3 பேரும் காருக்கு கோவில் கட்டி கும்பிடனும்! 30- 40 அடி பள்ளத்தில் சாதாரணமா குதிச்சாலே காலி, இதுல காருடன் வேறயா
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டு மக்கள் மத்தியில் மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ள சியரா (Sierra) கார் அறிமுகத்திற்கு பிறகு முதல்முறையாக விபத்தில் சிக்கியுள்ளது. சுமார் 30- 40 அடி உயரத்தில் இருந்து விழுந்த போதிலும் சியராவின் வலுவான கட்டமைப்பு தரத்தை பறைச்சாற்றும் விதமாக காருக்கு உள்ளே இருந்த எவருக்கும் எந்த காயமும் ஏற்படாதது ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
டாடா சியரா இந்த பெயருக்கு அறிமுகமே தேவை இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில், ஒரு சமயத்தில் அந்த அளவிற்கு பிரபலமாக இருந்த காரணத்தினாலேயே அதே பெயரில் மீண்டும் புதிய சியரா காரை கடந்த ஆண்டில் டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு கொண்டுவந்தது. மக்களுக்கு பரீட்சையமான பெயர் என்பதினாலேயே அதிக பேர் சியராவை வாங்குகின்றனர் என்பது அதன் கடந்த பிப்ரவரி மாத விற்பனை எண்ணிக்கையை பார்த்தாலே தெரிகிறது.

அவ்வாறு புதிய சியரா காரை வாங்க பெண் ஒருவர் டெஸ்ட் டிரைவ் (Test Drive) செய்து பார்த்த போது இந்த விபத்து நடந்துள்ளது. அப்போது அவருடன் சேர்த்து காருக்குள் இரு ஷோரூம் (Showroom) ஊழியர்கள் இருந்துள்ளனர். இருப்பினும் நல்லவேளையாக பயணிகள் மூவருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. மஹாராஷ்டிராவின் தானே பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது.
கிட்டத்தட்ட 30- 40 அடி ஆழ பள்ளத்தில் விழுவதற்கு முன் ஒரு ஆட்டோரிக்ஷா (Autorickshaw) மற்றும் இரு இருசக்கர வாகனங்கள் மீது டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்த பெண் டாடா சியரா காரை மோதி உள்ளார். விபத்தை பார்த்தும், அருகே இருந்தவர்கள் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களை மீட்டனர்.

விபத்தில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இருவருக்கு சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளன. இதில் இருந்து டாடா சியரா காரின் கட்டமைப்பு தரத்தையும், பாதுகாப்பு அம்சங்களை பற்றியும் அறியலாம். சம்பவத்தின்போது ஏர்பேக்குகள் சரியான நேரத்தில் விரிவடைந்து பயணிகளின் உயிரை காப்பாற்றி உள்ளன.
இருப்பினும், இந்த விபத்திற்கு காரணம் என்ன என்பது உறுதியாக தெரியவில்லை. டாடா சியராவின் பாதுகாப்பு தரத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இந்த கார் இன்னும் எந்தவொரு என்சிஏபி (NCAP) கிராஷ் டெஸ்ட்டிலும் உட்படுத்தப்படவில்லை. ஆனால், டாடா நிறுவனம் பல்வேறு விதமான சோதனைகளை சியரா காரின் அறிமுகத்தின் போது நிகழ்த்தி காட்டியிருந்தது.
அவையாவும், டாடா நிறுவனத்தின் தொழிற்சாலைக்குள் நடத்தப்பட்டவை ஆகும். இதில், கார்-டு-கார் மோதல் சோதனையில் இரு சியரா கார்கள் நேருக்கு நேர் மோதவிடப்பட்டன. இப்போது எல்லாம் கார்-டு-கார் மோதல் சோதனைகள் அதிகமாக நடத்தப்படுவதில்லை எனும் நிலையில், டாடா நிறுவனத்தின் இந்த கார்-டு-கார் சோதனையில் சியரா காரின் உட்புற கேபின் பாதுகாப்பாக இருந்தது.
காரின் கதவுகள், மோதலுக்கு பிறகே திறந்தன; எரிபொருள் டேங்க் சிஸ்டம் மோதல் ஏற்பட்டதும் உடனடியாக தானாக சீல் வைத்துக் கொண்டது. சோதனையின்போது காருக்குள் அமர வைக்கப்பட்டு இருந்த டம்மிகளுக்கு சீட் பெல்ட்கள் பாதுகாப்பாக இருந்தன மற்றும் மோதலுக்கு பின் அவை தானாக விடுவிக்கப்பட்டன. டாடா நிறுவனம் நடத்திய இந்த சோதனையில் இரு சியரா கார்களிலும் முன்பக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், அதன் தாக்கம் காரின் முன்பக்க தூண்களை கூட தாண்டவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா சியரா கார் இன்னும் எந்தவொரு மோதல் சோதனைகளிலும் உட்படுத்தப்படவில்லை என்றாலும், தற்போது நடந்திருக்கும் இந்த விபத்தை விட அதன் பாதுகாப்பு தரத்தை நிஜ உலகில் அறிய இதைவிட வேறு என்ன வேண்டும். மேலும், இந்த விபத்து சியரா காருக்கு மறைமுக விளம்பரமாகவும் அமைந்துள்ளது என்பதில் மாற்று கருத்து இல்லை.


Click it and Unblock the Notifications








