டெல்லி ஆட்டோ எக்ஸ்போவுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக சியாம் அமைப்பு தெரிவித்துள்ளது.
வரும் பிப்ரவரி மாதம் 7ந் தேதி துவங்க இருக்கும் 12-வது சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உலக அளவில் அதிக பார்வையாளர்கள் வருகை தரும் ஆட்டோமொபைல் கண்காட்சிகளில் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவும் ஒன்று.
இதுவரை பிரகதி மைதானத்தில் நடைபெற்று வந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போ இந்த முறை கிரேட்டர் நொய்டாவில் நடைபெறுகிறது.
ஒரு வாரம் நடைபெற உள்ள இந்த கண்காட்சிக்கு பல லட்சம் பேர் வருகை தருவர். எனவே, அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
58 ஏக்கர் பரப்பளவிலான மைதானத்தில் இந்த முறை கண்காட்சி நடக்கிறது. மொத்தம் 14 கண்காட்சி வளாகங்களில் அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த அரங்குகள் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. மேலும், கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்களை ஸ்கேனர் மற்றும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்து அனுமதிக்கப்பட உள்ளனர்.
இதுகுறித்து சியாம் அமைப்பின் தலைவரும், டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவருமான விக்ரம் கிர்லோஸ்கர் கூறியதாவது," புதிய மைதானத்தில் நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ கண்காட்சி இதுவரை இல்லாத அளவு மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது.
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டு வருகிறது. கண்காட்சி நடைபெறும் இடத்திற்கு பார்வையாளர்கள் எளிதாக வர இயலும். தவிர, நொய்டா சிட்டி சென்டர், அக்ஷர்தம் மற்றும் ஜசலோ மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து கண்காட்சி நடைபெறும் இடத்திற்கு இலவச பஸ்களை இயக்கவும் முடிவு செய்துள்ளோம்," என்றார்.
பிப்ரவரியில் நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 50 கார் மற்றும் இருசக்கர வாகன தயாரிப்பாளர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இதுதவிர, விண்டேஜ் கார், பைக்குகளும், கான்செப்ட் மாடல்களும் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.


Click it and Unblock the Notifications








