பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: சிறப்பு கண்ணோட்டம்

டுகாட்டியை வாங்கிய ஆடி நிறுவனம் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிப்பதாக அறிவித்த நிலையில், பிஎம்டபிள்யூவும் இந்த புதிய ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி ஆட்டோமொபைல் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த புதிய ஸ்கூட்டரின் சிறப்பம்சமே 600சிசி பெட்ரோல் மோட்டார்சைக்கிள்களுக்கு இணையான பெர்ஃபார்மென்சை வழங்கும் என்பதுதான்.
முழுக்க முழுக்க எலக்ட்ரிக் மோட்டாரில் இயங்கும் இந்த ஸ்கூட்டர் மணிக்கு 120 கிமீ வேகம் வரையிலும் பறக்கும் திறன் பெற்றிருக்கும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 100கிமீ தூரத்துக்கும் அதிகமாக பயணிக்க முடியும். ஒரு முறை முழு சார்ஜ் செய்வதற்கு 3 மணி நேரம் எடுத்துக் கொள்ளும்.
மேலும், பிரேக் பிடிக்கும்போது விரயமாகும் ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றி பேட்டரியில் சேமிக்கும் தொழில்நுட்பத்தை இந்த ஸ்கூட்டர் கொண்டிருக்கும். பிஎம்டபிள்யூவின் சி எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் மூன்றாம் தலைமுறையாக இந்த புதிய ஸ்கூட்டர் வருகிறது.
11 கேவி சக்தி கொண்ட எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டிருப்பதால் அதிக மின் சிக்கனத்தை வழங்கும். இதேபோன்று, வாகனத்தின் வேகத்தை தெரிவிப்பதற்கு டிஜிட்டல் மீட்டர் உள்ளது. இதன் பின்புற வீல் ஒற்றை பட்டையில் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
புதிதாக வரும் எலக்ட்ரிக் கார்களில் இருக்கும் ஜே 1772 சார்ஜிங் போர்ட்டை இந்த பிஎம்டபிள்யூ அர்பன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டிருக்கிறது. தற்போது சாலை சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி நிலையை எட்டுவது குறித்த தகவல்களை பிஎம்டபிள்யூ வெளியிடவில்லை. ஆனால், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் உற்பத்தி நிலையை எட்ட இருப்பது உறுதியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications








