வீடியோவால் சிக்கிய 32 வயது வாகன ஓட்டி... பார்த்து பார்த்து ஆசையாய் வாங்கிய கார் போலீஸ் ஸ்டேஷனில்!
ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார் உரிமையாளர் ஒருவர் ஹைவேயில் தனது காரில் மணிக்கு 200கிமீ வேகத்தில் சென்றதற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சிக்கியது எப்படி? இந்தியாவில் நெடுஞ்சாலைகளில் அதிகப்பட்சமாக எவ்வளவு வேகத்தில் செல்லலாம்? என்பது குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
சமூக வலைத்தளங்களின் மோகம் மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக, இணையத்தில் கவனத்தை பெற பல்வேறு விதமான செயல்களில் மக்கள் பலர் ஈடுப்படுகின்றனர். அது சில நேரங்களில் ஆபத்தான செயலாக அமைகிறது. அவ்வாறுதான், இங்கு ஒரு விர்டுஸ் கார் உரிமையாளர் ஆபத்தை உணராமல் தனது காரில் அதிவேகமாக சென்று, அதனை வீடியோவாக காட்சிப்படுத்தி இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

ஹைதராபாத்தில் நெடுஞ்சாலை ஒன்றில் கடந்த மே 10ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. அவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து கடைசியில் அதுவே அவர் போலீசாரிடம் சிக்குவதற்கு காரணமாக அமைந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தை சேர்ந்தவர், கோதாபள்ளி யஷ்வந்த் ரெட்டி ஆவார்.
தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் 32 வயதான இவர், மே 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணியளவில் ORR எனப்படும் அவுட்டர் ரிங் ரோடுக்கு தனது புத்தம் புதிய ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரை கொண்டு சென்றுள்ளார். புத்தம் புதியதாக கார் வாங்கிய ஆர்வத்தில் நெடுஞ்சாலையில் சீறியப்படி காரை ஓட்டிச் சென்றுள்ளார்.

காலியான நெடுஞ்சாலையை பார்த்தவுடன் காரின் வேகத்தை மேலும் கூட்டிய கோதாபள்ளி யஷ்வந்த் ரெட்டி குறுகிய நேரத்திலேயே மணிக்கு 120கிமீ வேகத்தை கடந்துவிட்டார். பின்னர் ஒரு கட்டத்தில், மணிக்கு 200கிமீ வேகத்தையும் எட்டியவர், அதனை வீடியோவாக காட்சிப்படுத்தி இணையத்தில் வெளியிட்டுள்ளார். இருப்பினும், அந்த சமயத்தில் அவரது இரு கைகளும் காரின் ஸ்டீயரிங் சக்கரத்தில் இருந்தன.
தலையில் அணியக்கூடிய கேமரா மூலமாக அந்த காட்சிகளை கோதாபள்ளி யஷ்வந்த் ரெட்டி காட்சிப்படுத்தி உள்ளார். அதாவது, முன்கூட்டியே எல்லாவற்றிற்கும் தயாராக தான் வந்துள்ளார். விர்டுஸ் காரை அதிகப்பட்சமாக மணிக்கு 203கிமீ வேகத்திற்கு இவர் ஓட்டியுள்ளார். காருக்குள் பாடல்களை கேட்டபடி, முன்னால் செல்லும் வாகனங்களை அவ்வளவு வேகத்தில் முந்தியப்படி கோதாபள்ளி யஷ்வந்த் ரெட்டி காரை ஓட்டிச் சென்றுள்ளார்.
நல்லவேளையாக அந்த சமயத்தில் குறைவான வாகனங்களே சென்றன. இந்த வீடியோ போலீசார் கண்ணில் பட்டதை தொடர்ந்து கோதாபள்ளி யஷ்வந்த் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார். மற்றவர்களின் உயிருக்கு ஆபத்து விளைவிப்பது மற்றும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியது உள்ளிட்ட குற்றங்களுக்காக BNS சட்டம் 281இன் 125ஆம் பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
புதியதாக வாங்கிய கார் என்பதால், இந்த விர்டுஸ் காருக்கு தற்போதைக்கு தற்காலிக வாகன பதிவெண் மட்டுமே உள்ளது. ஆர்டிஓ பதிவெண் கிடைப்பதற்கு சில நாட்கள் ஆகும். அதற்குள்ளாகவே கோதாபள்ளி யஷ்வந்த் ரெட்டி இப்படியொரு சம்பவத்தில் ஈடுப்பட்டுள்ளார். மேலும், காருக்கு ஃபாஸ்டேக்கும் வாங்கப்படவில்லை. அப்படியென்றால், நெடுஞ்சாலை மற்றும் விரைவுச்சாலைகளில் ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் கட்டணம் செலுத்த வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த சம்பவத்தின்போது சம்பந்தப்பட்ட ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காருக்கு பக்கத்தில் லம்போர்கினி கார் ஒன்றும் ஏறக்குறைய மணிக்கு 150கிமீ வேகத்தில் சென்றுள்ளது. இந்திய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகளில் அனுமதிக்கப்பட்ட வேகம் மணிக்கு 120கிமீ மட்டுமே ஆகும். அதுவும், முன்னால் செல்லும் வாகனத்தை ஓவர்டேக் செய்வதற்கே; மற்றப்படி 110kmph தான். அப்படியென்றால், கோதாபள்ளி யஷ்வந்த் ரெட்டி எவ்வளவு வேகத்தில் தனது விர்டுஸ் காரில் சென்றுள்ளார் என்று யோசித்து பாருங்கள்.
படங்களில் திருத்தம் செய்யப்பட்டு, மாற்றப்பட்டன.


Click it and Unblock the Notifications