ஏசி பெட்டிகளில் வழங்கப்படும் போர்வை ஏன் வெள்ளையா இருக்கு? ரயில்வே சொன்னதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்!
இந்திய ரயில்வே நாளுக்கு நாள் முன்னேற்றம் அடைந்து கொண்டே வருகிறது. ரயில்களின் தாமதம் குறைக்கப்படுகிறது. ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. பயணிகளுக்கு செல்போன் செயலிகள் போன்ற பல்வேறு புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. வந்தே பாரத் (Vande Bharat) போன்ற அதிநவீன ரயில்கள் களத்தில் இறக்கப்படுகின்றன.
இருக்கை உடன் கூடிய வந்தே பாரத் ரயில்களை தொடர்ந்து, தற்போது படுக்கை வசதியுடன் (Sleeper) கூடிய வந்தே பாரத் ரயில்களும் பயன்பாட்டிற்கு வந்து விட்டன. இப்படி இந்திய ரயில்வே ஏராளமான மாற்றங்களை சந்தித்து கொண்டே வந்தாலும் கூட, ஒரு விஷயம் மட்டும், கடந்த பல வருடங்களாக மாறாமலேயே உள்ளது.

அது ஏசி பெட்டிகளில் வழங்கப்படும் வெள்ளை நிற போர்வைகள் ஆகும். ஏராளமான வண்ணங்கள் இருக்கும்போது, இந்திய ரயில்வே ஏன் வெள்ளை நிற போர்வைகளை தேர்வு செய்தது? என நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா? இந்த கேள்வி உங்கள் மனதிற்குள் நீண்ட காலமாக ஓடி கொண்டிருந்தால், உங்களுக்குதான் இந்த செய்தி.
இந்திய ரயில்வே வெள்ளை நிற போர்வைகளை தேர்வு செய்ததற்கு பின்னால் எல்லாம் எந்தவொரு காரணமும் இருக்காது. இது தோராயமாக எடுக்கப்பட்ட முடிவாக இருக்கும் என ஒரு சிலர் நினைக்கலாம். ஆனால் அது தவறு. இந்திய ரயில்வே வெள்ளை நிற போர்வைகளை தேர்வு செய்ததற்கு பின்னால் அருமையான காரணம் ஒன்று உள்ளது.

இன்ஸ்டாகிராம் (Instagram) தளத்தில் சவுரவ் ஷர்மா என்பவர் சமீபத்தில் வைரல் வீடியோ (Viral Video) ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வைரல் வீடியோவில் கூறப்பட்டிருப்பது பின்வருமாறு: ரயில்களின் ஏசி பெட்டிகளில் பயணம் செய்திருந்தால், பயணிகளுக்கு வெள்ளை நிற போர்வை வழங்கப்படுவதை நீங்கள் கவனித்திருக்கலாம்.
இது தோராயமாக எடுக்கப்பட்ட முடிவு என நீங்கள் நினைத்தால், அது தவறு. இதற்கு பின்னால் சரியான திட்டமிடல் ஒன்று உள்ளது. பயணிகளுக்கு வழங்கப்படும் வெள்ளை நிற போர்வைகளை, இந்திய ரயில்வே 121 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில், நீராவி மூலம் சுத்தம் செய்கிறது. இதன் மூலம் போர்வைகளில் உள்ள பாக்டீரியா போன்ற கிருமிகள் கொல்லப்படுகின்றன.
அத்துடன் அழுக்குகளும் நீக்கம் செய்யப்பட்டு, போர்வை சுத்தமாகிறது. 121 டிகிரி செல்சியஸ் போன்ற அதிகப்படியான வெப்பநிலையில் சுத்தம் செய்யப்பட்ட பிறகும் கூட, வெள்ளை நிற போர்வைகள் அப்படியே இருக்கும். இதுவே வேறு ஏதேனும் ஒரு நிறமாக இருந்தால், 121 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் தொடர்ச்சியாக சுத்தம் செய்யும்போது, அவை மங்கி விடும்.
இது நடக்கும்பட்சத்தில், இந்திய ரயில்வே சீரான இடைவெளிகளில் போர்வைகளை மாற்றி கொண்டே இருக்க வேண்டும். இதற்கு அதிகம் செலவு ஆகும். எனவேதான் ரயில்களின் ஏசி பெட்டிகளில் பயணிகளுக்கு வெள்ளை நிற போர்வையை இந்திய ரயில்வே வழங்குகிறது. இவ்வாறு சவுரவ் ஷர்மா கூறியுள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சவுரவ் ஷர்மா கூறியுள்ள தகவல் ஒரு பக்கம் இருந்தாலும், சமீபத்தில் வெளியான அதிகாரப்பூர்வமான மற்றொரு தகவல், ரயில் பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்றுதான் சொல்ல வேண்டும். ரயில்களின் ஏசி பெட்டிகளில் வழங்கப்படும் வெள்ளை நிற போர்வை பார்ப்பதற்கு சுத்தமாக இருப்பது போல் உங்களுக்கு தோன்றலாம்.
ஆனால் போர்வைகளின் நிலைமையை பொறுத்து, அவை மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ மட்டுமே சுத்தம் செய்யப்படுகிறதாம். இது இந்திய ரயில்வே கடந்த 2024ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக தெரிவித்த தகவல் ஆகும். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (RTI - Right To Information) கீழ் கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு, இந்திய ரயில்வே இந்த பதிலை அளித்திருந்தது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக நமக்கு மற்றொரு தகவலும் தெரிய வந்தது. இந்திய ரயில்வேக்கு சொந்தமாக 46 லாண்டரிகள் உள்ளன என்பதுதான் அது. இதுதவிர 25 தனியார் லாண்டரிகள் உடனும், இந்திய ரயில்வே கூட்டணி வைத்துள்ளது. இவற்றின் மூலமாகவே போர்வைகள் மற்றும் தலையணைகள் சுத்தம் செய்யப்படுகின்றன.
போர்வைகள் மற்றும் தலையணைகளை இந்திய ரயில்வே, பயணிகளுக்கு மிகவும் சுத்தமான நிலையில் வழங்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும். அதேபோல் கழிவறை உள்பட ரயில் முழுவதும் சுத்தத்தையும் பராமரிக்க வேண்டும். இதற்கு இந்திய ரயில்வே நிர்வாகத்திற்கு பயணிகளும் ஒத்துழைப்பு வழங்குவது அவசியம் என்பதுதான் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.
முன்னதாக இந்திய ரயில்வே சமீபத்தில் சங்கனேரி பிரிண்ட் உடன் கூடிய போர்வைகளை அறிமுகம் செய்தது. தற்போது இந்த போர்வைகள் சோதனை கட்டத்தில் உள்ளன. இதற்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும்பட்சத்தில், சங்கனேரி பிரிண்ட் உடன் கூடிய போர்வைகள் முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








