இதுக்காக தான் எல்லாரும் வெயிட்டிங்... உலக தரத்தில் இந்தியாவில் நடக்கவுள்ள நிகழ்ச்சி!!
இந்திய பைக் வாரம் (India Bike Week), பைக் ஆர்வலர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் மோட்டார்சைக்கிள் கண்காட்சி நிகழ்ச்சி. ஒவ்வொரு வருடமும் கடைசி டிசம்பர் மாத துவக்கத்தில் கோவாவில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த வருடமும் வருகிற டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. இதற்கிடையில், நிகழ்ச்சிக்கான டிக்கெட் புக்கிங் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடைபெறும் முக்கியமான மோட்டார்சைக்கிள் நிகழ்ச்சியாக விளங்கும் இதனை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
அவ்வப்போது புது, புது மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்வது மட்டுமில்லாமல், மக்கள் மத்தியில் பைக்குகள் மீதான ஆர்வத்தை தொடர்ந்து தக்கவைக்க இந்திய பைக் வாரம் போன்றதான நிகழ்ச்சிகளை நடத்துவது அவசியமாகிறது. இந்திய பைக் வாரம் நிகழ்ச்சியின் மூலமாக நாடு முழுவதும் உள்ள பைக் பிரியர்கள் தங்களது பைக்குகளுடன் கோவாவில் ஒன்று கூடுவதற்கு வாய்ப்பு கிடைக்கிறது.

நிகழ்ச்சியில் கலந்துக் கொள்பவர்கள் தங்களது பைக்குகளில் சாகசங்களில் ஈடுப்படலாம் மற்றும் பைக்கை அதிவேகமாக ஓட்டி பார்க்கலாம். இந்த பைக் சாகசங்களில் கைத்தேர்ந்த பைக் ரைடர்கள் ஈடுப்படுவதால், அவர்களது பைக் சாகசங்களை பார்க்கவே பெரிய அளவில் பார்வையாளர்கள் கூட்டம் கூடுவது வழக்கம். இதனை பயன்படுத்திக் கொள்ள மோட்டார்சைக்கிள் நிறுவனங்கள் தங்களது புதிய பைக்குகளை காட்சிக்கு நிறுத்துகின்றன.
இது, புதிய பைக்குகளுக்கு கூடுதல் விளம்பரமாக அமைகிறது. ஏற்கனவே கூறியதுபோல், இந்திய பைக் வாரம் நிகழ்ச்சி கோவாவில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத துவக்கத்தில் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த வருடமும் டிசம்பர் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் கோவாவின் வாகடார் பகுதியில் இந்திய பைக் வார நிகழ்ச்சியின் 11வது எடிசன் நடத்தப்பட உள்ளது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் இந்த 2024ஆம் ஆண்டிற்கான இந்திய பைக் வார நிகழ்ச்சிக்கு 'தி நெக்ஸ்ட் சாப்டர்' என பெயரிட்டுள்ளனர்.

நிகழ்ச்சிக்கான டிக்கெட் புக்கிங் கடந்த அக்டோபர் 13ஆம் தேதியே துவங்கிவிட்டது. முதல் 2000 டிக்கெட்களுக்கு 30% வரையிலான சலுகைகளை பெற முடியும். அதாவது, உண்மையான டிக்கெட் விலையான ரூ.2,499க்கு பதிலாக முதல் 2,000 டிக்கெட்களை வாங்குவோர் ரூ.500 குறைவாக ரூ.1,999 செலுத்தினாலே போதும். மேலும், இந்த ரூ.1,999 தொகையிலும் ரூ.250 மதிப்பிலான உணவு & குளிர்பான கூப்பன் அடங்குகிறது.
ஆனால், இது முதல் 2,000 பேருக்கு மட்டுமே என்பதால், 2 ஆயிரம் பேர் டிக்கெட்டை பெற்றுவிட்டனரா என்பதை ஒருமுறை உறுதி செய்ய இந்திய பைக் வார நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தை அணுகவும். மேலும், அதே இணையத்தள பக்கத்தில் டிக்கெட் புக் செய்ய முடியும். மேலே குறிப்பிடப்பட்ட டிக்கெட் விலைகள் ஒருநாளைக்கு ஆனவை ஆகும். நிகழ்ச்சியின் இரு நாட்களிலும் கலந்துக் கொள்ள விரும்புபவர்கள் வெறும் ரூ.2,999 செலுத்தி வார இறுதி பாஸை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த வார இறுதி பாஸை பெறுபவர்களுக்கு ரூ.500 மதிப்பிலான உணவு & குளிர்பான கூப்பன் மற்றும் பிரத்யேகமான இந்திய பைக் வார கிட் கிடைக்கும். மேலும், ரூ.2,999இல் வேல்யூ-ஃபார்-மனி க்ளப் பேக்கேஜ்களை வழங்க இந்திய பைக் வார நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த பேக்கேஜ்கள் மூலமாக, நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் ஒரு சில இடங்களில் சிறப்பு அனுமதி கிடைக்கும்.
2024 இந்திய பைக் வார நிகழ்ச்சியில் முக்கிய அம்சமாக ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் சார்பாக பைக் பந்தயம் நடத்தப்பட உள்ளது. இதற்கான முன்பதிவுகள் நவம்பர் 15ஆம் தேதி துவங்கப்பட உள்ளன. 81 போட்டியாளர்கள் மட்டுமே இந்த பந்தயத்தில் போட்டியிட அனுமதிக்கப்படுவர். இந்த பைக் பந்தயத்தின் போது, கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 பைக்குகள் காட்சிக்கு நிறுத்தப்பட உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மோட்டார்சைக்கிள்களில் ஆர்வம் கொண்டவர்களுக்கு இந்திய பைக் வார நிகழ்ச்சி ஆனது சிறந்த பொழுதுப்போக்காக இருக்கும். அத்துடன், பவர்ஃபுல்லான பைக்கை வைத்துக் கொண்டு அதன் முழு திறனை எவ்வாறு பயன்படுத்துவது என தெரியாமல் இருப்பவர்கள் இந்திய பைக் வார நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளலாம். ஆக, டிசம்பர் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் தரமான பொழுதுப்போக்கு காத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications









