ஆக்டிவா, ஜூபிடர் எல்லாரும் கொஞ்சம் ஓரமா ஒதுங்குங்க! குடும்பங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் ரிஸ்தா நாளை அறிமுகம்!
ஏத்தர் எனெர்ஜி (Ather Energy) நிறுவனம் நாளைய தினம் இந்தியாவில் புதுமுக ஸ்கூட்டர் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. ரிஸ்தா (Rizta) எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையே அது அறிமுகம் செய்ய இருக்கின்றது. இது நிறுவனத்தின் குடும்ப பயன்பாட்டிற்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் என்பது குறிப்பிடத்தகுந்தது.
எனவே இதன் வருகையை இந்தியாவைச் சேர்ந்த குடும்பஸ்தர்கள் பலரும் எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆக்டிவாவைக் காட்டிலும் பெரிய இருக்கை, இரண்டு அறை ஸ்டோரேஜ் (இரண்டுமே இருக்கைக்கு அடியில்தான் இருக்கும்), ரைடர் மற்றும் பயணி என இருவரும் சுலபமாக ஏறி-இறங்குவதற்கு ஏற்ற உருவ அமைப்பு ஆகியவையே ஏத்தர் ரிஸ்தாவின் சிறப்புகள் ஆகும்.

Image Source இதுபோன்று இன்னும் சிறப்புகளை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தாங்கி இருக்கும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், செல்போன் இணைப்பு, ஸ்கூட்டர் இருக்கும் இடத்தைக் கண்டறியும் வசதி, திருப்பத்திற்கு திருப்பம் வழித் தடம் பற்றிய தகவலை வழங்கும் வசதி, பெரிய டிஜிட்டல் அம்சங்கள் நிறைந்த திரை உள்ளிட்டவை ரிஸ்தாவில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேபோல், ரேஞ்ஜ் விஷயத்திலும் ரிஸ்தா மிக சிறப்பனாதாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. ஓர் முழு சார்ஜில் 150 கிமீ முதல் 200 கிமீ வரையில் இது ரேஞ்ஜ் தரும் என எதிர்பார்க்கலாம். இதுபோன்று அதிகபட்ச ரேஞ்ஜை ரிஸ்தா வழங்கும் எனில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இது மிகப் பெரிய வில்லனாக மாறக் கூடும்.
இதற்கு மட்டுமல்ல இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் ஸ்கூட்டர் மாடலான ஆக்டிவாவிற்கும் இதன் வருகை மிகப் பெரிய தலை வலியை ஏற்படுத்த இருக்கின்றது. இதற்கு சான்றாகவே ஆக்டிவாவைவிட மிகப் பெரிய இருக்கை ரிஸ்தாவிற்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. இரண்டு இருக்கைகளையும் அருகருகே வைத்து பார்த்தால் ஹோண்டா ஆக்டிவாவின் இருக்கை சின்ன தம்பியைப் போல் தெரியும்.
அந்த அளவிற்கு பெரியதே ரிஸ்தாவின் இருக்கை அளவு உள்ளது. இந்த இருக்கையில் மூன்று பேர்கூட தாராளமாக அமர்ந்து பயணிக்கலாம். ஆனால், இந்தியாவில் இரண்டு பேர் மட்டுமே அமர்ந்து பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும் கால் வைக்கும் இடம் மிகப் பெரியதாக இருப்பதால் அங்கு கால்களை மட்டுமல்ல வீட்டுக்கு தேவையான பொருட்களையும் வைத்துக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதுதவிர இருக்கைக்கு அடியிலும் பொருட்களை வைத்துக் கொள்ள முடியும். இதற்கு என இரண்டு அறைகள் அங்கு வழங்கப்பட்டு இருக்கின்றன. ஒன்று சற்று சிறியதாக இருக்கும். அங்கு செல்போன், பர்ஸ் மற்றும் முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
அதேவேளையில் மற்றொன்று சற்று பெரியதாக இருக்கும். அதில் ஹெல்மெட் அல்லது வீட்டுக்கு தேவையான பொருட்களை வைத்துக் கொள்ள முடியும். இதுபோன்று பல அம்சங்களைத் தாங்கியதாகவே ரிஸ்தா இந்தியாவிற்காக தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. இதன் அதிகாரப்பூர்வ அறிமுகமே நாளைய தினம் அரங்கேற இருக்கின்றது.
ரிஸ்தாவின் லைட் செட்-அப், டயர், வீல், எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரி பேக் ஆகியவற்றில் அதன் மூதாதையர்களான 450எக்ஸ் உடன் ஒத்துப் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாவில்லை. நாளைய தினமே ரிஸ்தா பற்றிய பல்வேறு முக்கியமான தகவல்களை ஏத்தர் எனெர்ஜி பகிர்ந்துக் கொள்ள இருக்கின்றது. குறிப்பாக, விலை, புக்கிங் மற்றும் டெலிவரி போன்ற அனைத்து தகவல்களையும் நாளைய தினம் எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் ஏத்தர் ரிஸ்தா முன்னணி இடத்தில் இருக்கின்றது. இதேபோல் இது விற்பனையிலும் முன்னணி இடத்தையே வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், அது விற்பனைக்கு வந்த பின்னரே வெற்றி பெறுகிறதா இல்லையா என்பதை பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








