அடிப்பாகமும், மேற்புறமும் கொண்டிருக்கும். சுயமாக சீல் செய்து கொள்ளும் வகையிலான எரிபொருள் டேங்க், வேற்று நபர்கள் பாதுகாப்பில் இடையூறு செய்ய முடியாத வகையிலான எக்சாஸ்ட் சிஸ்டம் என எந்தெந்த வகையில் எல்லாம் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்க முடியமோ அதையெல்லாம் தடுக்கும் வகையில் பார்த்துப் பார்த்து இந்தக் கார் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த ரேஞ்சு ரோவர் சென்டினல் காரின் டயரை துப்பாக்கியால் சுட்டாலும் கூட பாதிக்கப்பட்ட டயர்களுடன் மணிக்கு 80 கிமீ வேகத்தில் 50 கிமீ வரை பயணிக்கும் திறனை இந்தக் கார் கொண்டுள்ளது. இது தவிர தீயை அணைப்பதற்கான சிஸ்டம், சிறப்பு பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட விண்டோக்கள் என இந்தக் காரின் ஒவ்வொரு அம்சம் மற்றும் வடிவமைப்புமே வழக்கமான நாம் பயன்படுத்தும் காரில் இருந்து வேறுபட்டு பாதுகாப்பை மையமாகக் கொண்டதாகவே இருக்கும்.
இந்தக் காரில் 5.0 லிட்டர் சூப்பர்சார்ஜ்டு V8 பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜினானது 380 hp பவரை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜினுடன் மணிக்கு 100 கிமீ வேகத்தை 10.4 நொடிகளில் எட்டுவதோடு, அதிகபட்சமாக மணிக்கு 193 கிமீ வரையிலான வேகத்தில் செல்லும் திறனையும் கொண்டிருக்கிறது. இது கட்டுப்படுத்தப்பட்ட அதிகபட்ச வேகம் என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கமான ஒரே ரேஞ்சு ரோவர் எஸ்யூவி 2,500 கிலோ வரையிலான எடையைக் கொண்டிருக்கும். ஆனால் இந்த ரேஞ்சு ரோவர் சென்டினல் கார் இதிலிருக்கும் பாதுகாப்பும் அம்சங்களின் காரணமாக கிட்டத்தட்ட இருமடஙகாக 4,400 கிலோ வரையிலான எடையைக் கொண்டுள்ளது. ஒப்பீட்டிற்கு சொல்ல வேண்டும் என்றால் மஹிந்திரா தாரின் எடை 1660 கிலோ முதல் 1845 கிலோ வரை தான்.
பிரதமர் மோடி இந்த ரேஞ்சு போவர் சென்டினல் காரிலேயே பிரதானமாக உள்நாட்டில் பயணம் செய்வார் எனத் தெரிகிறது. இந்தக் காருடன் டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி ஒன்றும் பிரதமரின் கான்வாயில் உள்ளது. ஃபார்ச்சூனர் என்றால் வழக்கமாக நாம் வாங்கும் மாடல் கிடையாது. பிரதமரின் பயன்பாட்டிற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்படும், மேற்கூறியது போலவே மிகவும் பாதுகாப்பான ஃபார்ச்சூனர் கார் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு கார்கள் கொண்ட கான்வாய் என்றாலும் பிரதமரின் பாதுகாப்பை முழுவதுமாக உறுதி செய்யும் வகையிலேயே இந்த இரண்டு கார்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், ப்ளூ புக்கில் இருக்கும் ப்ரோட்டோகால்களைப் பின்பற்றி பிரதமரின் பாதுகாப்பிற்கு எந்த சமரசமும் செய்யாமலேயே புதிய சிறிய கான்வாய் கொண்ட நடைமுறை செயல்படுத்தப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மக்களை ஒரு விஷயத்திற்காக கேட்டுக் கொண்டதோடு, அதனைத் தானும் பின்பற்றத் தொடங்கிய பிரதமரின் செயல் பாராட்டுக்குரியது. உண்மையிலேயே இது பிற அரசு அதிகாரிகளையும், மக்களையும் பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க செயல்படத் தூண்டும். 15 கார்களில் இருந்து வெறும் 2 கார்கள் கொண்ட கான்வாய் என்பது அதிரடியான மாற்றம் தான். இன்னும் சில கார்களை கான்வாயில் வைத்திருக்கலாம். ஆனால் என்ன காரணத்தினாலோ மிக மிகக் குறைவான அளவை முடிவு செய்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications