ஹோண்டா கார் கம்பெனி இந்தியாவில் இருந்து மொத்தமா மூட்டை கட்டுதா? பணத்தை செலவு பண்ண இப்படி யோசிக்குதே!!
2025ஆம் ஆண்டு துவங்கிய உடனேயே ஆட்டோமொபைல் தொடர்பான நிகழ்ச்சிகளும், கண்காட்சிகளும் வரிசையாக அடுத்தடுத்து நடைபெறவுள்ளன. ஒவ்வொன்றும் தேசிய அளவிலான கண்காட்சிகள் என்பதால் டெல்லியிலும், அதனை சுற்றியும் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட உள்ளன. முதலாவதாக, ஜனவரி 17ஆம் தேதியில் பாரத் மொபைலிட்டி க்ளோபல் எக்ஸ்போ 2025 (Bharat Mobility Global Expo 2025) கண்காட்சி துவங்கப்பட உள்ளது. புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஜனவரி 22ஆம் தேதி வரையில் இந்த ஆட்டோமொபைல் கண்காட்சி நடைபெறவுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கண்காட்சியின் முதல் 2 நாட்களுக்கு (ஜன.17 & 18) ஊடகவியலாளர்களும், டீலர்ஷிப் நிர்வாகிகளும் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். அதற்கடுத்த 4 நாட்களுக்கு பொது மக்கள் நேரில் கண்காட்சியை பார்வையிடலாம். இதன் ஒருபகுதியாக, ஆட்டோ எக்ஸ்போ 2025 (Auto Expo 2025) மோட்டார் கண்காட்சி அதே ஜனவரி 17இல் துவங்கி 22 வரையில் 6 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

புது டெல்லிக்கு வெளியே துவார்கா (Dwarka) பகுதியில் உள்ள யாஷோபூமி (Yashobhoomi) மையத்தில் ஆட்டோ எக்ஸ்போ 2025 கண்காட்சி நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு 2 வருடங்களுக்கு ஒருமுறை ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சி ஆனது டெல்லிக்கு அருகே உள்ள உத்தர பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா (Greater Noida)-இல் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், இந்த முறை புது டெல்லிக்கு இன்னும் நெருக்கமாக துவார்காவில் நடத்தப்பட உள்ளது.
இதற்கு காரணம், கிரேட்டர் நொய்டாவில் வழக்கமாக ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சி நடத்தப்படும் இந்தியா எக்ஸ்போ செண்டர் & மார்ட் (India Expo Centre & Mart)-இல் பாரத் கட்டமைப்பு உபகரணங்களின் கண்காட்சி (Bharat Construction Show)-வும், நகர்புற போக்குவரத்துக்கான கண்காட்சி (Urban Mobility Show)-வும் ஜனவரி 19இல் இருந்து 22ஆம் தேதி வரையில் 4 நாட்களுக்கு நடத்தப்பட உள்ளன. இந்த கண்காட்சிகள் அனைத்தும் சேர்ந்ததே, பாரத் மொபைலிட்டி க்ளோபல் எக்ஸ்போ ஆகும்.

இதனால், ஆட்டோ எக்ஸ்போவை காட்டிலும் இந்த முறை ஒட்டுமொத்த பாரத் மொபைலிட்டி க்ளோபல் எக்ஸ்போ கண்காட்சிக்கு கூடுதல் கவனம் அளிக்கப்படுகிறது. இதனால், ஆட்டோ எக்ஸ்போ 2025 மோட்டார் கண்காட்சியில் பல கார் & பைக் நிறுவனங்கள் கலந்துக் கொள்ளவுள்ளன. அவை எந்தெந்த நிறுவனங்கள் என்பதை பார்ப்பதற்கு முன்னர், பாரத் மொபைலிட்டி க்ளோபல் எக்ஸ்போ 2025 கண்காட்சியில் கலந்துக் கொள்ளாத நிறுவனங்களை முதலில் பார்த்துவிடுவோம்.
உலகளவில் பிரபலமான ஜப்பானிய கார் நிறுவனமான ஹோண்டா கார்ஸ் (Honda Cars) பாரத் மொபைலிட்டி க்ளோபல் எக்ஸ்போ 2025 கண்காட்சியில் கலந்துக் கொள்ள போவதில்லை. அதாவது, ஹோண்டாவில் இருந்து எந்த காரும் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படாது. அதேபோல், ஃபோக்ஸ்வேகன் (Volkswagen), சிட்ரோன் (Citroen), நிஸான் (Nissan) மற்றும் ஜீப் (Jeep) நிறுவனங்களும் இந்த முக்கியமான கண்காட்சியை தவிர்க்க உள்ளன.

லக்சரி கார் பிராண்ட்களை பொறுத்தவரையில், ஆடி (Audi) இந்த கண்காட்சியில் கலந்துக்கொள்ள போவதில்லை. இவை தவிர்த்து, மாருதி சுஸுகி, ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா, கியா, எம்ஜி மோட்டார், டொயோட்டா, ஸ்கோடா, இசுஸு மற்றும் சமீபத்தில் இந்தியாவில் நுழைந்த சீன நிறுவனமான பிஒய்டி (BYD) உள்பட பல கார் நிறுவனங்களும், மெர்சிடிஸ், பிஎம்டபிள்யூ (BMW) போன்ற லக்சரி கார் நிறுவனங்களும் கலந்துக் கொள்ள உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா, ஃபோக்ஸ்வேகன் போன்ற சில பிரபலமான கார் நிறுவனங்கள் பாரத் மொபைலிட்டி க்ளோபல் எக்ஸ்போ 2025 கண்காட்சியை தவிர்ப்பதற்கு முக்கிய காரணம், அவற்றின் கார்கள் விற்பனை பெரிய அளவில் இல்லை என்பதினால் ஆகும். கண்காட்சியில் பங்கேற்பதற்கான அதிக கட்டணத்தை தவிர்க்க ஒரு சில நிறுவனங்கள் அதே தேதிகளில் தங்களது புதிய வாகனங்களை தனியாக அறிமுகம் செய்வதையும் இதற்கு முன்னர் பார்த்துள்ளோம்.


Click it and Unblock the Notifications









