உலக அரங்கில் இந்தியாவை பெருமைப்படுத்த போகும் உ.பி அரசு! ஃபார்முலா 1-ஐ விட மோட்டோஜிபி-க்கு பெரிய எதிர்பார்ப்பு!
கடந்த பல வருடங்களாக உறுதியாக கூற முடியாமல், பல தவறவிடப்பட்ட பந்தயத் தேதிகளுக்குப் பிறகு, இந்தியாவின் கிரேட்டர் நொய்டாவில் உள்ள புத்த சர்வதேச சர்க்யூட்டில் (BIC) மோட்டோஜிபி (MotoGP) மற்றும் ஃபார்முலா 1 (Formula 1) ஆகிய இரண்டையும் மீண்டும் கொண்டு வருவதற்கான புதிய முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. புதிய பங்குதாரர்கள் நுழைந்து, அரசு ஆதரவும் வலுப்பெற்று வருவதால், கிரேட்டர் நொய்டாவில் பந்தய வாகனங்களின் என்ஜின் கர்ஜனையை மீண்டும் கேட்கும் வாய்ப்புகள் பிரகாசமாகத் தெரிகின்றன.
புத்த சர்வதேச சர்க்யூட்டில் மோட்டோஜிபியை மீண்டும் நடத்துவதற்கான பணிகள் வேகம் பெற்றுள்ளது. உத்தரப் பிரதேச மாநில அரசுக்கும், முன்னாள் மோட்டோஜிபி பந்தய வீரர் காரல் ஆப்ரகாம் (Karel Abraham) நிறுவிய மோட்டார்ஸ்போர்ட் ஆலோசனை நிறுவனமான AVW குளோபல் நிறுவனத்திற்கும் இடையே கையெழுத்திடப்பட்ட ஒரு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்தியாவில் மோட்டோஜிபியை நடத்துவதற்கான முதல் முயற்சியைக் குறிக்கிறது.

இந்தத் திட்டத்தின் மூலம், சில வார இறுதி நாட்களின் மோட்டோஜிபி பந்தயங்கள் உடன், புத்த சர்வதேச சர்க்யூட்டைச் சுற்றியுள்ள அடிமட்ட பந்தய வீரர்களுக்கான பயிற்சி உட்பட ஒரு நிரந்தர மோட்டார்ஸ்போர்ட் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க உ.பி அரசு விரும்புகிறது. மேலும், லிபர்ட்டி மீடியா (Liberty Media) மோட்டோஜிபியின் வணிக உரிமைகளைப் பெற்றிருப்பது இந்த சர்வதேச பந்தய தொடர் இந்தியாவில் மீண்டும் நடைபெறுவதற்கான மற்றொரு ஊக்கமளிக்கும் காரணியாகும்.
உலகின் முக்கிய மோட்டார்சைக்கிள் சந்தை நாடுகளில் மோட்டோஜிபி தொடரை விரிவாக்கம் செய்ய இலக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில், உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகனச் சந்தையான இந்தியா, அந்த யுக்தியில் கச்சிதமாகப் பொருந்துகிறது. மோட்டோஜிபி உடன் சேர்த்து, ஆசிய சாலைப் பந்தய சாம்பியன்ஷிப்பும் (ARRC) திட்டமிடப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலேயே இந்தியா ஒரு ARRC சுற்றுப் போட்டியை நடத்தக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. டி.வி.எஸ் (TVS) மற்றும் ஹோண்டா (Honda) போன்ற முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்கள் மூலம் இந்தியாவிற்கு ஏற்கனவே ARRC உடன் வலுவான தொடர்புகள் இருப்பதால் இந்த பந்தய தொடர் முக்கியத்துவம் பெறுகிறது.
மேலும், ARRC ஆனது டிவிஎஸ் ஆசியா ஒன் மேக் சாம்பியன்ஷிப் தொடரையும் உள்ளடக்கியது ஆகும். இந்திய மக்களின் கவனம் மோட்டோஜிபி-க்கு முழுமையாக திரும்புவதற்கு ARRC உதவும். நான்கு சக்கர வாகன பந்தயங்களைப் பொறுத்தவரை, அதானி குழுமம் (Adani Group) ஃபார்முலா 1-ஐ மீண்டும் இந்தியாவிற்குக் கொண்டு வரும் தனது லட்சியத்தை வெளிப்படையாகக் கூறியுள்ளது.
புத்த சர்வதேச சர்க்யூட்டின் தற்போதைய உரிமையாளரான ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸை (Jaiprakash Associates) கையகப்படுத்தும் முயற்சியில் அதானி குழுமம் முனைப்பு காட்டுகிறது. ஏனெனில், இந்தியன் கிராண்ட் பிரிக்ஸை மீட்டெடுப்பதில் இந்த பந்தய களத்தை பெறுவது முக்கிய சொத்தாக அதானி குழுமம் கருதுகிறது. புத்த சர்வதேச சர்க்யூட் 2011 முதல் 2013 வரை ஃபார்முலா 1 பந்தயங்களை நடத்தியதுடன், பங்கேற்ற அணிகள் மற்றும் ஓட்டுநர்களிடமிருந்து பாராட்டுகளையும் பெற்றது.
இருப்பினும், மாநில அரசுடனான வரி பிரச்சனைகள் காரணமாக மோட்டார் பந்தயங்களை நடத்துவதில் இருந்து இந்த சர்க்யூட் தவிர்க்கப்பட்டது. அத்துடன் எல்லா வருடமும் எஃப்1 பந்தய அட்டவணை ஏற்கனவே உலகெங்கிலும் உள்ள பிரபலமான பந்தயத் தளங்களால் நிரம்பி, இந்தியாவிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஃபார்முலா 1-இன் கதை இப்படியென்றால்... மோட்டோஜிபி-ஐ இந்தியா முதல்முறையாக 2023 செப்டம்பரில் தான் நடத்தியது. இது இந்திய நாட்டின் மோட்டார்ஸ்போர்ட் வரலாற்றில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாக அமைந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலக அரங்கில் இந்தியாவை முன்னிலைப்படுத்த நாட்டின் மோட்டார்ஸ்போர்ட் துறையை மேம்படுத்துவதும் அவசியமாகும். அதற்கு, உலக தரத்தில் உள்ள இந்தியாவின் புத்த சர்வதேச சர்க்யூட்டை முறையாக பராமரித்து பயன்படுத்துவது முக்கியமாகும். இதனை உத்தர பிரதேச மாநில அரசு ஊக்கப்படுத்துவது நாட்டின் வளர்ச்சிக்கும், இளம் பைக் ரேஸர்கள் உருவாக்கத்திற்கும் வழிவகுக்கும்.


Click it and Unblock the Notifications








