உச்ச நீதிமன்றத்தின் ஒரே உத்தரவில் மொத்தமாக மாற போகும் நெடுஞ்சாலைகள்! மீறுபவர்களுக்கு கடும் அபராதம்!
நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது பெரும் இடையூறாக வாகன ஓட்டிகள் பலர் குற்றஞ்சாட்டுவது, சாலையோரங்களில் நிறுத்தப்படும் கனரக வாகனங்களே ஆகும். இது விபத்துகளுக்கும், அதன் விளைவாக உயிரிழப்புகளுக்கும் காரணமாக விளங்குவதை பல சமயங்களில் பார்த்துள்ளோம். நெடுஞ்சாலை ஓரங்களில், குறிப்பாக உணவகங்களுக்கு அருகிலும், லாரி ஓட்டுனர்கள் ஓய்வெடுக்கும் அறைகள் உள்ள பகுதிகளிலும் லாரிகள் வரிசைக்கட்டி நிற்பதை பார்க்க முடியும்.
லாரிகளை தாண்டி, சமீப காலமாக பேருந்துகளும் இவ்வாறு நிறுத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. நெடுஞ்சாலை ஓரங்களை கனரக வாகனங்களை நிறுத்தி வைக்கும் பகுதியாகவே பல கனரக வாகன ஓட்டிகள் கருதுகின்றனர். இரவில் இதனால் வாகன ஓட்டிகள் இடையூறுகளை சந்திக்கின்றனர் என்று தெரிந்தும் இதனை செய்வதுதான் அலட்சியத்தின் உச்சம். ஆனால், இனி இப்படி எல்லாம் செய்ய முடியாது.

ஏனெனில், இந்திய நெடுஞ்சாலைகளில் சாலையோரங்களில் கமர்ஷியல் மற்றும் கனரக வாகனங்களை நீண்ட நேரத்திற்கு நிறுத்தி வைப்பதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தொடர் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் இதனால் ஏற்படுவதை அடுத்து இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. நெடுஞ்சாலைகள் மட்டுமின்றி, சர்வீஸ் சாலைகளிலும் கனரக வாகனங்களை நிறுத்த உச்ச நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உத்தரவை பிறப்பித்ததோடு மட்டுமில்லாமல், இதனை அதிநவீன டிராஃபிக் மேனேஜ்மெண்ட் சிஸ்டம்ஸ் (ATMs) மூலம் கண்காணிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவையும் பிறப்பித்து, ஜிபிஎஸ் (GPS) சார்ந்த ஆதாரங்களுடன் நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆணையிட்டுள்ளது. இதனால், விதிமீறலில் ஈடுப்படும் வாகனங்களின் உரிமையாளர்களுக்கு பெரிய அளவிலான தொகை அபராதமாக விதிக்கப்படும் என்பது உறுதி.

தேசிய நெடுஞ்சாலைகளிலும், மாநில நெடுஞ்சாலைகளிலும் கமர்ஷியல் அல்லது கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்கும் பொறுப்பு தேசிய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சகம், இந்திய தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம், மாநில காவல் மற்றும் போக்குவரத்து துறையினருக்கு உள்ளது. இந்த துறைகளின் அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றத்தால் 60 நாட்கள் கெடு விதிக்கபட்டுள்ளது.
அதற்குள்ளாக, இந்த உத்தரவை முழுவதுமாக அமல்படுத்திவிட வேண்டும் மற்றும் அதனை தொடர்ந்து பரமாரிப்பதற்கான வரையறையை அமைத்திட வேண்டும். அத்துடன், வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலை ஓரங்களில் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு காரணமாக அமையும் கடைகள் மற்றும் ஓட்டல்கள் எதையும் நெடுஞ்சாலைகளுக்கு அருகில் புதியதாக அமைத்திடவும் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஏற்கனவே கடை மற்றும் ஓட்டல்களை வைத்திருப்பவர்களும் தாங்கள் முறையான விதிமுறைகளை பின்பற்றுவதை அடுத்த 30 நாட்களுக்குள் நிரூபித்து தங்களது லைசன்ஸை புதுப்பித்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. மேலும், நெடுஞ்சாலைகளில் அதிகமாக விபத்து நடக்கும் பகுதிகளை கண்டறிந்து, அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை 15 நாட்களுக்குள் மேற்கொள்ள வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தகுந்த அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சமீபத்தில் மூன்று இளைஞர்கள் ஒரே பைக்கில் ட்ரிபிள்ஸில் அதிவேகமாக சென்று, நின்று கொண்டிருந்த லாரியில் மோதி உயிரிழந்த சம்பவம் தொடர்பான வீடியோ நாடு முழுவதும் வைரலானதை தொடர்ந்து உச்ச நிதீமன்றம் இந்த கடுமையான கட்டுப்பாடுகளை பிறப்பித்துள்ளது. ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாக செல்வதற்கே நெடுஞ்சாலைகளும், விரைவுச்சாலைகளும் ஆகும்.
சமீப காலமாக லேட்டஸ்ட் தரத்தில் அமைக்கப்பட்டு வரும் விரைவுச்சாலைகளில் கனரக வாகன ஓட்டுனர்கள் ஓய்வெடுப்பதற்காக என்றே தனியாக பகுதிகள் ஒதுக்கப்படுகின்றன. இந்த பகுதிகள் இன்னும் இந்தியா முழுவதும் வராத காரணத்தினாலும், இருக்கும் இடங்களிலும் வாகன ஓட்டிகள் இதனை முறையாக பின்பற்றாததினாலும் தான் நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. தற்போது உச்ச நீதிமன்றம் இதுதொடர்பான உத்தரவை பிறப்பித்துள்ளதால், இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறும் என்று எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications








