இந்தியாவிற்கே முன் உதாரணமாக தமிழ்நாடு தவெக அரசு செய்ய போகும் காரியம்! பெட்ரோல், டீசல் வாகனங்களை ஓரங்கட்டுங்க!
2031ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாடு முழுவதும் 20 ஆயிரம் பொது EV சார்ஜிங் நிலையங்களை அமைக்க தமிழ்நாடு அரசு ஜூலை 14ஆம் தேதியான இன்று இலக்கு நிர்ணயித்துள்ளது. மாநிலத்தில் புதியதாக ஆட்சிக்கு வந்துள்ள தவெக கட்சி தனது வேலைப்பாடுகளில் தீவிரமாக ஈடுப்பட ஆரம்பித்து இருக்கும் நிலையில், மாநில அரசின் பொது EV சார்ஜிங் நிலையங்கள் குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க கடந்த பல வருடங்களாகவே மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கும், அவற்றை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கும் மானியம் வழங்கும் வகையில் ஃபேம்-2 (FAME-2) திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது எல்லாம் இதன் ஒரு பகுதியே ஆகும்.

அத்தகைய நடவடிக்கைகளின் மூலமாகவே, இந்தியாவில் தற்போது ஓரளவிற்கு எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இருப்பினும், மற்ற வளர்ந்த நாடுகள் அளவிற்கு இந்தியாவில் EV புரட்சியின் வேகம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கு முக்கிய காரணம், பரந்த விரிந்த இந்திய பாரத நாட்டில் பெட்ரோல் பங்க்களை போன்று EV சார்ஜிங் நிலையங்களை கொண்டுவருவது மிக பெரிய சவாலாக உள்ளது.
பல்வேறு விதமான நிலப்பரப்புகளையும், வெப்ப சூழல்களையும் இந்தியா கொண்டிருப்பது இதற்கு காரணம் என்றாலும், அதை விட முக்கிய காரணம் EV சார்ஜிங் உள்கட்டமைப்புகளை நாடு முழுவதும் கொண்டுவருவதற்கான பெரும் செலவுகள் மற்றும் முதலீடுகள் ஆகும். எலெக்ட்ரிக் வாகனங்கள் உடன் அவற்றை வீட்டிலேயோ அல்லது அலுவலகத்திலோ சார்ஜ் செய்வதற்கு சார்ஜர்கள் வழங்கப்படுகின்றன.

இருந்தாலும், அவை வாகனத்தை சார்ஜ் செய்வதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்வதால் விரைவாக சார்ஜ் செய்யக்கூடிய பொது EV சார்ஜர்களின் தேவை உள்ளது. சில தனியார் நிறுவனங்கள் பொது EV சார்ஜிங் மையங்களை நிறுவுவதில் ஈடுப்பட்டு வருகின்றன என்றாலும், பல நிறுவனங்கள் இன்னமும் தயக்கம் காட்டுகின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.
இதனாலேயே இந்த விஷயத்திலும் அரசாங்கத்தின் பங்களிப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதனை நன்கு உணர்ந்துள்ள தமிழ்நாடு அரசு 2031ஆம் ஆண்டிற்குள், அதாவது இந்த ஆட்சிக் காலம் முடிவதற்குள் மாநிலம் முழுவதும் குறைந்தப்பட்சம் 20 ஆயிரம் பொது EV சார்ஜிங் நிலையங்களை அமைக்க தனக்கு தானே இலக்கு நிர்ணயித்துக் கொண்டுள்ளது.
தமிழ்நாட்டில் எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டை அதிகரிக்கவும், சார்ஜிங் பற்றாக்குறை குறித்த அச்சத்தைப் போக்கவும் இந்த மெகா திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போதைக்கு சுமார் 1,800 சார்ஜிங் நிலையங்கள் உள்ள நிலையில், 2031ஆம் ஆண்டிற்குள் இதனை 20 ஆயிரம் நிலையங்களாக அதிகரிக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக, சார்ஜிங் நிலையங்களை அமைப்போருக்கு உதவ, மின் கட்டணக் கொள்கைகளில் திருத்தங்கள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட உள்ளன. மேலும், EV சார்ஜிங் மையங்களுக்கு என தனியாக எலெக்ட்ரிக் சப்-மீட்டர்களும் வழங்கப்பட உள்ளன. TNEV இணையதளம் மூலம், மாநிலத்தில் உள்ள சார்ஜிங் நிலையங்களின் இருப்பிடம், கட்டணம் மற்றும் பயன்பாட்டு குறித்த நிலையை பொதுமக்கள் எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க பொது EV சார்ஜிங் நிலையங்கள் அவசியமான ஒன்றாகும். ஆகையால், தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கையின் மூலமாக மாநிலத்திற்குள் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பது மட்டுமில்லாமல், தமிழ்நாட்டிற்கு எலெக்ட்ரிக் வாகனங்களை கொண்டுவரும் மாற்று மாநில வாகன ஓட்டிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications