அரசின் திடீர் உத்தரவால் வாகன உரிமையாளர்களுக்கு 10,000 செலவு! இதை செய்யலனா அவ்ளோதான்! கதை முடிஞ்சுது!
உத்தர பிரதேச (Uttar Pradesh) மாநிலத்தில் உள்ள மிகவும் முக்கியமான மாவட்டங்களில் ஒன்று காஸியாபாத் (Ghaziabad). இது டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தின் (Delhi National Capital Region) ஒரு பகுதியாகவும் இருந்து வருகிறது. இம்மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வர்த்தக வாகனங்களுக்கு தற்போது அதிரடியான உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி காஸியாபாத் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பஸ்கள், பள்ளி வேன்கள் மற்றும் டாக்ஸிகள் போன்ற வர்த்தக வாகனங்களில், வரும் ஏப்ரல் 1ம் தேதிக்கு முன்பாக, வாகனம் எங்கு உள்ளது என்பதை டிராக்கிங் செய்ய உதவி செய்யும் டிவைஸை (Vehicle Location Tracking Device - VLTD) பொருத்த வேண்டும்.

இந்த டிவைஸ், AIS-140 தரச்சான்று பெற்றதாக இருக்க வேண்டும். வாகனங்களில் பொருத்தப்பட்ட பிறகு, போக்குவரத்து துறையின் கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள சர்வர் உடன், இந்த டிவைஸ் இணைக்கப்படுவது அவசியம் ஆகும். இதன் மூலம் பஸ்கள், பள்ளி வேன்கள் மற்றும் டாக்ஸிகள் போன்ற வாகனங்களில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு இதன் மூலம் மேம்படும். இந்த டிவைஸ் மட்டுமல்லாது, வர்த்தக வாகனங்களில், பேனிக் பட்டன் (Panic Button) பொருத்துவதும் கட்டாயம் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. ஒருவேளை அவசர சூழல்களில் யாராவது இந்த பேனிக் பட்டனை அழுத்தினால், அந்த தகவல் போக்குவரத்து துறையின் கட்டுப்பாட்டு மையத்திற்கு செல்லும்.

இதன் மூலம் அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். வரும் ஏப்ரல் 1ம் தேதிக்கு முன்பாக வர்த்தக வாகனங்களில் டிராக்கிங் டிவைஸ் மற்றும் பேனிக் பட்டன் ஆகியவற்றை பொருத்தியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் பின் வரும் நடவடிக்கைகளை வாகன உரிமையாளர்கள் எதிர்கொள்ள நேரிடும்.
இதன்படி இந்த உத்தரவிற்கு இணங்க மறுக்கும் வாகனங்களுக்கு, ஃபிட்னஸ் சர்டிஃபிகேட் வழங்கப்படாது. அதேபோல் புதிய பர்மிட்கள் எதையும் வாகன உரிமையாளர்கள் பெற முடியாது. அத்துடன் ஏற்கனவே வழங்கப்பட்ட பர்மிட்களை புதுப்பிக்கவும் முடியாது. அத்துடன் தடையில்லா சான்றிதழையும், வாகன உரிமையாளர்களால் பெற இயலாது.
ஒருவேளை தடையில்லா சான்றிதழ் இல்லாவிட்டால், மற்ற மாவட்டம் அல்லது மாநிலத்திற்கு டிரான்ஸ்ஃபர் செய்வது கடினமான விஷயமாக மாறி விடும். அத்துடன் வாகனத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்த பின் மேற்கொள்ளப்படும் பெயர் மாற்றத்திலும் சிக்கல்கள் ஏற்படும். எனவே வாகன உரிமையாளர்கள் இந்த உத்தரவிற்கு இணங்க வேண்டும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து நியூஸ் 18 தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: AIS-140 தரச்சான்று பெற்ற டிராக்கிங் டிவைஸ் மற்றும் பேனிக் பட்டன் ஆகியவற்றை வாகனத்தில் பொருத்துவதற்கு 5 ஆயிரம் ரூபாயில் 10 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஆகலாம் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது வாகன உரிமையாளர்களுக்கு செலவுதான் என்றாலும் கூட, பெண்கள் மற்றும் குழந்தைகள் போன்றவர்களின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை வரவேற்கப்பட வேண்டிய ஒரு விஷயம்தான்.


Click it and Unblock the Notifications








