பழைய வாகனங்களை ஒழித்து கட்ட அரசு அதிரடி திட்டம்... ரகசிய தகவல் வெளியே கசிந்ததால் நடுக்கத்தில் மக்கள்...
இந்தியாவில் காற்று மாசுபாடு மற்றும் போக்குவரத்து நெரிசல் ஆகிய 2 பிரச்சனைகளுக்கும், வாகனங்கள் மிகவும் முக்கியமான காரணமாக கருதப்படுகின்றன. எனவே வாகன பெருக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. குறிப்பாக சுற்றுச்சூழலை கடுமையாக மாசுபடுத்த கூடிய பழைய வாகனங்களின் பயன்பாட்டை குறைக்க தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில், 10 ஆண்டுகள் ஆன டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகள் ஆன பெட்ரோல் வாகனங்களை இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டில் இருந்தே டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் இந்த தடை அமலில் இருந்து வருகிறது.

எனவே டெல்லி தேசிய தலைநகர் பிராந்திய சாலைகளில் 10 ஆண்டுகள் ஆன டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகள் ஆன பெட்ரோல் வாகனங்களை இயக்க முடியாது. வேண்டும் என்றால், அந்த வாகனங்களுக்கு தடையில்லா சான்றிதழ் பெற்று விட்டு, டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்திற்கு வெளியே, இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ள முடியும்.
தற்போது இதே போன்றதொரு திட்டத்தை மஹாராஷ்டிரா மாநிலம் புனேவிலும் (Pune) செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவின் மற்ற பெரு நகரங்களை போலவே, புனேவிலும் பழைய வாகனங்களால் கடுமையான காற்று மாசுபாடு பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. எனவேதான் புனேவில் இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டம் அமலுக்கு வந்தால், இந்தியாவில் டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்திற்கு அடுத்தபடியாக, 10 ஆண்டுகள் ஆன டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகள் ஆன பெட்ரோல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்ட 2வது பெரிய நகரம் என்ற பெயரை புனே பெறும்.
ஆனால் இந்த திட்டம் தற்போது பரிசீலனையில் மட்டுமே இருப்பதாக அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர். அதாவது புனே நகரில் போக்குவரத்து நெரிசல் மற்றும் காற்று மாசுபாடு பிரச்சனையை குறைப்பது எப்படி? என அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். அப்போது பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இதில், 10 ஆண்டுகள் ஆன டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகள் ஆன பெட்ரோல் வாகனங்களுக்கு தடை விதிக்கும் திட்டமும் ஒன்றாகும். ஆனால் இந்த திட்டம் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி தற்போதைய நிலையில் பரிசீலனையில் மட்டுமே உள்ளது. இது தொடர்பாக இறுதி முடிவு எதுவும் இன்னும் எடுக்கப்படவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இது குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வெறும் வயதின் அடிப்படையில் மட்டும் வாகனங்களுக்கு தடை விதிப்பதை நாங்கள் ஆதரிக்கவில்லை. ஏனெனில் ஒரு சிலர், பழைய வாகனங்களை நல்ல கண்டிஷனில் பராமரித்து வருகின்றனர். எனவே வெறும் வயதின் அடிப்படையில் மட்டும் பழைய வாகனங்களுக்கு தடை விதித்தால், அவர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
எனவே வாகனங்களின் உண்மையான மாசுபாட்டை கண்டறிந்து, அதற்கு ஏற்ப தடை விதிக்க வேண்டும் என நாங்கள் கருதுகிறோம். அதாவது வாகனங்களை பரிசோதனைக்கு உட்படுத்தி, அவை கடுமையான காற்று மாசுபாட்டை ஏற்படுத்துகிறது என்பது உறுதி செய்யப்பட்டால், அந்த வாகனங்களுக்கு மட்டும் தடை விதிக்க வேண்டும் என்பதுதான் டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து.
இருப்பினும் எதிர்காலத்தில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் விதிக்கப்படலாம் என பலரும் கருதுகின்றனர். இதன் காரணமாக தற்போதே பலரும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகின்றனர். இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை மிகவும் வேகமாக உயர்ந்து வருவதற்கு இது மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாகும்.


Click it and Unblock the Notifications








