சாங்யாங் எஸ்யூவி மாடல்களை பார்வைக்கு வைத்த மஹிந்திரா
சாங்யாங் மோட்டார்ஸ் நிறுவனத்தின் 4 எஸ்யூவி மாடல்களை டெல்லி ஆட்டோ கண்காட்சியில் மஹிந்திரா பார்வைக்கு வைத்திருந்தது. இதில், ரெக்ஸ்டன் எஸ்யூவி அடுத்த ஆறு மாதங்களுக்குள் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

எஸ்யூவி தயாரிப்பில் தென்கொரியாவை சேர்ந்த சாங்யாங் நிறுவனம் சிறந்து விளங்குகிறது. தற்போது மஹிந்திராவின் துணை நிறுவனமாக சாங்யாங் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சாங்யாங் வர்த்தகத்தை விரிவுப்படுத்தும் வகையிலும், தனது வாடிக்கையாளர்களுக்கு பிரிமியம் எஸ்யூவியை வழங்கும் வகையிலும் சாங்யாங் எஸ்யூவி மாடல்களை மஹிந்திரா இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.
இதற்காக, சாங்யாங் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான ரெக்ஸ்டன், கொரண்டோ சி உள்பட 4 எஸ்யூவி மாடல்களை டெல்லி ஆட்டோ கண்காட்சியில் மஹிந்திரா காட்சிக்கு வைத்திருந்தது.
இதில், ரெக்ஸ்டன் எஸ்யூவி அடுத்த ஆறு மாதங்களில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் பிரிவு தலைவர் பவன் கோயங்கோ தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
"ரெக்ஸ்டன் எஸ்யூவியை தொடர்ந்து கொரண்டோ எஸ்யூவியை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய உள்ளோம். பிரிமியம் எஸ்யூவியை விரும்பும் எங்களது வாடிக்கையாளர்களை சாங்யாங் எஸ்யூவி மாடல்கள் கண்டிப்பாக கவரும்.
சாங்யாங் எஸ்யூவிக்களின் உற்பத்திக்காக புனே அருகே சகனில் உள்ள மஹிந்திரா ஆலையில் தனி உற்பத்தி பிரிவும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த உற்பத்தி பிரிவில் இருந்து மாதத்திற்கு 500 முதல் 600 எஸ்யூவிக்களை உற்பத்தி செய்ய முடியும்.
மேலும், சாங்யாங் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து புதிய கார் பிளாட்பார்மை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக, ரூ.800 கோடியை முதலீடு செய்ய இருக்கிறோம். இதில், இரண்டு புதிய கார் மாடல்கள் வடிவமைக்கப்படும்.
தவிர, நேவிஸ்டார் ஒத்துழைப்புடன் பஸ் தயாரிப்பிலும் இறங்க திட்டமிட்டுள்ளோம்," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








