பெட்ரோல் செலவை விட குறைவாக இருக்கும்னு சொல்லுவாங்க... நம்பி இ85 பக்கம் போய்டாதீங்க!
இந்தியாவில் பெட்ரோலின் பயன்பாட்டை குறைத்து அதற்கு பதிலாக எத்தனாலின் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசாங்கம் இந்த விஷயத்தில் தீவிரமாக உள்ளது. ஏனெனில் இதன் மூலமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் அளவை குறைத்து, வெளிநாட்டு அந்நிய செலவாணியை குறைக்கலாம்.
பெட்ரோலுக்கு பதிலாக எத்தனாலை பயன்படுத்துவது இவ்வாறு நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவுவது மட்டுமின்றி, தனி நபரின் பொருளாதாரத்திற்கும் உதவும் என கூறப்பட்டு வருகிறது. ஆனால் உண்மையில் தற்போதைய சூழல் அவ்வாறு இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. அதாவது, எதிர்பார்க்கும் அளவிற்கு எல்லாம் எத்தனால் மூலமாக எரிபொருள் செலவை கட்டுப்படுத்த முடியாது.

இன்னும் சொல்லப்போனால், எத்தனாலை பயன்படுத்துவதால் செலவு சற்று அதிகமாக தான் ஆகிறது. இதற்கு உதாரணமாக ஒரு கணக்கீட்டை பார்ப்போம். ஒருவர் ஒரு காரை வைத்துள்ளார்; அது லிட்டருக்கு 18கிமீ மைலேஜ் தரக் கூடியதாக உள்ளது. அவர் தினமும் 90கிமீ தொலைவிற்கு அந்த காரை இயக்க வேண்டியதாக உள்ளது என ஓர் உதாரணத்திற்கு வைத்துக் கொள்வோம்.
அப்படியென்றால், அவருக்கு ஒவ்வொரு நாளும் 5 லிட்டர் பெட்ரோல் தேவைப்படும். சென்னையில் தற்போது பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.107 என்கிற அளவில் உள்ளது. ஆக இவருக்கு ஒரு நாளைக்கு பெட்ரோல் செலவாக ரூ.535 ஆகும். அப்படியே எத்தனால் பக்கம் போனால், அங்கு வேறு விதமான கணக்கீடாக உள்ளது.

எத்தனால் அதிகம் கலக்கப்பட்ட எரிபொருளில் காரின் செயல்படுதிறன் குறைவாகவே இருக்கும். அதற்கேற்ப காரின் மைலேஜும் குறைவாகவே கிடைக்கும். ஏனெனில், பெட்ரோல் மூலக்கூறுகளை காட்டிலும் எத்தனால் மூலக்கூறுகள் குறைவான ஆற்றலை கொண்டவை ஆகும். ஆகவே, எத்தனால் எரிபொருளை பயன்படுத்தினால் வழக்கத்தை காட்டிலும் 27% குறைவான மைலேஜையே பெற முடியும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதன்படி பார்த்தால், இந்த தொகுப்பில் நாம் பார்க்கும் நபரது காரின் மைலேஜ் லிட்டருக்கு 14கிமீ என்கிற அளவிற்கு குறையும். அப்படியென்றால், 90கிமீ பயணத்திற்கு 6.42 லிட்டர் எத்தனால் எரிபொருள் தேவைப்படும். இ85 எனப்படும் இந்த வகை எரிபொருளின் விலை தற்சமயம் லிட்டருக்கு ரூ.82.12 என்கிற அளவில் குறைவாக இருந்தாலும், 6.42 லிட்டருக்கு ரூ.527 செலவாகும்.
அதாவது, வழக்கமான பெட்ரோல் செலவை விட வெறும் ரூ.8 மட்டுமே குறைவு. இங்கே நீங்கள் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். அது என்னவென்றால், எத்தனாலின் விலையாக குறிப்பிடப்பட்டு இருக்கும் ரூ.82.12 ஆனது தலைநகர் டெல்லியில் உள்ள விலையாகும். எத்தனால் கலக்கப்பட்ட எரிபொருளை விநியோகிக்கும் முதல் பங்க் இந்தியாவிலேயே முதலாவதாக டெல்லியில் சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது.
அதாவது, தற்போதைக்கு அந்த பங்கை தவிர்த்து நாட்டில் வேறு எங்கும் இ85 எரிபொருள் கிடைப்பதில்லை. விரைவில் சென்னையிலும் இ85 நிச்சயமாக அறிமுகப்படுத்தப்படும் என்றாலும், டெல்லியில் உள்ள விலையை காட்டிலும் நிச்சயம் அதிகமாகவே நிர்ணயிக்கப்படும். அந்த வகையில் பார்த்தால், ரூ.8 விலை வித்தியாசம் எல்லாம் காணாமல் போய், பெட்ரோல் செலவை விட இ85 எரிபொருள் செலவு அதிகமாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த குழப்பத்திற்கு இரு காரணங்கள் உள்ளன. ஒன்று, எத்தனாலில் குறைவான மைலேஜ் கிடைப்பது. மற்றொன்று, அதிக எத்தனால் விலை ஆகும். எத்தனால் கொடுக்கக்கூடிய மைலேஜை அதிகப்படுத்துவது கடினம் என்றாலும், எத்தனாலின் விலையை இன்னும் குறைத்து எத்தனால் கலந்த இ85 எரிபொருளின் பயன்பாட்டை இந்தியாவில் அதிகப்படுத்த நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.


Click it and Unblock the Notifications