நேரடியா களத்தில் இறங்கிய மத்திய அரசு... மக்கள் வரி பணத்தை அதிகரிக்க தரமான ஐடியா!! வொர்க்-அவுட் ஆகுமா?
இந்த உலகில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் புரளும் வணிகங்களுள் ஒன்று ஆட்டோமொபைல் ஆகும். இன்றைய மாடர்ன் காலக்கட்டத்தில் 1 லட்ச ரூபாய்க்கு குறைவாக பைக் அல்லது ஸ்கூட்டரை வாங்குவது சாத்தியமில்லாத ஒன்றாக மாறிவிட்டது. கார்களை பற்றி சொல்லவே வேண்டாம். நல்ல தரமான காரை வாங்க வேண்டுமென்றால், குறைந்தது 10 லட்ச ரூபாய் ஆவது செலவிட வேண்டியாத உள்ளது. இவ்வாறு ஆட்டோமொபைல் துறை தொடர்ந்து வளர்ந்துக் கொண்டே செல்வது அரசாங்கத்திற்கு வருவாயை அதிகப்படுத்தும். இதன் காரணமாகவே, அவ்வப்போது கார், பைக் அறிமுக நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும், பெரிய அளவிலான எக்ஸ்போ நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
இந்த வகையில், இந்திய ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சி ஒவ்வொரு 2 வருடத்திற்கும் ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கண்காட்சியில் பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்களின் புதிய தயாரிப்பு வாகனங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் காட்சிப்படுத்தப்படும். அவற்றை பொதுமக்கள் நேரில் பார்வையிடலாம். ஆட்டோமொபைல் வாகனங்களை விளம்பரத்தி, அவற்றின் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியாக ஆட்டோ எக்ஸ்போ நடத்தப்பட்டு வருகிறது.

கடைசியாக இது கடந்த 2023ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து வருகிற 2025ஆம் ஆண்டில் ஆட்டோ எக்ஸ்போ நடத்தப்பட உள்ள நிலையில், மத்திய அரசாங்கம் பாரத் மொபைலிட்டி எக்ஸ்போ என்கிற பெயரில் புதிய மெகா ஆட்டோமொபைல் கண்காட்சியை இந்த 2024ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் நடத்தியது. முதல்முறையாக நடத்தப்பட்டாலும், 2024 பாரத் மொபைலிட்டி எக்ஸ்போ கண்காட்சியில் கணிசமான எண்ணிக்கையில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பங்கேற்றன.
ஏற்கனவே, 2 வருடத்திற்கு ஒருமுறை ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சி நடத்தப்பட்டு வரும் சூழலில், பாரத் மொபைலிட்டி எக்ஸ்போவை மத்திய அரசு ஆரம்பித்து வைத்திருப்பதற்கு முக்கிய காரணம், ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் கலந்துக் கொள்ளும் ஆட்டோமொபைல் நிறுவனங்களின் எண்ணிக்கை குறைந்துக் கொண்டே வந்ததினால் ஆகும். அதாவது, ஆட்டோ எக்ஸ்போவில் பங்கேற்று தங்களது புதிய வாகனங்களை காட்சிப்படுத்தும் ஆர்வம் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மத்தியில் குறைய துவங்கியது.
ஆட்டோ எக்ஸ்போவில் கலந்துக் கொள்ள வேண்டுமெனில், அதற்கு குறிப்பிட்ட தொகையை கட்டணமாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் செலுத்த வேண்டும். அந்த தொகையை செலவழிப்பதற்கு பதிலாக தங்களது புதிய வாகனங்களை வேறு விதமாக விளம்பரப்படுத்திக் கொள்ளலாம் என ஆட்டோமொபைல் நிறுவனங்கள் யோசிக்க துவங்கியதை அடுத்து மத்திய அரசு நேரடியாக களத்தில் இறங்கி, பாரத் மொபைலிட்டி எக்ஸ்போவை ஆரம்பித்து வைத்துள்ளது.

இந்த புதிய மெகா ஆட்டோமொபைல் கண்காட்சி ஆனது வருடந்தோறும் நடத்தப்பட உள்ளது. அந்த வகையில், வருகிற 2025 ஜனவரி மாதத்திலும் நடத்தப்பட உள்ளது. மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் 2025 ஜனவரி 17ஆம் தேதியில் இருந்து 22ஆம் தேதி வரையில் பாரத் மொபைலிட்டி எக்ஸ்போவை இந்திய ஆட்டோமொபைல் சங்க கூட்டமைப்பு (SIAM) நடத்தவுள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இத்தகைய மெகா ஆட்டோமொபைல் கண்காட்சி கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பிறகு தலைநகர் டெல்லியில் நடத்தப்பட உள்ளது.
இந்த 2024இல் நடத்தப்பட்டதை போன்று 2025 பாரத் மொபைலிட்டி எக்ஸ்போ கண்காட்சியையும் டெல்லியின் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு வரையில் ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சி டெல்லியில் நடத்தப்பட்டு வந்தது. 2014 எடிசனுக்கு பிறகு உத்தர பிரதேச மாநிலத்தின் கிரேட்டர் நொய்டாவுக்கு ஆட்டோ எக்ஸ்போ மாற்றப்பட்டது.
டெல்யில் நடத்தப்படும் அதேநேரம், கிரேட்டர் நொய்டாவிலும் 2025 பாரத் மொபைலிட்டி எக்ஸ்போ நடத்தப்படும். ஏனெனில், பாரத் மண்டபத்தில் மட்டுமின்றி டெல்லியின் துவாரகாவில் உள்ள யாஷோபூமி மற்றும் கிரேட்டர் நொய்டாவின் இந்திய எக்ஸ்போ செண்டர் & மார்ட் என 3 வெவ்வேறு விதமான இடங்களில் 2025 பாரத் மொபைலிட்டி எக்ஸ்போ கண்காட்சியை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதில் இந்திய எக்ஸ்போ செண்டர் & மார்ட் தான் வழக்கமாக இந்திய ஆட்டோ எக்ஸ்போ நடைபெறும் பகுதி ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், எந்தவொரு நாட்டின் அரசாங்கத்திற்கும் ஆட்டோமொபைல் துறை ஆனது அதிகப்படியான வருவாயை பெற்றுத்தரும் துறை ஆகும். ஆகையால், அது சிறப்பாக, வளமாக இருந்தால்தான் வரி உள்ளிட்ட அரசாங்கத்திற்கான வருவாயும் குறைவில்லாமல் கிடைக்கும். அதற்கு வழிவகுக்கும் பாரத் மொபைலிட்டி எக்ஸ்போ கண்காட்சியை நாட்டின் தலைநகருக்கே மீண்டும் கொண்டுவந்திருப்பது நமது மத்திய அரசாங்கத்தின் விரைந்து செயல்படும் நுட்பத்தை காட்டுகிறது.


Click it and Unblock the Notifications








